உள்ளூர் செய்திகள்

பூ போன்ற விரல் வேண்டுமா?

வீட்டு வேலை, வாகனம் ஓட்டுவது, விரல் ஒடிய கீ-போர்டில் தட்டுவது போன்ற இயக்கங்களால், பெண்களின் கைகள் சொரசொரப்பாகவும், கடினமாகவும் மாறிவிடுகின்றன. சமயங்களில் காய்த்துப்போவதும் உண்டு. கைகள் சொரசொரப்பாக இருப்பதனால், கைகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. கைகளால் முகத்தைத் தேய்த்துக் கழுவும்போது, கண்களுக்குத் தெரியாத மெல்லிய கோடுகள் முகத்தில் உருவாகும். இதனால் நாளடைவில் முகம் தொய்வடையக்கூடும். எனவே, விரல்களின் மென்மையை காக்க வேண்டியது அவசியம். தினமும் இரவு ஒரு பாத்திரத்தில், கைபொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் கிளிசரின், ஒரு ஸ்பூன் எப்சம் உப்பு (மெக்னீசியம் சல்பேட்) சேர்த்து, தண்ணீர் நன்கு ஆறும்வரை கைகளை அதில் மூழ்கும்படி வைத்திருக்கவும். இதனால் கைகள் மென்மையாவதுடன், கை வலி நீங்கி ரிலாக்ஸ் ஆகும். பின்னர் கைகளைத் துடைத்துவிட்டு, அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் தேன் எடுத்து தேய்த்துக்கொண்டு, கைகளை சர்க்கரையில் புரட்டவும். கை முழுவதும் சர்க்கரை ஒட்டிக்கொள்ளும். இப்போது இரண்டு கைகளையும் நன்கு சூடுபறக்கும் வரை தேய்க்கவும். இதனால் சர்க்கரை கரையும். சர்க்கரையில் கிளைகாலிக் ஆசிட் இருப்பதால், இது கைகளில் உள்ள இறந்த செல்களை நீக்குவதுடன், சுருக்கங்களைப் போக்கி மலர்ச்சியாக்கும். கைகள் காய்த்துப்போக ஆரம்பிக்கும், காலகட்டத்திலேயே தினசரி இந்த சிகிச்சையைத் தொடர்ந்தால், மென்மை மீட்கப்படுவதுடன், தொடர்ந்து மிருதுவாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !