உள்ளூர் செய்திகள்

படுத்தா எழுந்திருக்க மாட்டா!

வில்லியனுரைச் சேர்ந்த முதியவர் எழில்வளவன், தன் மகனுக்குப் பெண் தேடிப் புறப்பட்டார்.புவனகிரியை அடைந்த அவர் அவ்வூர்ப் பெரியவர்களைச் சந்தித்தார்.''நான் வில்லியனுரிலிருந்து வருகிறேன். என் ஒரே மகனுக்கு நல்ல மணமகள் தேடி இங்கு வந்தேன்,'' என்றார்.''திருமணப் பருவத்தில் நிறைய பெண்கள் இந்த ஊரில் இருக்கின்றனர். உங்கள் மகனைப் பற்றிச் சொல்லுங்கள். எந்த பெண் பொருத்தமாக இருப்பாள் என்று நாங்கள் சொல்கிறோம். பிறகு பெண் பேசலாம்,'' என்றார்கள்.''எனக்குச் செல்வத்திற்குக் குறைவே இல்லை. என் மகன் பார்க்க அழகாக இருப்பான்; படித்தும் இருக்கிறான். ஆனால், அவன் உட்கார்ந்து விட்டால் எழுந்திருக்க மாட்டான்,'' என்றார் எழில்வளவன்.''உங்கள் மகன் யாரையும் மதிக்க மாட்டான்; மரியாதை தர மாட்டான். அதனால்தான் யார் வந்தாலும் எழுந்திருக்க மாட்டானா? மரியாதை தெரியாத அவனுக்கு இங்கே யாரும் பெண் தர மாட்டார்கள். இடத்தை காலி செய்யுங்கள்,'' என்று கோபத்துடன் சொன்னார் இன்னொருவர்.எழில்வளவன் வருத்தத்துடன், அங்கிருந்து புறப்பட்டு இன்னொரு ஊரை அடைந்தார்.அவரின் மகனின் இயல்பை அந்த ஊர்ப் பெரியவர்களும் கேள்விப்பட்டனர்.அங்கும் அவர் மகனுக்கு யாரும் பெண் தரவில்லை. இப்படியே பல ஊர்கள் சென்ற அவர் ஜெய்ப்பூரை அடைந்தார்.அங்கிருந்த பெரியவர்களிடம், தன் மகனின் இயல்பைப் பற்றிச் சொன்னார் அவர்.அவர்களில் ஒருவர், ''எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். நல்ல மூக்கும், முழியுமாக அழகாக இருப்பாள். ஆனால், அவள் படுத்தால் எழுந்திருக்க மாட்டாள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள். இருவருக்கும் திருமணம் செய்துவிடலாம்,'' என்றார்.''இப்படிப்பட்ட பொருத்தமான பெண்ணைத்தான் என் மகனுக்கு தேடிக் கொண்டிருந்தேன். என் நல்ல நேரம் உங்களைச் சந்தித்தேன். என் மகனுக்கும் உங்கள் மகளுக்கும் உடனே திருமணம் செய்து விடலாம்,'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் எழில்வளவன்.உட்கார்ந்தால் எழுந்திருக்காத இளைஞனுக்கும், படுத்தால் எழுந்திருக்காத பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.''மரியாதை தெரியாத மாப்பிள்ளைக்கும், சோம்பேறிப் பெண்ணுக்கும் திருமணமா?'' என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.ஆனால், அவர்கள் இருவரும் எல்லாரும் போற்றும்படி சிறப்பாக வாழ்க்கை நடத்தினர்.எதனால் அந்தப் பெண்ணைப் படுத்தால் எழுந்திருக்காத பெண் என்றும், அவனை உட்கார்ந்தால் எழுந்திருக்காதவன் என்றும் சொன்னார்கள் தெரியுமா உங்களுக்கு? ரகசியத்தை சொல்லுங்க குட்டீஸ்!விடை: படுத்தால் எழுந்திருக்காத பெண் என்றால் அவளைச் சோம்பேறி என்று எண்ணக்கூடாது. பொழுது சாய்ந்த மாலை நேரத்தில் ஒரு பெண் சோம்பலாகப் படுத்திருந்தால் கணவன் வந்ததும் எழுந்திருக்க வேண்டும். இது போல மாமனார் வந்தாலும், வேறு யார் வந்தாலும், ஒவ்வொரு முறையும் படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.இரவு எல்லாருக்கும் உணவு பரிமாறிய பின் அவள் படுத்தால் எழுந்திருக்க வேண்டிய தேவையே இல்லை. பொறுப்புள்ள பெண் என்ற பொருளில்தான் படுத்தால் எழுந்திருக்காத பெண் என்றார் அவளது தந்தை.ஒருவன் தரையில் பணிவாக அமர்ந்திருந்தால் தந்தை, மாமன் போன்ற பெரியவர்கள் வந்தால் எழுந்து மரியாதை தரத் தேவையில்லை.நாற்காலியில் அமர்ந்து இருந்தால் ஒவ்வொருவருக்கும் எழுந்து மரியாதை தர வேண்டும். மரியாதை தெரிந்த பணிவான மகன் என்ற பொருளில்தான் அவன் தந்தை உட்கார்ந்தால் எழுந்திருக்காத மகன் என்றார். இப்ப புரிஞ்சுதா குட்டீஸ்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !