தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 45
யட்சன்யட்சனின் குரலைத் தொடர்ந்து தர்மன் தலைநிமிர்ந்து நாலாபுறமும் பார்த்தான். குரல் மட்டும் ஒலித்தது. ஆனால் யட்சன் காட்சி தரவில்லை. ''ஏய் அசரீரி... யார் நீ மறைந்திருந்து குரல் கொடுக்கும் நீ ஒரு வீரனா... மாவீரர்கள் என் தம்பிகள். அவர்கள் இறந்து கிடக்க நீ தான் காரணமா... என்னால் நம்ப முடியவில்லை. என் தம்பிகள் எப்படி இறந்தனர்? நிச்சயம் போர் செய்து அதில் தோற்று இறந்து போக வாய்ப்பே இல்லை. ஏதோ சதி செய்து கொன்றிருக்கிறாய்'' என்று தர்மன் உரத்த குரலில் கூறவும் யட்சன் வேகமாய் பதில் கூறலானான்.''குந்தி நந்தனா! என் பேச்சைக் கேட்காமல் பொய்கை நீரை அருந்தி இவர்கள் உயிர் விட்டனர். இது விஷப் பொய்கை. இதன் காவல்காரன் நான். என் கேள்விகளுக்கு சரியான பதிலைக் கூறுவோருக்கு இது நன்னீராகும். இல்லாவிட்டால் இது அவர்களுக்கு எமநீராகும்'' யட்சனின் பதில் தர்மனை சினத்திற்குள்ளாக்கியது. எப்போதும் எதிலும் பொறுமையும் சாந்தமும் கொண்டு திகழ்ந்திடும் தர்மன் தம்பியர்களின் பிரேதங்களைப் பார்த்து பதைத்தவனாக, ''இது அநீதி! வனத்து நீர்ப்பொய்கை என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. வருணன் மழையாய் பொழிந்து தரும் நீரை பூமித் தாயானவள் தன் மடிகளில் தேக்கி வைத்து உயிர்கள் உண்ணத் தருகிறாள். அதை விஷமாக்கி உன் வசத்தில் வைத்துக் கொண்டு நீ கேள்விகள் கேட்பதும் பதில் கூறினால் தான் நீர் அருந்த அனுமதிப்பேன் என்பதும் தர்மம் அல்ல'' என்றான்.''தர்மம் பற்றி பேச இது நேரமல்ல தர்மா... சென்ற காலம், சென்ற உயிர், சென்ற மானம் ஆகியவை திரும்புவதில்லை. என்னோடு நீ விவாதிப்பது போல் உன் தம்பிகள் விவாதித்திருந்தால், பொறுமை காத்திருந்தால் இப்படி ஆகியிருக்காது. அவர்கள் என் குரலை பொருட்படுத்தாமல் நீர் அருந்தி உயிரை விட்டார்கள். ''நீ என்ன செய்யப் போகிறாய் அதை முதலில் சொல்''''நான் மறைந்திருப்பதே எனக்கும் நல்லது. உனக்கும் நல்லது. ஆயினும் உனக்காக நான் நேரில் தோன்றுவேன்'' என்ற மறுநொடியே பொய்கையின் கரையில் பனைமர உயரத்திற்கு பருத்த தேகம், தினவெடுத்த தோள்கள், விரிந்த விழிகள், விரல்களில் கூரிய நகங்கள், கோரை போல் வளர்ந்த புருவம் என பயங்கர தோற்றமுடன் ஒரு உருவம் காட்சியளித்தது. தர்மன் ஒரு விநாடி துணுக்குற்றான். ''யட்சன் என்றாயே... ஆனால் பூதம் போல் காட்சி தருகிறாயே. யட்சர்கள் பேரழகர்கள் ஆயிற்றே''''எங்கள் அழகை வியக்கும் நீ முதலில் என் கேள்விகளுக்கு பதில் கூறு''''உனக்கு பதில் கூறி இந்த நீரைக் குடிக்க நான் விரும்பவில்லை. இந்த விஷத் தண்ணீரால் என் உயிரும் போகட்டும். என் தம்பிகள் இல்லாத உலகில் எனக்கு மட்டும் எதற்கு வாழ்வு?'' என வெறுப்புடன் பேசிய தர்மன் பொய்கையில் இறங்கப் போனான்.''குந்தியின் மைந்தனே! உன் தம்பியர் செய்த தவறை நீயும் செய்கிறாயே... என் கேள்விகளை சந்திக்க அவ்வளவு பயமா உனக்கு? பாண்டவர்கள் அறிவொளி இல்லாத கோழைகள். அதனால் விஷமருந்தி மாண்டார்கள் என்று நாளைய வரலாறு உங்களைப் பற்றி பேசுமே... பரவாயில்லையா... உங்களை ஐவரையும் பிணமாகக் காணும் நிலையில் உங்களை நம்பி தன்னை ஒப்படைத்த திரவுபதியின் நிலையை எண்ணிப் பார்த்தாயா...''''ஏ... யட்சனே... நீ எங்களை என்னவென்று எண்ணிக் கொண்டிருக்கிறாய். பதில் தெரியாமல் நாங்கள் இல்லை. அதை உன்னிடம் எதற்கு கூற வேண்டும்? எங்களைக் கேள்வி கேட்டு பரிசோதிக்க நீ யார்?'' ''நான் இந்த பொய்கையின் காவலன். இது என் ஆளுமைக்கு உட்பட்ட பொய்கை. உடன்பட மறுத்தால் நீயும் குடித்து இறந்து போ. போர்க்களங்களில் பல்லாயிரம் வீரர்களை ஓட ஓட விரட்டியவர்கள் ஒரு யட்சனிடம் தோற்றுப் பிணமானார்கள் என்று வரலாறு கூறட்டும்... போ... கோழை போல அருந்திச் சாகு'' யட்சன் தர்மனின் சுயமரியாதையைத் துாண்டுவது போல் சொன்ன சொற்கள் தர்மனை உலுக்கியது. ''யட்சனே! நீ என்னை உன் கேள்விகளுக்கு பதில் கூறும்படி மறைமுகமாகத் துாண்டுகிறாய். நான் பதில்களைக் கூறுவதால் ஆகப் போவதென்ன?''''விவாதத்தை விடு. என் கேள்விகளுக்கு உன்னால் சரியான பதில் கூற முடியுமா... முடியாதா...''''முடியாது என்பது எங்கள் வரலாற்றிலேயே கிடையாது. கேள்விகளைக் கேள். உனக்கான பதில்களைக் கூறி விட்டு பிறகு உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்''''நல்லது... இது தான் பேராண்மைக்கும் அழகு. சரி என் கேள்விகளை நான் தொடங்குகிறேன். சரியான பதில் கூறினால் அடுத்த கேள்விக்குச் செல்வேன். எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறி விட்டால் நீர் அருந்தி தாகம் தீர்த்துக் கொள்வது மட்டுமல்ல. உனது ஒரு விருப்பத்தையும் நிறைவேற்றுவேன். கேள்விகளைக் கேட்கட்டுமா''''ம்... கேள்''''எவன் சூரியனை உதிக்கச் செய்கிறான்''''பிரம்மம்''''சரியான பதில்... எவர் சூரியனுக்கு இருபுறமும் சஞ்சரிக்கின்றனர்''''தேவர்கள்''''இதுவும் சரியான பதில். எது சூரியன் அஸ்தமிக்க காரணம்?''''தர்மமே சூரியனை அஸ்தமிக்க வைக்கிறது''''எதில் அவன் நிலைபெற்றிருக்கிறான்''''சத்தியத்தில்''''எதனால் மனிதன் பிராமணன் ஆகிறான்''''வேதம் ஓதுவதால்''''எதனால் புகழ் பெறுகிறான்''''தவத்தால்''''எதனால் ஒரு மனிதன் துணையுள்ளவனாகிறான்'''' தைரியத்தால்''''எதனால் ஒருவன் புத்திமான் ஆகிறான்''''பெரியோர் காட்டிய வழியில் நடப்பதால்''''பிராமணர்களுக்கு தேவதன்மை எது''''வேத பாராயணம் செய்வது''''பிராமணர்களின் தர்மம் எது''''தவமே தர்மம்'''' பிராமணர்களுக்கான மனிதத்தன்மை எது''''மரணம்''''பிராமணர்களுக்கு அதர்மம் எது''''பிறரை நிந்திப்பது அதர்மம்''''சரி... பிராமணரைத் தொடர்ந்து சத்திரியருக்கு வருகிறேன். இவர்களுக்கான தேவதன்மை எது''''பாணங்களும், அஸ்திரங்களுமே இவர்களின் தேவதன்மை''''சத்ரிய தர்மம் எது''''யக்ஞம் புரிவதே இவர்களின் தர்மம்''''இவர்களின் மானிடத்தன்மை எது''''பயமே இவர்களின் மானிடத்தன்மை'''' இவர்களுக்கான அதர்மம் எது''''அடைக்கலம் புகுபவர்களை, துன்பப்படுபவர்களை இவர்கள் கைவிடுவது அதர்மம்''''சரி... இனி பொதுவான கேள்விகள். யக்ஞத்திற்குரிய வேதம் எது''''யஜூர் வேதம்''''யக்ஞம் எதற்காக செய்யப்படுகிறது''''தேவர்கள் பசியாற''''யக்ஞத்தின் முக்கிய இலக்கு''''உயிர்''''யக்ஞத்தின் முக்கிய யஜுஸ் எது''''மனம்''''யக்ஞம் எதை மீறாமல் உள்ளது''''வேதத்தை''''பயிரிடுபவருக்கு எது சிறந்தது''''மழை''''விதைப்பவர்களுக்கு எது சிறந்தது''''விதையே!''--தொடரும்இந்திரா செளந்தர்ராஜன் n98947 23450