உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆண்டார்மடம் ஆரணி ஆற்றில் பாலம் அமைப்பதில் மெத்தனம்! சாலையும் சேதம் அடைந்ததால் கிராமவாசிகள் வேதனை

ஆண்டார்மடம் ஆரணி ஆற்றில் பாலம் அமைப்பதில் மெத்தனம்! சாலையும் சேதம் அடைந்ததால் கிராமவாசிகள் வேதனை

பொன்னேரி:வெள்ளப்பெருக்கின்போது அரித்து செல்லப்பட்ட ஆண்டார்மடம் ஆரணி ஆற்று தரைப்பாலம் சீரமைக்கப்படாமல் இருப்பதுடன், உயர்மட்ட பாலம் அமைப்பதிலும் அரசு மெத்தனம் காட்டுவதாக கிராமவாசிகள் வேதனை அடைந்து உள்ளனர்.பொன்னேரி அடுத்த காட்டூர் கிராமத்தில் இருந்த அபிராமபுரம், கடப்பாக்கம், சிறுபழவேற்காடு, ஆண்டார்மடம் கிராமங்கள் வழியாக பழவேற்காடு செல்லும் சாலை உள்ளது.இந்த சாலை ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள கிராமசாலைகள் பிரிவுடன் கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன் இணைக்கப்பட்டது.மேற்கண்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பழவேற்காடு அரசு மருத்துவமனை மற்றும் அத்யாவசிய தேவைகளுக்கு பொன்னேரி செல்ல இந்த சாலை வழியாக பயணித்து வந்தனர்.சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த மீன்வியாபாரிகள், பழவேற்காடு சென்று வருவதற்கு இந்த சாலை பயனுள்ளதாக இருந்தது.சாலை முழுதும் சரளைகற்கள் பெயர்ந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும் போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் உள்ளது. சாலையின் குறுக்கே மழை செல்வதற்காக அமைக்கப்பட்ட சிறுபாலங்களும் சேதம் அடைந்து ஓட்டை உடைசல்களுடன் இருக்கின்றன. பெரும்பாலான இடங்களில் சாலை ஒத்தையடி பாதையாகவே மக்களுக்கு பயன்படுகிறது.சாலை சீரமைக்கப்பட்டு, 10 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் புதுப்பிக்கபடாமல் இருக்கிறது. கடந்த, 2015 மற்றும் கடந்தாண்டு ஏற்பட்ட புயலின்போது, சாலையின் பல்வேறு பகுதிகள் மழைநீரில் அரித்து செல்லப்பட்டன. அவையும் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளன.இந்த சாலையில், ஆண்டார்மடம் கிராமம் அருகே, ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று இருந்தது. கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், வீசிய 'மிக்ஜாம்' புயல் மழையின்போது, ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மேற்கண்ட தரைப்பாலமும், அப்பகுதியில், 100 மீட்டர் தொலைவிற்கு சாலையும் ஆற்று நீரீல் அடித்து செல்லப்பட்டது.இதனால் மேற்கண்ட கிராமவாசிகள் மற்றும் வெளியிடங்களில் இருந்து, பழவேற்காடு செல்பவர்கள் 10கி.மீ., தொலைவு சுற்றி வஞ்சிவாக்கம் வழியாக பயணிக்கின்றனர்.போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை, ஆண்டார்மடத்தில் தரைப்பாலம் துண்டிப்பு ஆகியவற்றால் பெரும் வேதனைக்கு ஆளாகி உள்ள மேற்கண்ட கிராமவாசிகள் நாளை மறுநாள் 3ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளனர். இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:பல ஆண்டுகளாக கரடு முரடான இந்த சாலையில் சிரமத்துடன் பயணிக்கிறோம். அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கும் வழியில்லை. இருசக்கர வாகனங்கள் மட்டுமே இந்த சாலையில் செல்ல முடியும். பல ஆண்டுகளாக சாலை இதே நிலையில்தான் உள்ளது.அதேபோன்று, ஆண்டார்மடம் பகுதியில் ஆற்றில் உள்ள தரைப்பாலம் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்படுகிறது. இதனால் ஆறு மாதங்களுக்கு போக்குவரத்து பாதிக்கிறது. ஒரு வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர்கள் எப்படி சென்று வருவர்.ஒவ்வொரு ஆண்டும் இதே சிரமம் தொடர்வதால், ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி எங்களது கோரிக்கை கிடப்பில் உள்ளது. சாலை சேதம், துண்டிப்பு ஆகியவற்றால் எங்கள் கிராமங்கள் தனி தீவுகளாக உள்ளன. இனியும் காத்திருப்பதில் பயனில்லை என்பதால், போராட்டங்களுக்கு தயாராகி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து கிராம சாலைகள் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:காட்டூர் - ஆண்டார்மடம் இடையேயான சாலை சீரமைப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், எந்த அறிவிப்பும் வெளியிட முடியவில்லை. ஆண்டார்மடத்தில் உயர்மட்ட பாலத்திற்கு முன்மொழிவு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதற்கும் விரைவில் தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ