உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராம ஊராட்சிகளில் பணிகள் ஸ்தம்பிப்பு காலியிடங்களால் பெரும் கஷ்டம்

கிராம ஊராட்சிகளில் பணிகள் ஸ்தம்பிப்பு காலியிடங்களால் பெரும் கஷ்டம்

திருப்பூர்;கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலர், 'டேங்க் ஆபரேட்டர்' உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படாததால் பணிகள் ஸ்தம்பிக்கின்றன.மாநிலத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. பொதுவாக, கிராம ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு தனிநபர் குழாய் இணைப்பு என்பது இல்லாமல் இருந்தது. பொது குடிநீர் குழாய் வாயிலாக மட்டுமே, குடியிருப்புவாசிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், தேவைக்கேற்ப நீராதாரம் உள்ள ஓரிரு ஊராட்சிகளில் மட்டுமே, தனி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது.கிராம ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கு தனியாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி, நீர் தேவையில் தன்னிறைவு பெறச் செய்யும் நோக்கில், மத்திய அரசு, ஜல் ஜீவன் திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, கிராம ஊராட்சிகளில் வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.அந்தந்த பகுதியில் உள்ள குடிநீர் திட்டங்களின் வாயிலாக, குடிநீர் வடிகால் வாரியத்தினர் சார்பில் ஊராட்சிகளுக்கு வினியோகிக்கப்படும் நீர், ஊராட்சி குடியிருப்பு பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் நிரப்பப்பட்டு, அதில் இருந்து குடியிருப்புகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.குடிநீர் திட்டங்கள் வாயிலாக வரும் நீரை, மேல்நிலை தொட்டிகளில் நிரப்புவது, அதில் இருந்து குடியிருப்புகள் மற்றும் பொது குடிநீர் குழாய்களுக்கு சீரான இடைவெளியில் தண்ணீர் திறந்து விடுவது உள்ளிட்ட நீர் வினியோகம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள, 'டேங்க் ஆபரேட்டர்' எனப்படும் மின் மோட்டார் இயக்குனர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.ஆனால், கடந்த, 2000ம் ஆண்டுக்கு பின், இப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. எனவே, கிராம ஊராட்சிகளின் சார்பிலேயே தற்காலிகமாக மின் மோட்டார் இயக்குனர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. சம்பளம் குறைவு என்பதால், இப்பணி மேற்கொள்ள ஆட்கள் வருவதில்லை; இதனால், பல ஊராட்சிகளில் டேங்க் ஆபரேட்டர் பற்றாக்குறை உள்ளது. தற்போது, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வினியோகிக்க வேண்டிய நிலையில், 'டேங்க் ஆபரேட்டர்'களின் தேவை அதிகரித்துள்ளது.

25 ஆயிரம் காலிப்பணியிடம்

ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஜல் ஜீவன் திட்டம் வந்த பின், ஊராட்சி மக்களுக்கு தனிநபர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எந்தெந்த சமயத்தில் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் இருந்து, ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை தொட்டிகளுக்கு நீர் வினியோகிக்கப்படும், எந்ததெந்த நேரத்தில், எந்தெந்த வார்டு மக்களுக்கு நீர் திறந்து விட வேண்டும் என்பது போன்ற நீர் வினியோக நடைமுறைகளை, தொடர்ச்சியாக அப்பணியை மேற்கொள்ளும் பம்ப் ஆபரரேட்டர்கள் தான் தெரிந்து வைத்திருப்பர்.கடந்த, 2000ம் ஆண்டுக்கு பின் அப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், 25 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது, தற்காலிக ஊழியர்களால் வினியோகப்பணி மேற்கொள்ளப்பட்டாலும், பல ஊராட்சிகளில் 'டேங்க் ஆபரேட்டர்' பற்றாக்குறை உள்ளது; ஒரு டேங்க் ஆபரேட்டர் கூட இல்லாத ஊராட்சிகள் கூட உள்ளன.டேங்க் ஆபரேட்டர்களுக்கு, அரசின் சார்பில், 4,850 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக டேங்க் ஆபரேட்டர்களுக்கு, 2,500 முதல், 3,000 ரூபாய் வரை மட்டுமே ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பளம் வழங்குகின்றனர். இதனால், அப்பணியை மேற்கொள்ள யாரும் முன்வருவதில்லை. ஊராட்சிகளில் டேங்க் ஆபரேட்டர்களின் தேவை முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அவர்களுக்கான சம்பளத்தையும் உயர்த்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி