திருப்பூர் : 'ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள கிராமப்புற ரோடுகளில், வழிப்பறி அதிகரித்து வருகிறது' என, மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.சமீபநாட்களாக, அவிநாசி சேவூர் சுற்றுவட்டார கிராமப்புற ரோடுகளில் சிலர் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர் என, பொதுமக்கள் கூறுகின்றனர். டூவீலரில் செல்லும் ஆண், பெண்களை வழிமறிக்கும் கும்பல், கத்தியை காண்பித்து மிரட்டி, அவர்களிடம் உள்ள பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்து விட்டு, விடுகின்றனர் என, சிலர் கூறுகின்றனர். 'பகல் நேரங்களிலேயே இதுபோன்ற சம்பவம் நடக்கிறது' எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, சிலர் போலீசில் புகார் கொடுக்கின்றனர்; பலர் புகார் கொடுப்பதில்லை.அரசு, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஆசிரியைகள், தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் பெண்கள் பலர், டூவீலரில் சென்று வருகின்றனர். இவர்களை குறி வைக்கும் மர்ம கும்பல், வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். இதனால், 'தங்க நகை அணிந்து வருவதை இயன்றளவு தவிர்த்துக் கொள்ளுங்கள்' என, அவர்கள் பணிபுரியும் நிர்வாகத்தினர் ஆலோசனை கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.எனவே, அந்தந்த எல்லைக்குட்பட்ட ரோடுகளில், போலீசார், தொடர் ரோந்து பணியில் கவனம் செலுத்த வேண்டும்; சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளவர்களை தீர விசாரிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இரவு ரோந்தில் கூடுதல் கவனம்
அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட், மங்கலம் ரோடு, காமராஜ் நகர் உள்ளிட்ட நகர்ப்புறங்களை ஒட்டியை சாலைகளில் இரவு, 11:00 மணிக்கு, போலீசார், வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். டூவீலரில் வருவோரை நிறுத்தி, எங்கிருந்து வருகின்றனர், ெஹல்மெட் அணிந்துள்ளனரா, வாகன ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்கின்றனர்.அதேபோல் , ஊரக சாலைகளிலும் வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும்; சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இரவில் சுற்றித்திரிவோரை விசாரணை செய்தாலே, பெருமளவு குற்றச் சம்பவங்கள் தவிர்க்கப்படும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.