பல்லடம்;பல்லடம்- தாராபுரம் ரோடு, நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன.பல்லடம், தாராபுரம் ரோடு, பழனி, மதுரையை இணைக்கிறது. கோவை, நீலகிரியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான வாகனங்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றன.இதுதவிர, ஆண்டுதோறும் நடக்கும் பழனி தைப்பூச விழாவுக்கு, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.வாகன போக்கு வரத்து நிறைந்த இந்த ரோடு, முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 40 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த ஆண்டு துவங்கியது.பல்லடத்தில் இருந்து தாராபுரம் வரையிலான, 43 கி.மீ., துாரமுள்ள இந்த ரோடு, 7 மீ.,ல் இருந்து, 16.2 மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டது. கடந்த ஓராண்டாக விரிவாக்க பணிகள் நடந்து வரும் சூழலில், சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு, அவற்றில், செடிகள் நடும் பணிகளும் நடந்து வருகின்றன.இதன் காரணமாக, விரிவாக்க பணி நிறைவு பெற உள்ளது. இனி, பல்லடம், தாராபுரம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களின் பயணம் எளிதாகும்.விரைவில், பழனி தைப்பூச விழாவில் பங்கேற்க, செல்லும் பக்தர்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளது.ரோடு விரிவாக்கத்தால் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்லாமல் பொறுமையாக பயணிக்க வேண்டும்.