உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள்! பயிற்சியளிக்க எதிர்பார்ப்பு

தேங்காயில் மதிப்பு கூட்டு பொருட்கள்! பயிற்சியளிக்க எதிர்பார்ப்பு

உடுமலை:தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சியை, தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக வழங்க, உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் சுற்றுப்பகுதிகளில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தேங்காய், கொப்பரை உற்பத்தியை ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பல்வேறு காரணங்களால், தேங்காய் மற்றும் கொப்பரையின் விலை வெகுவாக குறைந்து, விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.நீண்ட கால பயிராக தென்னை பராமரிக்கப்படுவதால், உடனடியாக மாற்றுச்சாகுபடிக்கும் செல்ல முடியாது.எனவே, இத்தகைய விலை வீழ்ச்சி காலங்களில், நிலைமையை சமாளிக்க, மாற்று வழிகளை அனைத்து தரப்பினரும் யோசிக்கத்துவங்கியுள்ளனர்.அவ்வகையில், தேங்காயிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் விவசாயிகளிடம் ஆர்வம் உள்ளது. ஆனால், போதிய வழிகாட்டுதல் கிடைப்பதில்லை.தென்னை விவசாயிகள் கூறியதாவது: தேங்காய் விலை வீழ்ச்சியால், பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். இச்சூழ்நிலையை சமாளிக்க, மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்புக்கு, முக்கியத்துவம் வழங்க வேண்டும்.மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வழிகாட்டுதல் வழங்குகின்றனர். ஆனால், அனைத்து விதமான பயிற்சிகளும், கேரளா ஆலுவாவிலுள்ள, பயிற்சி மையத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள், அங்கு சென்று, தங்கி பயிற்சி பெற தயக்கம் காட்டுகின்றனர்.எனவே, தென்னை வளர்ச்சி வாரியத்தின் நிபுணர்களைக்கொண்டு, உடுமலையில் இத்தகைய பயிற்சிகளை வழங்க வேண்டும். இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.மத்திய அரசு, தென்னை சாகுபடிக்காக ஒதுக்கீடு செய்யும் நிதியும், பயனுள்ள முறையில் செலவழிக்கப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.

தயாரிப்புகள் ஏராளம்!

தென்னை வளர்ச்சி வாரியம் தேங்காயில் இருந்து மட்டும், 10க்கும் மேற்பட்ட, மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க, வழிகாட்டுதல் வழங்குகிறது. வெர்ஜின் ஆயில், தேங்காய் பால், கிரீம், சிப்ஸ், வினிகர், பிஸ்கட், சாக்லேட் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கலாம்.இத்தகைய பொருட்கள் தயாரிப்புக்காக, அதிகளவு தேங்காய்களை பயன்படுத்தும் போது, உற்பத்தி அதிகரித்தாலும், தேவை கூடுதலாகி விலை சரியாது என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை