இளஸ் மனஸ்! (142)
அன்புள்ள அம்மா...என் வயது, 16; பிளஸ் 1 படிக்கும் மாணவன். மரங்களின் அவசியம் பற்றியும், தெரு மரங்களுக்கு தண்ணீர் ஊற்றும் தேவை பற்றியும் விளக்கமாக சொல்லுங்களேன். அது குறித்து அறிய மிகவும் ஆவலாக உள்ளேன்.இப்படிக்கு, க.அஷோக்.அன்பு மகனே...உலகிற்கு தேவைப்படும் ஆக்சிஜனில், 28 சதவீதத்தை மழைக்காடுகளும், 70 சதவீதத்தை கடல் தாவரங்களும் நிரப்புகின்றன. இரண்டு சதவீதம் இதர வழிமுறைகளில் கிடைக்கிறது. காற்றில், 78 சதவீதம் நைட்ரஜனும், 21 சதவீதம் ஆக்சிஜனும், 0.9 சதவீதம் ஆர்கானும், 0.1 இதர வாயுக்களும் கலந்துள்ளன. ஒரு நாளைக்கு, மனிதன், 550 லிட்டர் ஆக்சிஜனை சுவாசிக்கிறான். ஒரு மனிதன் வாழ்நாள், 65 ஆண்டுகள் என்றால், 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் தேவைப்படும். இது பெரும்பாலும் மரங்களில் இருந்து கிடைக்கிறது. அதிக ஆக்சிஜனை வெளியிடுவதில், அரச மரம் முதலிடம் வகிக்கிறது.உலகின் மிக சுத்தமான காற்று, அட்லாண்டிக் கடல் கரீபியன் தீவுப்பகுதியில் வீசுகிறது; காற்று மிக மோசமாக மாசடைந்துள்ள நகரம், ஹாட்டன். இது ஆசிய நாடான சீனாவில் உள்ளது.மரங்கள், மனிதர்களை மட்டுமல்ல, உயரினங்களை காக்கும் தோழனாகவும் விளங்குகின்றன; வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்; தெருக்களையும், சாலைகளையும் பசுமையாக்குவோம்.வடகிழக்கு மாநிலமான அசாம், மஜுலியை சேர்ந்த, ஜாதவ் பயங் என்பவர் பிரம்மபுத்திரா நதிக்கரையில், 1,400 ஏக்கர் நிலப்பரப்பில் மரம் வளர்த்துள்ளார். அந்த பகுதி, மோவாய் காடுகள் என அழைக்கப்படுகிறது. இவருக்கு, வான மனிதர் என்ற பட்டப்பெயரும் உண்டு; மத்திய அரசு, இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கவுரவித்தது.மறைந்த திரைப்பட நடிகர் விவேக், 1 கோடி மரம் நட இலக்கு நிர்ணயித்து, 'க்ரீன் கலாம்' என்ற திட்டத்தின் கீழ், 33 லட்சம் மரங்கள் நட்டார். மீதி, 67 லட்சம் மரங்களை நட, அவரது ரசிகர்கள் சங்கல்பம் கொண்டுள்ளனர்.சில மாதங்களுக்கு முன், ஒரு வேலையாக, கரூர் மாவட்டம், பள்ளபட்டி கிராமத்துக்கு சென்றேன். அங்குள்ள இளைஞர்கள் கூடி, ஊர் முழுக்க மரம் நட்டு, தண்ணீர் ஊற்றி பராமரிப்பதை பார்த்தேன். அந்த சிறப்பான செயலை செய்த இளைஞர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.உலகின் தோட்ட நகரமாக பெங்களூருவை சொல்வர்; இந்தியா முழுதையும் தோட்ட நகரமாக்க முயற்சிக்க வேண்டும். குறைந்தபட்சம், அன்றாடம் ஐந்து மரங்களுக்காவது தண்ணீர் ஊற்றி பராமரிக்கலாம். அவை, உன் காதுகளில், 'நன்றி செல்லம்... எனக்கு தண்ணீர் ஊற்றும், உன் அன்பை கண்டு, பெரு மகிழ்ச்சியடைகிறேன். பதிலுக்கு நீ சுவாசிக்க ஆக்சிஜனை அள்ளித் தருகிறேன்...' என்று கிசுகிசுக்கும்!தெரு மரங்களை தத்தெடுங்கள் சிறுவர், சிறுமியரே!- அன்புடன், பிளாரன்ஸ்