உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஐயா... கிணத்தக் காணோம்... தோண்டத் துவங்கிய மக்கள்!

ஐயா... கிணத்தக் காணோம்... தோண்டத் துவங்கிய மக்கள்!

அவிநாசி : வேலாயுதம்பாளையத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் திருப்பமாக, கிணறும் மூடப்பட்டதாக கூறிய பொதுமக்கள், கிணற்றைத் தோண்ட துவங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சி, ஆதிதிராவிடர் காலனியில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில், காலனி மக்கள் வழிபடும் கன்னிமார், கருப்புசாமி கோவில் உள்ளது. இக்கோவில், பலருக்கும் குலதெய்வமாக உள்ளது.கோவிலுக்கு அருகே வசித்து வரும் அ.தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகி ஒருவர், தனது வீட்டுக்குச் செல்ல வசதியாக, கோவில் வழித்தடத்தை பயன்படுத்தி வந்துள்ளார். கோவில் அருகே நடப்பட்டிருந்த வேல், கோவில் முன்பு போடப்பட்டிருந்த மேற்கூரை ஆகியவற்றை அகற்றி கல் ஒன்றை நட்டு வைத்து பொதுப் பாதையை அடைத்துள்ளார். இதனால், பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.இது குறித்து அவிநாசி தாசில்தாரிடம், 2023 டிச., 8ம் தேதி பொதுமக்கள் திரண்டு கோவில் நிலத்தை மீட்டு தர வேண்டி மனு அளித்தனர். ஆனால், தற்போது வரை மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கோவில் திருவிழா நடைபெற உள்ள நிலையில் கோவில் மேற்கூரையையும் அவர் அகற்றி விட்டதாகவும், கோவில் அருகே இருந்த கிணறையும் மூடிவிட்டதாகவும் கூறி, நேற்று காலை திரண்ட பொதுமக்கள் கிணறு இருந்த இடத்தை மண்ணை தோண்ட துவங்கினர். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சென்ற, டி.எஸ்.பி. சிவகுமார், இன்ஸ்பெக்டர் ராஜவேல், தாசில்தார் மோகனன் ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.அதில், 'வருவாய்த் துறையின் ஆவணத்தில் கிணறு இருப்பதற்கான பதிவுகள் இருந்தால் அதன்படி நடவடிக்கையும், இல்லாவிட்டால், ஆதி திராவிட காலனி மக்கள் மேற்கொண்டு கோர்ட்டை அணுகி, தங்கள் தீர்வை தேடிக் கொள்ளலாம்,' என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால், பொதுமக்கள் கிணறு தோண்டும் பணியை நிறுத்தி விட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை