பட்டப்பகலில் மூதாட்டியிடம் 2 சவரன் செயின் பறிப்பு
வானுார்: பட்டப்பகலில் மூதாட்டியிடம் 2 சவரன் செயின் பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வானுார் அடுத்த இரும்பை ரோடு அச்சரம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அண்ணாமலை கார்டன் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி கஸ்துாரி, 70; இவர், மகன் சிவமணியின் பராமரிப்பில் வசித்து வருகிறார். நேற்று காலை 11:30 மணிக்கு இரும்பை கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இரும்பை ரோடு, அண்ணாமலை கார்டன் சந்திப்பில் வந்த போது, அங்கு பைக்கில் நின்றிருந்த மர்ம ஆசாமிகள் இருவர், மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை பறித்தனர். இதனால் திடுக்கிட்ட அவர் கூச்சலிட்டார். அதற்குள் அந்த ஆசாமிகள், வேகமாக திண்டிவனம் மார்க்கத்தில் சென்று விட்டனர். கஸ்துாரி கொடுத்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.