உள்ளூர் செய்திகள்

ஓடி ஒளியாதே பூஞ்சிட்டே! (2)

முன்கதை: பள்ளியில் படித்து வந்த மகிழ், நாய்க்குட்டிகளை விரும்புபவன். அவற்றுடன் கனவுலகில் சஞ்சரித்து வந்தான். அவனுக்கு ஆச்சரியம் தரும் தகவல் தரப்போவதாக முந்தைய நாள் இரவில் சொன்னார் அப்பா. இனி - காவல்துறை தலைமையகம் -லாவகமாக ஓட்டிச் சென்று வாகன நிறுத்தத்தில், காரை நிறுத்தினார் மகிழின் அப்பா.''இங்கு, எதற்காக அழைத்து வந்துள்ளீர்...''வினவினான் மகிழ்.''சற்று பொறுத்திருந்து பார்...''வரவேற்பு அலுவலக பணிப்பெண்ணிடம் சென்றனர் இருவரும்.''அம்மா... வணக்கம்...'' விசிட்டிங் கார்டை நீட்டினார் மகிழின் தந்தை.''ஓ... நீங்களா... இதோ இந்த வழியாக செல்லுங்கள்...''அலுவலக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மகிழின் தந்தை வந்திருப்பதை தெரிவித்தாள் வரவேற்பாளினி.அச்செய்தியை கேட்டதும் வந்தார் துணை அதிகாரி ஒருவர்.''ஐயா வாங்க... உங்களுக்காக தான் காத்திருந்தேன்...''மூவரும் அந்த நீண்ட வராண்டாவில் நடந்தனர். மொட மொட காக்கி டவுசர், கை வைத்த பனியன் அணிந்த கடைநிலை ஊழியர் ஒருவர், அந்த அறையை திறந்தார்.அறைக்குள் பிரவேசித்தனர்.அங்கு, வித்தியாசமான வாசனை சுழன்றடித்தது. கூண்டுகளில், 20க்கும் மேற்பட்ட நாய்கள் நின்றிருந்தன. அவற்றில் சில குரைத்தன; சில உறுமின.'வெல்கம் டூ அவர் ஸ்னைப்பர் டாக் வொர்ல்டு...'தானியங்கி குரல் வரவேற்றது.''வாவ்...''''மனிதனுக்கு, 50 லட்சம் நுகர்ச்சி செல்கள் உள்ளன. அதை விட நாய்களுக்கு, 44 மடங்கு அதிகமாக நுகர்ச்சி செல்கள் உள்ளன. மனிதனை விட, நான்கு மடங்கு கேட்கும் திறன் அதிகம் உடையது. மனிதன் பேசும், 150 வார்த்தைகளை புரிந்து கொள்ள நாயால் முடியும்; சில வகை இன நாய்கள், ஆயிரம் வார்த்தைகள் கூட புரிந்து கொள்ளும்...''''ஐயா... சற்று பொறுங்கள்; இதெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறீர்...''உணர்வின்றி கேட்டான் மகிழ்.அதை கேட்டு சிரித்தார் துணை அதிகாரி.''மகனிடம் இது பற்றி கூறவில்லையா...''மகிழின் தந்தை மையமாக சிரித்தார்.''மனித சமுதாயத்தில், கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம், போதைப் பொருள் கடத்தல், பெண்கள், சிறுவர், சிறுமியர் கடத்தல் போன்ற பல குற்றங்கள் நடக்கின்றன. அவற்றை தடுத்து, தண்டிக்க காவல்துறை இயங்குகிறது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க, காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து, மோப்ப நாய்களும் செயல்படுகின்றன. சில சமயங்களில், 10 காவல்துறை அதிகாரியின் பணியை, ஒற்றை மோப்ப நாய் செய்கிறது...''''ஐயா... மோப்ப நாய்கள் பற்றி, பாடம் எடுக்குறீர்; சரி தொடருங்கள்...'' என்றான் மகிழ்.''தமிழக அரசு ஜூலை 8, 1965ல், மோப்ப நாய் பிரிவை நிறுவியது. கோவையில், 1988ல் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு பின், மோப்ப நாய்களுக்கு பயிற்சி நிலையம் துவங்கியது. வெடி பொருளை கண்டுபிடிப்பது இந்த நாய்களின் சிறப்பு பணி. மோப்ப பணிக்காக, நாய்களை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதக் குட்டியிலிருந்தே பயிற்சி அளிக்கிறோம்...''''மோப்ப பணிக்கு, ஆண், பெண் இரண்டில், எதை தேர்வு செய்கிறீர்...''''பெரும்பாலும், ஆண் நாய்கள் தான். அதில், பெண்ணும் குற்றத்தை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படுகின்றன...''''மோப்ப நாய்களில், நாட்டு இனங்களை ஏன் பார்க்க முடிவதில்லை...''''நல்ல கேள்வி. நாட்டு நாய் இனம், மோப்ப பணிக்கு ஒத்து வராது. லாபரடார் ரிட் ரீவர், ரோட் வெய்லர், ஸ்பிரிங்கர் ஸ்பானியல், ஜெர்மன் ஷெப்பர்டு, பெல்ஜியன் மாலிநாய்ஸ் ப்ளட்ஹூண்ட் டச் ஷெப்பர்டு நாய்களே மோப்பம் பிடிக்கும் பணிக்கு தகுதியானவை...''அதை கேட்டு, மகிழ்வுடன் தலையாட்டினான் மகிழ்.''மோப்ப நாய்களுக்கும், அதன் உதவியாளர்களுக்கும், மத்திய பிரதேச மாநிலம், போபாலிலும், ஹரியானாவிலும், ஒன்பது மாதங்கள் சிறப்பு பயிற்சி தருகின்றனர். இந்திய ராணுவத்திலும் மோப்ப நாய் பிரிவு உள்ளது...''ஒவ்வொரு கூண்டுக்கும் அழைத்து சென்றார் துணை அதிகாரி.அங்கு சென்றதும், 'சல்யூட் தி கெஸ்டஸ்...' என கட்டளை பிறப்பித்தார்.தரையில் தலையை தாழ்த்தி வைத்து, ஜப்பானிய முறையில் வணங்கின நாய்கள்.''ஒரு மோப்ப நாயின் விலை மதிப்பு, 16 லட்சம் ரூபாய்; அதற்கு சம்பளம் உண்டா என கேட்பீர்; தினமும் அதன் உணவு, பராமரிப்பு செலவு என, மோப்ப நாய் உதவியாளரிடம் வழங்குவோம்...''''நாய்க்கு கொடுக்கும் பணத்தை பயிற்சியாளர்கள் தவறாக பயன்படுத்தி தின்று விட மாட்டார்களா...''''மோப்ப நாய்கள், பயிற்சியாளரின் செல்லக் குழந்தைகள். மகனுடைய உணவை, தந்தை திருடித் தின்பாரா...''''நெற்றியடி பதில்...'' என்றான் மகிழ்.''கேள்வி கேட்பது தவறல்ல. நல்ல பதில்கள் தான் அறிவுக்கண்ணை திறக்கும்; நாம் பேசும் முன், ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்...''திறன்பேசியில் யாரிடமோ பேசினார் துணை அதிகாரி.சிறிது நேரத்திற்கு பின் -'சிக்ஸ்பேக்' உடலமைப்புள்ள இளைஞர், 6 அடி உயரத்தில் வந்து, போலீஸ் சல்யூட் அடித்தபடி நிமிர்ந்து நின்றார். ''மீட் அவர் ஸ்னிப்பர் டாக் ட்ரைனர் காண்டீபன்...''மகிழும், அவன் தந்தையும் அவரை வணங்கினர். காண்டீபன் கண்களில் சோகம், டன் கணக்கில் மண்டிக் கிடந்தது. - தொடரும்...ஆர்னிகா நாசர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !