உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டு எண்ணும் மையத்தை மாற்றக்கோரி வழக்கு தேர்தல் கமிஷனுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஓட்டு எண்ணும் மையத்தை மாற்றக்கோரி வழக்கு தேர்தல் கமிஷனுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை:மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைப்பதற்கு பதிலாக, வேறு இடத்திற்கு மாற்றக் கோரிய வழக்கில், தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் கவுன்சில் தலைவர் ராஜ் முகமது உள்ளிட்ட ஆறு நிர்வாகிகள் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிக்கிறோம். சட்டசபை, லோக்சபா தேர்தலின்போது, ஓட்டு எண்ணிக்கை மையமாக, இக்கல்லுாரியை இந்திய தேர்தல் கமிஷன் பயன்படுத்துகிறது; மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களும் இங்கு, பாதுகாத்து வைக்கப்படுகின்றன.தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை, இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.கல்லுாரியின் நிர்வாகப் பிரிவு அலுவலகம், உடற்கூறியல், உடலியங்கியல், உயிர்வேதியியல் துறை வகுப்பறைகள், தேர்தல் பணிக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், இவ்வறைகளுக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.இதன் காரணமாக, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.பாதுகாப்பு கெடுபிடிகளால், மாணவர்கள், அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கச் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.வரும், லோக்சபா தேர்தலின்போது, மருத்துவக் கல்லுாரிக்கு பதிலாக, வேறு இடத்திற்கு, ஓட்டு எண்ணிக்கை மையத்தை மாற்ற இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர், தமிழக சுகாதாரத்துறை செயலர், மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பு கூறியதாவது:கலெக்டர் அலுவலகம் அருகே மருத்துவக் கல்லுாரி உள்ளது. அங்கு அனைத்து வசதிகளும் உள்ளன. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. லோக்சபா தேர்தலின்போது மருத்துவக் கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வேண்டுமானால் மனுதாரர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். இவ்வாறு அரசு தரப்பு தெரிவித்தது.நீதிபதிகள் இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஜன., 23க்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை