உள்ளூர் செய்திகள்

துபாய் நகரின் அபிமான பெட்டிக்கடை!

கேரள மாநிலம், கோழிக்கோட்டிலிருந்து அபூபக்கர் என்பவர் வேலைத்தேடி, 1976ல் ஐக்கிய அரபு நாடான துபாய் சென்றார். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காததால், சாலையோரம் சின்னதாக பெட்டிக்கடை ஒன்றை ஆரம்பித்தார்; சொற்ப வருமானம் தான் கிடைத்தது.இவரைப் போன்று, பிழைப்பு தேடி அங்கு சென்ற படிப்பறிவில்லாதவர்களுக்கு உதவ முன் வந்தார், அபூபக்கர்.வேலைக்கு விண்ணப்பம் எழுதி தருவது, அவரவர் வீடுகளுக்கு கடிதம் எழுதிக் கொடுப்பது மற்றும் வேலையில் சேர்ந்த பின், அவர்கள் தங்கள் வீட்டினருக்கு பணம் அனுப்ப உதவுவது என, பல வேலைகள் செய்து தந்தார். அதற்காக, அவர்களிடம் இருந்து சிறு தொகையை கட்டணமாக வசூலித்தார்.இதில், அபூபக்கருக்கு போதிய வருமானம் கிடைக்கவே, தன் கடையை விரிவுப்படுத்தி, தொப்பி, பெல்ட், கைக்கடிகார பட்டை போன்ற பொருட்களை மொத்தமாக வாங்கி, நியாயமான விலையில் விற்க ஆரம்பித்தார். உள்ளூர் மக்களின் ஆதரவு பெருகியது. அதோடு, நகராட்சி அதிகாரிகளின் அபிமானத்தையும் பெற்றார்.சிறிது காலத்திற்கு பின் சாலை விரிவாக்கம் செய்த போது, அங்கிருந்த பல கடைகள் அகற்றப்பட்டாலும் இவரது கடைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.அபூபக்கர் இறந்து விட்டார். தற்சமயம், இக்கடையை அவரது மகன் கவனித்துக் கொள்கிறார். 'அதிகாரிகள் கடையை அகற்ற சொல்லும் வரை, இதை தொடர்ந்து நடத்துவேன்...' என்கிறார், அபூபக்கரின் மகன்.ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !