உள்ளூர் செய்திகள்

மாத்தியோசி:

சிகரெட், புகையிலை, மது ஆகியவற்றைப் பயன்படுத்தினால் தான் புற்றுநோய் வரும் எனச் சொல்லப்படு கிறது. எனவே, புகையிலையைத் தவிருங்கள்' என, பொதுவாக அறிவுரை வழங்கப்படுகிறது. ஆனால், உண்மை நிலவரம் என்ன? ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கும் நோய் வருகிறது. காரணம் என்ன?

அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத் தலைவர் டாக்டர் சாந்தா, அண்மையில் ஒரு விழாவில் பேசும் போது, ''தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் அதிகரிக்கும் வேகம் 44 சதவீதமாக இருக்கும்'' என எச்சரித்துள்ளார்.தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருகிறது.

* உலக அளவில், 1 லட்சம் பேரில், 120 பேருக்கு புற்றுநோய் இருப்பது, தேசிய புற்றுநோய் பதிவக ஆய்வில் தெரிய வந்துள்ளது.* இந்தியாவில் ஆண்டுதோறும், 8 லட்சம் பேர், புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.*முற்றிய நிலையிலே நோய் கண்டுபிடிக்கப்படுவதால், நோயால் பாதிக்கப்படுவோரில், 80 சதவீதம் பேர் மரணமடைகின்றனர்.*ஆண்களுக்கு நுரையீரல், உணவுக் குழாய், இரைப்பை, வாய் போன்ற உறுப்புகளிலும், பெண்களுக்கு கர்ப்பப் பை வாய், மார்பகம் போன்ற உறுப்புகளிலும், அதிக அளவில் புற்றுநோய் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.* சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்பது, ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட விஷயம் தான். ஆனால், தீய பழக்கங்கள் ஏதும் இல்லாத, நல்ல ஆரோக்கியமாக உள்ள பலர், புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவது, மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.* மரபணு குறைபாடு உள்ளிட்ட பாரம்பரிய காரணங்களால் மட்டுமே புற்றுநோய் வருகிறது என்ற கருத்தில், இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய காரணங்களை விட, இன்றைய வாழ்க்கைச் சூழல் தான், புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

* பரபரப்பான வாழ்க்கை முறை, ரசாயனம் கலந்த உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம், தொற்றுக் கிருமிகள் ஆகியவை புற்றுநோய் அதிகரிக்க முக்கிய காரணங்கள் என, சமீபத்திய ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

சென்னை புற்றுநோய் சிகிச்சை மையத்தைச் சேர்ந்த டாக்டர் விஜயா சுவாமிநாதன் (Mச்ஞீணூச்ண் ஞிச்ணஞிஞுணூ ஞிச்ணூஞு) இது குறித்து கூறியதாவது: பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஆண்களுக்கு நுரையீரல் புற்று நோயும் அதிகம் காணப்படுகிறது. இதற்கு முன், பெண்களுக்கு கர்ப்பப் பை வாய் (இஞுணூதிடிது) புற்றுநோய் அதிகமாக இருந்தது. இப்போது, அதுகுறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், கர்ப்பப் பை வாய் புற்று நோய் குறைந்துள்ளது. ஆண் புற்றுநோயாளிகளில் 50 சதவீதம் பேர் புகையிலை பழக்கத்தால் நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இயற்கைக்கு மாறான உணவை, நாம் அன்றாடம் சாப்பிடுகிறோம். நம் உணவில் மறைமுகமாக கலந்துள்ள நச்சு, ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. உணவு தானியங்களை விளைவிக்க, ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்துவது, புற்றுநோய் ஏற்பட ஒரு காரணமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஓட்டல்கள், 'பாஸ்ட் புட்' உணவு வகைகளில் சேர்க்கப்படும், விதவிதமான வண்ணப் பொடிகளில் உள்ள ரசாயனமும், புற்றுக்கு தீனி போடுகின்றன. மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால் நாளடைவில் நுரையீரலை, புற்று நோய் தாக்குகிறது.

நமது உடலில், நீண்ட நாள் இருக்கும் வைரஸ், பாக்டீரியாக்களும், புற்று நோய்க்கு காரணமாக உள்ளன. வயிற்றில் தொற்றும்,'எச் பைலோரி' பாக்டீரியாவை அகற்ற, உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால், குடல் புற்றுநோய் ஏற்படும். 'ஹெப்பாடைட்டிஸ் பி' வைரஸ் கல்லீரல் புற்று நோயை ஏற்படுத்துகிறது. புகைப் பழக்கம் உள்ளவருக்கு மட்டுமின்றி, அந்த புகையை சுவாசிக்கும் அருகில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களுக்கு நாளடைவில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. மதுப் பழக்கத்தால் வயிறு தொடர்பான புற்று நோய்கள் வருகின்றன. எனவே சீரான உணவுப் பழக்கம், சிறந்த வாழ்க்கை முறை, உடற்பயிற்சி போன்றவற்றால், புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

எல்லா கட்டியும் புற்று அல்ல: சினைப் பையின் மேற்புறத்தில் சிறு சிறு நீர் கட்டிகள், சதைக் கட்டிகள் உருவாகுவது சகஜம். எல்லா கட்டிகளும் புற்றுக் கட்டி அல்ல. டாக்டர்கள் சிலர், சாதாரண கட்டிகள் புற்றாக மாற வாய்ப்புள்ளது என அச்சுறுத்தி, சினைப் பையை அகற்றி விடுகின்றனர். சினைப் பையை அகற்றுவதால் பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பு இல்லாமல் அதிக எடை, முதுகு வலி, எலும்பு தேய்வு, மூட்டு நோய்கள் ஏற்படும். புற்று கட்டி என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே சினைப் பையை அகற்ற வேண்டும்.

கருத்தடை மாத்திரைகள் காக்கும்: கருத்தடை மாத்திரைகள், தொடர்ந்து எடுத்து கொள்பவர்களுக்கு சினைப் பை புற்று நோய் வருவது மிகவும் குறைவு. கருத்தடை மாத்திரைகள் சாப்பிடும்போது, சினைப் பைக்கு ஓய்வு கொடுக்கப்படுகிறது. இதுபோல் அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கும், சினைப் பை புற்று வருவது குறைவு. கர்ப்ப காலத்திலும், சினைப் பை ஓய்வு எடுக்கிறது. சினைப் பையைத் தூண்டும் சிகிச்சை மேற்கொண்டால், புற்று நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !