| ADDED : ஜூன் 16, 2024 04:08 AM
வத்திராயிருப்பு,: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரிக்கு நேரடி பஸ் இயக்க வேண்டுமென வத்திராயிருப்பு மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.வத்திராயிருப்பு தாலுகாவில் கான்சாபுரம், கூமாபட்டி, நெடுங்குளம், வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், புதுப்பட்டியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.இதுவரை சி.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக கல்லூரி செயல்பட்டு வந்ததால், மாணவர்கள் சிரமமின்றி வந்து சென்றனர். ஆனால், பிள்ளையார் குளம் கிராமத்தில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டு, கடந்த கல்வி ஆண்டின் கடைசி வாரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் போதிய அளவில் பஸ் வசதி இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டனர். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 2 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் வத்திராயிருப்பில் இருந்து நேரடியாக கல்லூரிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் வத்திராயிருப்பு தாலுகா மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.அடுத்த வாரம் இரண்டாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் துவங்கவுள்ளதால், வத்திராயிருப்பு தாலுகா கான்சாபுரத்தில் இருந்து புறப்பட்டு நேரடியாக அரசு கலைக் கல்லூரிக்கு செல்லும் வகையில் நேரடி பஸ்கள் இயங்கவேண்டும் என அப்பகுதி மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.