உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

* ப. சோமசுந்தரம், சென்னை: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தனது, 'தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி' கட்சியை, 'பாரத் ராஷ்ட்ரிய சமிதி' என மாற்றி, தேசிய கட்சியாக அறிவித்துள்ளாரே...'
ஒருநாளும் தேறப் போவதில்லை... அவர் முகமாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
ஜே. பீட்டர், துாத்துக்குடி: புகழுடனும், பணத்துடனும் வாழ ஆசைப்படுகிறேன். இதற்கு வேண்டியது என்ன?
திறமை... சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் திறமை. இதைக் கோட்டை விட்டவர்கள் பின்னர் வருந்துகின்றனர்!
பி. தினேஷ், சென்னை: சிறந்த அறம் என்று எதைக் கூறுவீர்கள்?
பொறாமை, பேராசை, முன்கோபம், தீய செயல் ஆகியவற்றை, குற்றங்களாக கருதி, அவற்றை அறவே நீக்குவதே சிறந்த அறமாகும்!
* பா. ராஜ், சென்னை: தி.மு.க., மந்திரிகள் வாய்க்கு வந்தபடி பேசுவதும், முதல்வர் ஸ்டாலின் மவுனமாய் இருப்பதும்...
எல்லாவற்றுக்கும் கட்டணம் ஏற்றி விட்டனர்... அதைப்பற்றி மக்கள் பேசாமல் இருப்பதற்குத்தான், மந்திரிகளை இப்படி எல்லாம் பேச ஏவி விட்டுள்ளார், முதல்வர் ஸ்டாலின்!
ம. வேல்முருகன், புதுச்சேரி: கமிஷன், லஞ்சம்... இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
தமிழில் லஞ்சம் என்பதை, கேவலமான வார்த்தையாகக் கருதுகின்றனர்... அதனால், அதை ஆங்கிலத்தில், கமிஷன் என்று கூறுகின்றனர்!
ஜி. பாலாஜி, மதுரை: எந்தெந்த நான்கு குணங்கள் நம்மிடம் இருக்க வேண்டும்?
முதலில், பொறுமை, இரண்டாவதாக சாந்த குணம், மூன்றாவதாக அறிவு, கடைசியில், அன்பும் மிக முக்கியம்!
பொன்.பாலாஜி, அண்ணாமலைநகர், சிதம்பரம்: சசிகலா பொழுதுபோக்க, என்ன செய்யலாம் என்று ஒரு, 'ஐடியா' கொடுங்களேன்...
இப்போது, அவர் செய்து கொண்டிருப்பதெல்லாம் பொழுது போக்குத்தானே... இதுக்கு மேல, நம்மிடம், 'ஐடியா' எதற்கு!
கி. சுப்பு, நெல்லை: வாழ்க்கையில், வெற்றி பெறுவதற்கு எது தேவை?
வெற்றிக்கு தேவை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் சளைக்காத மனம். இவற்றுடன், நுண்ணறிவு தேவை. இதுவே, வெற்றியை எளிதாக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !