நீங்கா ஓவியம்!
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், பி.எல்.டபிள்யு.ஏ., மேல்நிலைப் பள்ளியில், 1974ல், 9ம் வகுப்பு படித்தேன். எங்கள் ஓவிய ஆசிரியராக இருந்தவர் ராஜாராம். குழந்தைப் பருவத்தில் இருந்தே, நான் ஓவியத்தில் அளவற்ற ஆர்வம் உடையவன். என் ஆர்வத்தை பார்த்து, என்னை அரசு ஓவியர் தேர்வு எழுத, அவர் ஆலோசனை கூறினார். அத்துடன், இலவசமாக சிறப்பு வகுப்பும் நடத்தினார். பொருட்களை பார்த்து வரைவதில் உள்ள சூட்சுமங்கள், சூத்திரங்கள், அளவீடுகளை எளிதில் மனதில் பதியும்படி கற்றுக் கொடுத்தார். சந்தேகங்களை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பின்றி விளக்கினார். அப்போது, வனத்துறை நடத்திய ஓவியப் போட்டியில் என்னை பங்கேற்க வைத்தார். அதில், முதல் பரிசு பெற்றேன். அவர் வழிகாட்டுதலில், அரசு ஓவிய ஆசிரியர் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். என்னை போலவே, பல மாணவர்கள் அவரிடம் பயின்று, ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஓவிய ஆசிரியரை பின்பற்றி, நானும் பல மாணவியருக்கு கற்றுக் கொடுத்து, அவர்களையும் அரசு ஓவிய ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற செய்துள்ளேன். என் மகள் ரேவதி, 6ம் வகுப்பு படிக்கும் போது, நம் நாளிதழ் நடத்திய மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில், இரண்டாம் இடம் பெற்றாள். அதற்காக துாத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரிடம் இருந்து சைக்கிளை பரிசாக பெற்றாள். தற்போது என் வயது, 68. தனியார் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். பேரன், பேத்திகளுக்கும், என்னை நாடி வருவோருக்கும் ஓவியப்பயிற்சி அளித்து வருகிறேன். ஓவிய ஆசிரியர் ராஜாராம், அவரின் வாழ்க்கை துணைவி அழகம்மாள் இருவரும், மறைவிலும் இணைந்தே இறைவனடி சேர்ந்தனர். என் வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட அவர் மறைந்தாலும், அவரது முகமும், உருவமும் என் உள்ளத்தில் நீங்கா ஓவியமாக, ஆழப்பதிந்துள்ளது. - ஆ.லோகியா, சென்னை. தொடர்புக்கு: 94895 20489