உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

மா. காமராஜ், பாண்டி: என்னுடைய மனதை என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லையே... அலை பாய்கிறதே..
உங்களுக்கு உதவி செய்யும் உற்ற நண்பனாக, மனதை மாற்றி கொள்ளுங்கள். நினைத்த காரியங்களுக்கு விரோதியாக மனதை மாற்றி கொள்ளக் கூடாது... அப்படி செய்தால், தனக்குத் தானே விரோதியாகி விடுவார்!
ஆர். மனோகரன், சென்னை: வரப்போகும், வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க, தி.மு.க., அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக உள்ளதா?
இல்லை என்றே தோன்றுகிறது... முதல்வர், ஸ்டாலினே, 'சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்காது என்று ஓரளவு நம்புகிறேன்...' எனக் கூறியுள்ளாரே... அவருக்கே முழு நம்பிக்கை இல்லையே!லலிதா அசோக், நாகப்பட்டினம்:வாழ்வில் வெற்றி பெற உதவுவது பட்டறிவா, படிப்பறிவா?இரண்டாவது ஓரளவுக்கு உதவும்; முதலாவது ரொம்ப முக்கியம். ஏற்கனவே பட்டறிவு பெற்றவர்களிடம் அதைப் பெற்றுக் கொள்வது லாபகரமானது!
* கே. ராமலட்சுமி, மேட்டூர், சேலம்: இன்று இந்தியாவிலேயே பெரிய பணக்காரர் யார்?
டாடாக்கள், பிர்லாக்கள், அம்பானிகள், அதானிகள் அல்லர்; இவர்களுக்கெல்லாம், கம்பெனி பெயரில் தான் சொத்துக்கள் உள்ளன. ஆனால், நம் அரசியல்வாதிகள் சிலரிடம், தனிப்பட்ட முறையிலேயே, 200 கோடி முதல், 2,000 கோடி ரூபாய் வரை உள்ளது. ஆட்சியில் உள்ள - இருந்த அரசியல் தலைவர்கள் தான், இன்று இந்தியாவிலேயே பெரிய பணக்காரர்கள்!
எஸ். ராகவ், கோவை: சென்னை தமிழ் பேசத் தெரியுமா?
முயன்று கொண்டே இருக்கிறேன்... நெல்லை, குமரித் தமிழ் சூப்பராகவும், கொங்குத் தமிழ் கொஞ்சம் பேசத் தெரியும்!
* கி. ரவிசங்கர், நெல்லை: நம் நாடு ஏகப்பட்ட கடனை வெளிநாடுகளிடமிருந்து வாங்கியுள்ளதே... இதை எப்படி அடைப்பது?
ஜப்பானைப் பின்பற்ற வேண்டியது தான்; தன் உற்பத்திப் பொருட்களை ஏராளமாக வெளிநாடுகளுக்கு விற்கிறது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் அன்னிய செலாவணி கிடைக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு ஏற்றுமதி செய்கிறோமோ, அவ்வளவு வெளிநாட்டுக் கடன் தீர்ந்து விடும்!
மா. ஜஹாங்கீர், தஞ்சாவூர்: அறிஞர், பேரறிஞர் என்றெல்லாம் சிலர் தமக்கு தாமேயும், பிறரை விட்டும் பட்டம் கொடுத்துக் கொள்கின்றனரே... இவர்கள் எல்லாம் உண்மையிலேயே அறிஞர் பெருமக்கள் தானா?
ஒருவன் அறிஞன் என்பதை சரித்திரம் தான் சொல்ல வேண்டும். இங்குள்ள, 'சோ கால்டு' அறிஞர்கள், 'பப்ளிசிட்டி'க்கு அலைஞ்சான்களாக அல்லவா இருக்கின்றனர்!
ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம், தென்காசி: காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர், சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா விசுவாசியாக இல்லாமல் செயல்படுவாரா?
இல்லவே இல்லை... 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆகவே செயல்படுவார்! இது, உறுதி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !