மாத்தியோசி:
பார்வையை பறிக்கும் சர்க்கரை நோய்
இந்தியாவில் சர்க்கரை நோய் ஒரு மிகப் பெரிய சுகாதார பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சர்வதேச சர்க்கரை நோய் மருத்துவ கூட்டமைப்பின் கணிப்புப்படி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 4 கோடி. இது, வரும் 2025ம் ஆண்டில் 7 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகிலுள்ள சர்க்கரை நோயாளிகளில் 5ல் ஒருவர் இந்தியர்.
சர்க்கரை நோய் வந்தால் உடலிலுள்ள ரத்தக் குழாய்களை பாதிக்கும். கண் உட்பட பல உறுப்புகளில் பிரச்னைகளை ஏற்படுத்தும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, கண்புரை நோய், க்ளூகோமா மற்றும் விழித்திரை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். விழித்திரையில் சிறிய ரத்தக் குழாய்களும், நரம்புகளும் பாதிக்கப்படுவதால், கண் முன் உள்ள உருவம் குறித்த தகவலை, நரம்புகளால் மூளைக்கு கொண்டு செல்ல முடியாது. இதனால் பார்வை இழப்பு ஏற்படும். இந்நோய் பாதித்த சிலருக்கு, ரத்தக் குழாய்கள் வீங்கி, திரவம் கசியத் தொடங்கும். வேறு சிலருக்கு விழித்திரையின் மேல் பகுதியில், இயற்கைக்கு மாறாக புதிய ரத்தக் குழாய்கள் உருவாகி, பார்வையை பாதிக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரை பாதிக்கப்படுவது குறித்து, ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. உரிய நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை பெறாவிட்டால், பார்வை பறிபோவதை தடுக்க முடியாது.
அறிகுறிகள்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தாத நிலையில், மங்கலான பார்வை, திடீரென பார்வை குறைதல், கண்ணில் கரும் புள்ளிகள் தெரிதல், கண் கூசுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இவை, விழித்திரை பாதிப்பு அடைந்துள்ளதை உணர்த்தும். நோயின் பாதிப்பு அதிகரித்து, விழித்திரையின் மையப் பகுதியில் (மாக்யுலா) திரவம் கசியும். இதனால் மாக்யுலா வீக்கமடையும். இதனால், பார்வை மங்கலாகும். இதை மாக்யுலா எடிமா என்கிறோம். சர்க்கரை நோயால் விழித்திரை பாதிப்பு உள்ளவர்களுக்கு, எந்த கட்டத்திலும் இந்த நிலை ஏற்படலாம். எனவே, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கண்களை பரிசோதித்து கொள்வது அவசியம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பது மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்வதன் மூலம், விழித்திரை பாதிப்பு நோய் வருவதை தடுக்கலாம். விழித்திரை கண் பரிசோதனை செய்து கொள்வதன் வாயிலாக, நம் பார்வையை பாதுகாத்து கொள்ள முடியும்.
பரிசோதனைகள்: பண்டஸ் ப்ளோரசென்ஸ் ஆஞ்சியோகிராபி: இப்பரிசோதனை மூலம் விழித்திரை ரத்தக் குழாய்களின் நிலையை அறிந்து கொள்ளலாம். கையில் உள்ள ரத்த நாளத்தின் வழியே ப்ளோரசென்ட் சிறப்பு மையை செலுத்தி, இச்சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மை செலுத்தப்பட்ட சில நொடிகளில், கண்ணில் உள்ள ரத்த நாளங்களில், இந்த மை பரவுகிறது. மை இல்லாத பகுதிகளில், போதுமான ரத்த ஓட்டம் இல்லை என தெரிந்து கொள்ளலாம். ஒரே இடத்தில் அதிக மை இருந்தால், அங்கு ரத்த கசிவு உள்ளதை அறிய முடியும். விழித்திரை நரம்புகளின் நிலை குறித்து அறிந்து கொள்ள, 'ஆப்டிக்கல் கோஹரன்ஸ் டோமோகிராபி' பரிசோதனை உதவி புரிகிறது. விழித்திரை நரம்புகள் பாதிக்கப்பட்டால், கண் முன் உள்ள உருவங்கள் குறித்த தகவல்கள் மூளைக்கு எடுத்துச் செல்லப்படாது. எனவே, சர்க்கரை நோயாளிகள், நரம்புகளில் பாதிப்புள்ளதா என, ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதிப்பது அவசியம்.டாக்டர் அத்தியா அகர்வால், இயக்குனர், அகர்வால் மருத்துவமனை, சென்னை.
தசை வலிமைக்கான 'டெஸ்ட்!':
இரண்டு கால்களை அகல விரித்து, நாற்காலியில் உட்கார்ந்து எழுவது போல, மெதுவாக திரும்ப திரும்பச் செய்ய வேண்டும். இந்த உடற்பயிற்சியை, தொடர்ந்து 90 வினாடிகளுக்கு செய்ய முடிந்தால், உங்கள் தசை வலிமை அபாரம்; 60 வினாடி எனில் ஓகே; 30 வினாடி எனில், மோசம் என்றே அர்த்தம்.
முயன்று பாருங்களேன்! :
இந்த உடற்பயிற்சியானது, தொடை மற்றும் பிட்டம் பகுதியில் உள்ள தசை வலிமையை கண்டறிய உதவுகிறது. இந்த தசைகள் நல்ல நிலையில் இருந்தால், மற்ற தசை களும் வலிமையுடையதாகவே இருக்கும். இதையே உடற்பயிற்சியாகச் செய்து தசைகளை வலிமைப்படுத்திக் கொள்ளலாம்.