சிவகங்கை: பரமக்குடி கலவரத்தன்று, இளையான்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய டி.எஸ்.பி., இளங்கோ, கன்னியாகுமரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், கடந்த 11ம் தேதி, இமானுவேல் சேகரன் நினைவு தின கூட்டத்திற்குச் சென்றவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, துப்பாக்கிச் சூடு நடந்தது. இதைக் கண்டித்து, அன்று மாலை 6 மணிக்கு, ஒரு பிரிவினர், இளையான்குடி போலீஸ் ஸ்டேஷன் அருகே மறியலில் ஈடுபட்டனர். அங்கு, பாதுகாப்பில் இருந்த டி.எஸ்.பி., இளங்கோ, பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தகராறு ஏற்பட்டதால், கூட்டத்தைக் கலைக்க, டி.எஸ்.பி., துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பிளஸ் 2 மாணவர் ஆனந்த்,16, காயமடைந்தார். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஐகோர்ட் உத்தரவிட்டது.
'சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், செப்., 22 முதல் 30 வரை, நேரடியாக ஆர்.டி.ஓ., துர்க்கா மூர்த்தியிடம் சாட்சியம் அளிக்கலாம்' என, கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார். இந்நிலையில், இளையான்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய டி.எஸ்.பி., இளங்கோ, கன்னியாகுமரி மாவட்ட குற்றப் பதிவேட்டு கூடத்திற்கு, மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை நகரில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த எம்.ஸ்டாலின், சிவகங்கைக்கு மாற்றப்பட்டார். இதையறிந்த டி.எஸ்.பி., இளங்கோவிற்கு, நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.