கொரோனா வைரஸ் எந்த விதத்தில் வேண்டுமென்றாலும் வீட்டிற்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. மளிகை கடை சென்றாலும் அங்கு வாங்கும் பொருட்களில் வைரஸ் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு தான் வாங்க வேண்டும். கைகளில் சானிடைசர் வைத்து துடைத்துக் கொண்டு, நாம் கொண்டு செல்லும் பையில் சானிடைசரை தெளித்துக் கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும்.எல்லா பொருட்கள் மீதும் சளி, இருமலுடன் சிலர் தொட்டு இருக்கலாம். மூக்கு, வாயை தொட்ட கைகளோடு பொருட்களை தொட்டு இருக்கலாம். அவற்றில் கொரோனா வைரஸ் 72 மணி நேரம் வரை உயிருடன் இருக்க வாய்ப்பு உண்டு. கடையில் நமக்கு தேவைப்படும் பொருட்களை மட்டும் தொட வேண்டும். அங்கு இருக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்து பார்க்கக்கூடாது. அருகில் யாராவது வந்தால் சமூக இடைவெளியுடன் ஒதுங்க வேண்டும்; அப்படி இல்லையென்றால் தைரியமாக, 'நான் பொருட்களை எடுத்துச் சென்ற பிறகு நீங்கள் எடுத்துச் செல்லுங்கள்' என்று சொல்ல வேண்டும்.
பணம் செலுத்தும் போது
கேஷ் கவுன்டரில் கிரெடிட் கார்டு கொடுக்கும் போதும் சானிடைசர் ஸ்பிரே பயன்படுத்திய பின்பு உபயோகிக்கவும். நம்பர் அழுத்தும் போதும் சானிடைசர் பயன்படுத்திய பிறகு தான் அழுத்த வேண்டும். அழுத்திய பின்பும் சானிடைசர் உபயோகிக்க வேண்டும். ஏ.டி.எம்.,ல் பணம் எடுத்தாலும் இதே முறையை பின்பற்ற வேண்டும்.வீட்டிற்கு வந்த பிறகு, பொருட்களை ஒரு வாளியில் இட்டு 72 மணி நேரம் வரை வெளியே வைக்க வேண்டும். முடிந்தால் சூரிய ஒளியில் வைத்த பின்பு பயன்படுத்தலாம். காய்கறிகளை சாதாரண சோப்பில் 2 நிமிடம் வரை மூழ்க வைக்க வேண்டும். பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். நன்றாக உலர்ந்த பின்பு குளிர்சாதன பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம். யாருமே இந்த முறைகளை கடைபிடிப்பது இல்லை.
சந்தேகத்துடன் இருங்கள்
கடைக்கு செல்லும் போதோ, வெளியே நடந்து செல்லும்போதோ யாரை பார்த்தாலும் 'கொரோனா தொற்று இருக்கும்' என்ற சந்தேகத்தில் நாம் செயல்பட வேண்டும். அவசியம் இல்லாமல் எதையும் தொடக்கூடாது. பொது இடங்களில் சுவர்களில் சாய்ந்து நிற்கக் கூடாது. வங்கிகளில் பணம் வாங்கினால் சானிடைசர் வைத்து அதன் மீது துடைத்துவிட்டு தான் வாங்க வேண்டும்.கொரோனா வைரஸ் நாம் அணியும் உடைகளில் உள்ள இடுக்குகளில் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இருந்தாலும் வெளியே சென்றுவிட்டு வந்தவுடன் அந்த உடைகளை வெயிலில் காய வைத்து, சோப்பு தண்ணீரில் ஊற வைத்து துவைத்து வெயிலில் காய வைத்த பின்பு உபயோகிக்கலாம்.
நரம்பு மண்டலத்தை தாக்குமா
கொரோனா போன்ற வைரஸ்கள் மூளையை தாக்கும் தன்மை உடையவை. மூளைக்கு போகும் ரத்தக் குழாயை அடைத்து பக்கவாதத்தை ஏற்படுத்தும் தன்மை உடையது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் மூளை, இருதயம், சிறுநீரகத்தில் ரத்தக்குழாய்களில் உள்ள ரத்தம் உறையும். மூளையில் உள்ள சைனஸ் என்னும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.- டாக்டர் வி. நாகராஜன்மூளை நரம்பியல் சிகிச்சை நிபுணர்மதுரைnag9999@gmail.com