உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

கேஎழுத்தாளரும், படிப்பாளியுமான நண்பர் ஒருவர், என்னை சந்திக்க வந்தார். பேச்சு எங்கெல்லாமோ சுற்றி, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான, சிதம்பரம் பற்றி திரும்பியது.'செய்யறதை செஞ்சுட்டு, 'திஹார் சிறைக்கு போக மாட்டேன்'னு, ஆரம்பத்தில் பயப்பட்டாரே... அச்சிறை என்ன அவ்வளவு மோசமாவா இருக்கும்...' என்றேன்.'அதெல்லாம் ஒண்ணுமில்ல, மணி... இப்போது, புதுச்சேரி துணை நிலை ஆளுனரா இருக்கும், கிரண்பேடி, பல ஆண்டுகளுக்கு முன், திஹார் சிறையில், இன்ஸ்பெக்டர் ஜெனரலா இருந்தார். அவர், அங்கு இருந்தபோது, சிறைச் சாலைக்குள் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.'கைதிகளின் நலவாழ்வுக்கு என்னெல்லாம் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்தார். அவர் ஏற்படுத்திய மாற்றங்களால், இன்று, கைதிகளின் நலவாழ்வு மையமாகவே செயல்படுகிறது, திஹார் சிறை. அவர் எழுதிய, 'நான் துணிந்தவள்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள, ஒரு சம்பவத்தை கூறுகிறேன், கேள்...' என்று ஆரம்பித்தார்:ஒரு காலத்தில், பயமும், அதிர்ச்சியும் தரக்கூடிய தோற்றம் கொண்டது, டில்லி திஹார் சிறைச்சாலை. இதன் உள்ளே காலடி வைக்கும் குற்றவாளி, வாழ்வதற்குரிய எல்லா நம்பிக்கைகளையும் இழந்து விடுவான். மீட்சியில்லாத நரகத்தில் நுழைவது போல தான் தோன்றும். மிகப்பெரிய இரும்பு கதவுகளும், இரும்பு சட்டங்களும் கொண்டது. இங்கு, 9,000 கைதிகளை அடைத்து, பூட்டி வைக்க முடியும். கைதிகள் எவரிடமும், சகிப்புத்தன்மை இல்லை. வெறுப்பு, பழி வாங்கல் உணர்வுகளால் இறுகிப் போய் இருந்தனர். தங்களையே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நிலையை எட்டியிருந்தனர்.இந்த நிலை நீடித்த ஒரு காலகட்டத்தில் தான், ஐ.ஜி., ஆக பொறுப்பேற்றார், துணிச்சலுக்கு பெயர் பெற்ற, கிரண்பேடி - ஐ.பி.எஸ்., அவர் பதவி காலத்தில், சிறைச்சாலையில், எத்தனையோ நல்ல மாற்றங்களை கொண்டு வந்தார். அவர் கூறுகிறார்:சிறை கைதிகளிடையே, ஏதாவது புது திட்டங்களை ஏற்க வைக்க வேண்டுமானால், முதலில் அவர்களுக்கு, எங்கள் மேல் நம்பிக்கை வரவழைக்க வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அது, 'ரக் ஷா பந்தன்' நாள். சகோதரிகள், தங்கள் சகோதரர்களுக்கு, கையில் வண்ண ரட்சையை கட்டுவது வழக்கம். 'கைதிகளின் சகோதரிகள், சிறைக்குள் வந்து, தங்கள் சகோதரர்களின் கைகளில் ரட்சையை கட்டலாம்...' என்று, அறிவித்தோம். என்றாலும், தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இதை செய்தோம். ஆண்கள் சிறைக்குள்ளே, பெண்கள் வருவது பற்றி, முன் கூட்டியே கைதிகளிடமும் தெரிவித்து விட்டோம். இதைக் கேட்ட கைதிகள், கண்ணீர் விட்டனர்... 'எங்களுக்காக, நீங்கள் இவ்வளவு செய்யும்போது, தவறு நடக்க நாங்கள் அனுமதிப்போமா... உங்களுக்கு, எங்கள் மீது அவநம்பிக்கை வரலாமா...' என்று, கண்ணீர் உருக கேட்டனர். 'ரக் ஷா பந்தன்' நாளன்று, கண்ட காட்சி, உணர்ச்சி கொந்தளிப்பாய் இருந்தது.உள்ளே வந்து ரட்சையை கட்டிய சகோதரிகளிடம், 'நாங்கள், இனிமேல் தவறு செய்ய மாட்டோம்...' என்று உறுதியளித்த, சகோதரர்களின் காட்சி மறக்க முடியாதவை. அதன்பின், கைதிகளின் நடவடிக்கையில், பக்குவமும் ஏற்படுத்தி விட்டது.- என குறிப்பிட்டுள்ளார்.நரகமாக இருக்கக் கூடாது, சிறைச்சாலைகள்; கைதிகள், தங்கள் தவறை உணரவும், மறுவாழ்வுக்கு வித்திடவும் வேண்டும் என்று, அன்று ஊன்றப்பட்ட விதை, இன்று, மரமாக வளர்ந்துள்ளன.- என்று கூறி முடித்தார், நண்பர்.நம்மூர் சிறைச்சாலைகளிலும் கைதிகள், மேற்படிப்பு படிக்கவும், தொழில் கற்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி இருப்பது, நினைவுக்கு வந்தது.ப'தினமலர்' நாளிதழில் வெளியாகும், புத்தக விமர்சனம் பகுதிக்கு வந்த, நர்மதா பதிப்பக வெளியீடான, 'நம்பிக்கை...' என்ற புத்தகத்தை புரட்டி பார்த்தேன்.மவுரிய பேரரசர், அசோகர் பற்றி வெளியாகியுள்ள தகவல் இது:மவுரிய சாம்ராஜ்யத்தின் மன்னர், அசோகர், நகர் வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த துறவி, மன்னரும், அவரது படை வீரர்களும் செல்ல வழி விட்டு, ஓரமாக ஒதுங்கி நின்றார்.அவரை பார்த்த, அசோகர், தம் ரதத்தை நிறுத்தி, இறங்கி அவரது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது சிரம், துறவியின் காலில் பட்டது. மன்னரை ஆசிர்வதித்தார், துறவி. இதை பார்த்த அமைச்சர், சங்கடப்பட்டார். 'மிகப்பெரிய அரசர், ஒரு சாதாரண துறவியின் காலில் விழுவதா... அரச பாரம்பரிய கவுரவம் என்னாவது...' என்ற எண்ணம், அவரை அலைக்கழித்தது.அரண்மனை சென்றதும் அரசரிடம், தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார், அமைச்சர். அமைச்சர் கூறியதை கேட்ட, அசோகர் சிரித்தார். அவரின் கேள்விக்கு பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையை பிறப்பித்தார்.'ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலி தலை மற்றும் ஒரு மனித தலை, மூன்றும் உடனே எனக்கு வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்...' என்றார்.மன்னரின் கட்டளை, அமைச்சரை திகைக்க வைத்தாலும், அதை நிறைவேற்ற முனைந்தார்.ஓர் இறைச்சி கடையில், ஆட்டுத் தலை கிடைத்தது. புலி தலை, வேட்டைக்காரனிடம் கிடைத்தது. மனித தலைக்கு எங்கே போவது... கடைசியில், சுடுகாட்டுக்கு சென்று, ஒரு பிணத்தின் தலையை எடுத்து வந்தனர்.மூன்றையும் பார்த்த, அசோகர், 'சரி... இம்மூன்றையும், சந்தையில் விற்று, பொருள் கொண்டு வாருங்கள்...' என்றார்.ஆட்டுத் தலை, சிரமமின்றி விலை போனது. புலி தலையை, வேட்டையில் பிரியமான ஒருவன், பாடம் செய்து அலங்காரமாக மாட்ட, வாங்கி சென்றான். மீதமிருந்த மனித தலையை பார்த்த கூட்டம், அருவருப்புடன் அரண்டு, மிரண்டு பின்வாங்கியது. அதை வாங்க, யாரும் முன்வரவில்லை.அரண்மனை திரும்பிய அமைச்சர், மனித தலையை வாங்க ஆளில்லை என்பதை தெரிவித்தார்.'அப்படியானால், யாருக்காவது இலவசமாக கொடுத்து விடுங்கள்...' என்றார், மன்னர்.'இலவசமாக வாங்கக் கூட, யாரும் முன்வரவில்லை...' என்றார், அமைச்சர். 'பார்த்தீரா, அமைச்சரே... மனிதனின் உயிர் போய் விட்டால், அந்த உடம்பு, கால் துாசு கூட பெறாது. இருந்தும், இந்த உடம்பில் உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது. செத்த பின் மதிப்பில்லை என்பதை உணர்ந்தவர்கள் தான், ஞானிகள். இத்தகைய ஞானிகளின் காலில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு?' என்றார், மன்னர்.புரிந்து, அமைதியானார், அமைச்சர்.அசோகர், இன்றளவும் பேசப்படுவதற்கு காரணம், அவர் தலையில் சூடிய மகுடமல்ல; அதை தாண்டிய அவரது பணிவும், மக்கள் நலப் பணிகளும் தான்.'உன் தலையை புகழால் அலங்கரி, மகுடங்களால் அலங்கரிக்காதே. ஏனென்றால், மகுடங்கள், தலை மாறக் கூடியவை...' என்று, ஒரு கவிஞர் கூறியது, காதில் ஒலித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !