| ADDED : நவ 20, 2025 03:32 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் அரசு பஸ்களில் ஸ்பீக்கர்கள், ஆடியோ சிஸ்டம்களை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டும், விருதுநகர்- காரியாபட்டி அரசு பஸ்களில் ஸ்பீக்கர்கள் வைத்து சினிமா பாடல்கள் ஒலி பரப்ப பட்டுவருகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது அவசியமாகியுள்ளது. மாவட்டத்தில் உள்ள 9 அரசு போக்குவரத்து பணிமனைகளில் மொத்தம் 462 அரசு பஸ்களில் வரையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 418 ஆக உள்ளது. இவற்றில் அதிக ஒலியுடன் பாடல்கள் ஒலிபரப்புவதோடு சில பஸ்களில் கேலி, கிண்டல் செய்வது போலவும், இரட்டை அர்த்தங்களில் ஆபாச பாடல்கள், ஜாதிய ரீதியான பாடல்கள் அதிக சத்தத்துடன் ஒலி பரப்புவதாக மக்களிடம் இருந்து அரசு போக்குவரத்து கழகத்திற்கு புகார்கள் வந்தது. இதனால் அனைத்து அரசு பஸ்களிலும் தன்னிச்சையாக டிரைவர், கண்டக்டர்களால் நிறுவப்பட்ட ஸ்பீக்கர்கள், ஆடியோ சிஸ்டம்களை அகற்ற வேண்டும் என கடந்தாண்டு டிசம்பரில் உத்தரவிடப்பட்டது. ஆனால் தற்போது வரை விருதுநகரில் இருந்து காரியாபட்டி செல்லும் அரசு பஸ்களில் ஸ்பீக்கர்கள், ஆடியோ சிஸ்டம்கள் வைக்கப்பட்டு தொடர்ந்து இரட்டை அர்த்தம், சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலை புதிய அரசு பஸ்களிலும் நீடிப்பதால் பள்ளி, கல்லுாரி மாணவிகள், வேலைக்கு சென்று வரும் பெண்கள் சிரமத்துடன் பயணிக்க வேண்டிய நிலை தொடர்கிறது. விருதுநகர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ்களில் ஆய்வு செய்து தடையை மீறி அமைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள், ஆடியோ சிஸ்டம்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.