| ADDED : நவ 23, 2025 03:04 AM
கும்மிடிப்பூண்டி: சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், வாகன ஓட்டிகள் எதிர்திசையில் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர். சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஆந்திரா செல்லும் மார்க்கத்தில், கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளம் பஜார் பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து, மகாலிங்கம் நகர் வரையிலான, 600 மீ., தேசிய நெடுஞ்சாலையில், இணைப்பு சாலை பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. பல ஆண்டுகளாக இணைப்பு சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதால், மகாலிங்கம் நகர் மற்றும் அதனருகே உள்ள பெட்ரோல் 'பங்க்'களுக்கு வந்து செல்லும் வாகன ஓட்டிகளால், விபத்து அச்சம் அதிகரித்துள்ளது. இணைப்பு சாலை வசதி இல்லாததால், தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் ஆபத்தாக சென்று வருகின்றனர். 2 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும் என்பதால், வேறு வழியின்றி எதிர்திசையில் செல்வதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனே நடவடிக்கை எடுத்து, விடுபட்ட இணைப்பு சாலை பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.