உள்ளூர் செய்திகள்

வினையான விளையாட்டு!

சிவகங்கை மாவட்டம், இடையமேலுார் பள்ளியில், 1965ல், 4ம் வகுப்பு படித்தேன். தலைமையாசிரியராக என் தந்தை பணியாற்றினார். மாலை வகுப்புகள் முடிந்து, நீண்ட நேரத்திற்குப் பின் தான், என்னை வீட்டிற்கு அழைத்து செல்வார். அதுவரை, அங்கிருக்கும் சிறுவர்களுடன், ஒளிந்தும், ஓடிப் பிடித்தும் விளையாடுவேன்.அன்று, கணபதி என்பவனும் விளையாட வந்தான். ஒளிந்து கொண்ட அவனை நீண்ட நேரம் தேடினோம்; கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, 'வீட்டிற்குச் சென்றிருப்பான்...' என எண்ணி, வேறு விளையாட்டில் ஈடுபட்டோம். சிறிது நேரத்தில், அவனது பெற்றோர் பள்ளிக்கு வந்தனர்; பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியர்கள் அவனைத் தேடினர். ஒரு மரப்பெட்டிக்குள், முட்டும் சத்தம் கேட்டது. என் தந்தை ஓடிச்சென்று திறந்தார்.அதற்குள் மயங்கி கிடந்தான் கணபதி; உடனடியாக, மருத்துவமனைக்கு துாக்கி சென்று சிகிச்சை அளித்தனர். பதற்றம் தணிந்தது.நடந்தது இதுதான் -பள்ளியில், பதிவேடுகளை பராமரிக்க, பெரிய மரப்பெட்டிகள் இருந்தன.ஒரு பெட்டிக்குள் ஒளிந்த கணபதி, ஆர்வத்தால் மூடியுள்ளான். மூடியதும், பெட்டியின் வெளி தாழ்பாள் பூட்டிக் கொண்டது. மூடியைத் திறக்க முடியாமல் மாட்டிக்கொண்டான். இந்த சம்பவம் நடந்து, 50 ஆண்டுகள் கடந்து விட்டன. வங்கியில் கணக்காளராக பணியாற்றும் அவனை, பார்க்கும் போதெல்லாம், இனம் புரியாத பெருமூச்சுடன், என் கண்களில் நீர் சுரக்கும். - என்.முத்துக்கிருஷ்ணன், சிவகங்கை.தொடர்புக்கு: 98655 22933


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !