| ADDED : ஜூன் 02, 2024 12:21 AM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த கம்மார்பாளையம் -- மனோபுரம் கிராமங்களுக்கு இடையே உள்ள ஆரணி ஆற்றின் குறுக்கே, கடந்த 2017ல் சிறு வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக, நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், 2.85 கோடி ரூபாயில் சிறிய பாலம் அமைக்கப்பட்டது.மனோபுரம், குளத்துமேடு, பெரிய மனோபுரம், கம்மார்பாளையம் கிராமங்களை சேர்ந்த கிராமவாசிகளுக்கு, இந்த பாலம் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.இந்த பாலத்தின் மனோபுரம் பகுதியில் உள்ள அணுகு சாலை சேதமடைந்து கரடு முரடாக உள்ளது. இதில், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து வரும் நிலையில், தற்போது கம்மார்பாளையம் பகுதியில் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்து உள்ளது.கான்கிரீட் கட்டுமானம் சிதைந்து பள்ளமாக மாறி உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் இந்த பள்ளத்தில் சிக்கி தடுமாற்றம் அடைந்து வருகின்றனர்.மனோபுரம், கொளத்துமேடு, பெரிய மனோபுரம் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல இந்த பாலத்தை பயன்படுத்துகின்றனர். கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.எனவே, மனோபுரம் பகுதியில் அணுகு சாலை, கம்மார்பாளையம் பகுதியில் சேதமடைந்துள்ள பாலத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை சீரமைத்து, தொடர்ந்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.