உள்ளூர் செய்திகள்

கரகாட்டம்!

மதிய நேரத்தில், குயில்களின் சத்தம், தூக்கத்திற்கு இதமாய் தாலாட்ட, ஆலமரத்து நிழலில் துண்டை விரித்து, நித்திரையில் ஆழ்ந்திருந்த பரமுவை, தோளை தொட்டு எழுப்பினான், இன்னாசி.தூக்கமும், பசியுமாய் கண் திறந்து பார்த்த பரமு, வெற்றிலை கறை படிந்த பற்கள் தெரிய சிரித்த இன்னாசியை கண்டதும்,''என்னய்யா இந்தப் பக்கம்,'' என்றான், கைகளை, தோளுக்கு மேல் உயர்த்தி, சோம்பல் முறித்தபடி!''அடப் போய்யா... தலைக்கொரு பொழப்பு, தாடிக்கொரு பொழப்புன்னு, காலம் ஓடுது... இதுல எங்க உன்னை வந்து பாக்கிறது. ஆனா, இப்ப ஒரு விசயமாத்தேன் வந்திருக்கேன்...'' சம்மணம் இட்டு அமர்ந்து, மீசையை முறுக்கியபடி பேசிய இன்னாசியை, புரியாமல் பார்த்தான் பரமு.''வீராம்புதூர்ல திருவிழா...''''வீராம்புதூர்ல எந்த இடத்துல...''''கூட்ரோடு பக்கத்துல, காளியாத்தா கோவில் இருக்குமேய்யா...''''ஆமாமா... சொல்லு.''''ரொம்ப நாளா பூட்டிக் கெடக்குற கோவிலை, குடமுழுக்கு செய்து, கும்பாபிஷேகம் செய்யப் போறாங்க. மூணு நாளு விசேஷம்... அன்னதானம், ஒயிலாட்டம், மயிலாட்டம்ன்னு, திருவிழா, களைகட்டப் போகுது. அதுல, கரகாட்டம் ஆட, 'செட்' வேணும்ன்னு கேட்டுருக்காங்க ஏற்பாடு செய்ய முடியுமா...'' என்றான்.எழுந்து அமர்ந்த பரமு, நாடியை சொறிந்தபடி, ''அட போக்கத்தவனே... இப்ப எங்கடா இருக்கு செட்டு... எல்லாமுதான் போச்சே! நாகரிகம் வளர்ந்ததுல, வெவசாயம் மட்டும் சாகல; கிராமமும், அத ஒட்டிய தொழில்களும், நம்மோட பாரம்பரிய கலைகளும் தான், சேர்ந்து அழிஞ்சு போச்சே,'' என்று வருத்தப்பட்டான்.''அதுக்குதான்யா உன்னை தேடி வந்திருக்கேன்... ஒத்தை ஆட்டம் தான்; 30 நிமிஷம் தாக்குப் பிடிச்சு ஆடணும். பத்தாயிரம் ரூவா தர்றேன்கிறாங்க... பார்ட்டிக்கு அஞ்சு குடுத்துடலாம்; அஞ்சை நீயும், நானும் பிரிச்சுக்கலாம்.''வாய் பிளந்தபடி அமர்ந்திருந்தான், பரமு.காஞ்ச வயிற்றுக்குள் பாலாறு ஓடியது. மடியில் சொருகி இருந்த போனை எடுத்து, இரண்டு, மூன்று பேர்களின் எண்களை ஒற்றினான்; பதில், சாதகமாய் வரவில்லை என்றதும் சோர்வானான்.''என்னய்யா என்ன சொல்றாளுக...''''ராஜலட்சுமி, அன்னக்கிளி, 'க்யூன்' பேபி எல்லாத்துட்டேயும் கேட்டுட்டேன்; மாட்டேங்கிறாளுக. மிச்சமிருக்கிறது, 'சாக்லெட்' சரோஜா மட்டும் தான். அவ நம்பரு, எங்கிட்ட இல்ல. பாலமேடு தான் அவ ஊரு; ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துரலாமா...'' என்று கேட்டான் பரமு.இன்னாசி தலை அசைக்க, இருவரும் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தனர்.வெள்ளை வேட்டி, சட்டையும், தோளில் தொங்கிய துண்டும், படிய வாரிய தலையும், வாயில் மணக்கும் சீவலுமாய், அந்நாளில், பரமுவை கண்டாலே, மதிப்பாய் தான் இருக்கும். அது, 20 ஆண்டுகளுக்கு முந்தைய சேதி.வாசலில், 'பார்ட்டி புக்கிங் பரமன்' என்று, தகர 'போர்டு' வைத்திருப்பான். திருமணம், கச்சேரி, கோவில் திருநாள், குடமுழுக்கு என்று, வாரத்தில் ஏழு நாளும், கச்சேரி இருக்கும். இந்த காலத்து, 'மேன் பவர்' ஏஜென்சிக்கு முன்னோடியாக, அக்காலத்தில், பரமனை போன்ற தனிநபர்கள், செயல்பட்டு வந்தனர்.சுத்துபட்டு கிராமங்களுக்கு, 'ஆர்டர் புக்கிங்' செய்து, அதற்கு கமிஷன் பெற்று, கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், நாதஸ்வர கோஷ்டி, சவுண்ட் சர்வீஸ், சமையல் பார்ட்டி என, எல்லாவற்றையும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, அனுப்பி வைப்பான். அதில் ஈட்டிய வருமானத்தில் 'மைனர்' போல வாழ்ந்து வந்தான்.மெல்லிசை குழுக்கள், மெல்ல தலைகாட்ட துவங்கிய பின், அவனின் பிழைப்பு, மெல்ல ஆட்டம் காண துவங்கியது.மெல்லிசை குழுக்கள் பாட்டு பாடவும், அதற்கு, நடிகர்கள் போல் உடையணிந்து, யுவன், யுவதிகள் ஆடவும் என்ற நவீன பொழுதுபோக்குகளில் மக்கள் லயிக்க, மற்ற கலைகளின் மவுசு, குறைந்து போனது.அந்த பிழைப்பையே நம்பி இருந்த பார்ட்டிகள், வேறு வேறு வேலைக்கு போக, அவர்களை, 'புக்' செய்து அனுப்புவதையே நம்பி இருந்த பரமும், வேரறுந்து போனான்.அதனால், பழைய தொழிலுக்கு முழுக்கு போட்டு, தரகு வேலையில் இறங்கி விட்டான்.பாலமேடு மெயின் ரோட்டில், இவர்களை இறக்கி விட்டு, பஸ் கிளம்பி போனது. 20 ஆண்டுக்கு முன், பனையூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், வேஷம் கட்டி ஆட, ஜகஜாலனை அழைக்க போன போது தான், சரோஜாவை பார்த்தான். ரெட்டை ஜடையில், குஷ்பு கணக்காய் திரிந்த குட்டியை, இமைக்காமல் பார்த்தான், பரமு.'ஜகஜாலா... யாருடா இது...' என்று கேட்க, தலையை சொறிந்த ஜகஜாலன், 'மாட்டுத்தாவணிக்கு ஆடப் போனப்போ, இவ அம்மா பஞ்சவர்ணம் என்கிட்ட ஒட்டிக்கிட்டா... பெரிய கரகாட்டக்காரி; தலையில கரகத்தை வச்சுட்டா, பேயாட்டம் ஆடாம ஓய மாட்டா. அந்த ஆட்டத்துல மயங்கி, 'வா... சேர்ந்து கலைக்கு சேவை செய்யலாம்'ன்னு கூட்டியாந்துட்டேன்...' என்றான், காவிப்பல் தெரிய!'அட கர்மம் புடிச்சவனே... அப்ப அவ புருஷன்?''அவன் ஓடிப் போய், பத்து வருஷமாகுது...''பேர்ல மட்டுமில்ல, மத்த எல்லா விஷயத்துலயும், நீ ஜகஜாலன் தான்யா...' அவன் முதுகு தட்டி சிரித்தது, பசுமையாய் ஞாபகம் வந்தது.அடுத்து வந்த திருவிழாக்களில், பஞ்சவர்ணத்தை, 'புக்' செய்ய போக, சரோஜாவின் எடுப்பான முகம், மனசை விட்டு, அகல மறுத்தது. அவளையும், ஆட்டத்தில் இறக்கி, 'ஓஹோ'வென்று ஆக்கிவிட, மனசு, திட்டம் தீட்டியது.அப்போது பக்கத்து ஊரு மிராசு, குலதெய்வத்திற்கு கோவில் கட்டி, விழா எடுத்த போது, 'எல்லாமே, புதுசாய், இளசாய், புதுமுகமாய் ஆட்கள் வேண்டும்...' என்று சொல்லி விட்டான், சின்ன மிராசு.அப்போது தான், முதல் முறையாய், சரோஜாவை ஆட அனுப்புமாறு, பஞ்சவர்ணத்திடம் கேட்டான், பரமு.கருநாகப் பாம்பாய் நீண்ட சடைமுடி கூத்தாட வந்து நின்ற சரோஜா, கண்ணில் நீர் ததும்ப, 'நான் கரகாட்டமெல்லாம் ஆட மாட்டேன். எனக்கு புடிக்கல; இப்பவே, பள்ளிக்கூடத்துல பயலுக என்னை கிண்டல் செய்றானுங்க...' என்றாள்.அவள் முதுகில் ஓங்கி அடித்த பஞ்சவர்ணம், 'கொண்டை முளைச்ச சேவல், அர்த்த ராத்திரியில கூவுதாக்கும்... உன்னை, பள்ளிக்கூடம் அனுப்பினது, எனக்கு பாடம் நடத்த இல்ல. இது, நம்ம குலத்தொழிலு... நீ ஆடினாலும், ஆடாட்டியும், கரகாட்டக்காரி தான். அதுக்கு, ஆடியே அந்த பேரை வாங்கிட்டு போறது... 30 வயசும், முழங்கால் உசரத்துக்கு புள்ளையும் வந்துட்டா, உன்னை, யாரும் ஆட கூப்பிட மாட்டாக... அதுக்குள்ள, நாலு காசு சம்பாதிச்சுக்கணும், புரிஞ்சுக்க...' என்றாள்.'ஆமாம்... கொமரி தான் வந்து ஆடணும்ன்னு அந்த சாமி சொல்லுச்சாக்கும்; அது, நாட்டாமையும், தலையாரியும் செய்ற வேலை...' என்றாள், கண்ணை கசக்கியபடி!'அதென்ன கெரகமோ... நமக்கெதுக்கு... நீ ஆடுற அம்புட்டு தான்...'பரமுவின் தலைமையில் தான், அன்று தீர்ப்பு எழுதினாள், பஞ்சவர்ணம். அதன்பின், முதல் முறையாய் களமிறங்கிய சரோஜாவுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. அதற்கு காரணம், சுண்டி இழுக்கும் அவளது நிறம் மற்றும் வயசு!கரகாட்டத்தில் சக்கை போடு போட்டாள், சரோஜா. முதலில் பயந்து விலகியவள், பின், கூட்டத்தின் ஆர்ப்பரிப்பில், புகழில், தன்னை மறந்து போனாள்.'சாக்லெட்' சரோஜா என்ற அடைமொழியுடன், ரவுண்டு வந்தாள். சின்ன மிராசுவின், கடைக்கண் பார்வை முதலில் பட, பின், பல இடங்கள் மாறி, அவள் பயணப்பட்டதாய் செய்தி.'சும்மா இருந்தவளை, நாமதான் இந்த சூழலுக்குள் தள்ளிட்டோம்...' என்ற வருத்தம், பரமுவிற்கு இருந்தது.சாலையோரம் இருந்த கடையில் இருவரும் டீ குடித்த பின், ''பரமு... நீ போய், பார்ட்டிய பார்த்து பேசி முடிச்சுட்டு வந்துடு... நான், இங்கன, எங்க பங்காளி ஒருத்தன், பொட்டிக் கடை வச்சிருக்கான்; அவன பாத்துட்டு வந்துடறேன். கொஞ்சம் காசை குறைக்க முடியுமான்னு பாரு; நமக்கு உதவுமில்ல,'' என்று சொல்லி, அவனிடமிருந்து விடைபெற்று, எதிர் திசையில் நடந்தான், இன்னாசி.இரண்டொரு பேரிடம் விசாரித்து, சரோஜாவின் வீடு வந்து சேர்ந்தான், பரமு.சீமையோடு போட்ட வீடு. அவளுக்கு, இவனை நன்றாகவே அடையாளம் தெரிந்தது.''பரமு அண்ணே...'' என்றாள், பாசத்தோடு!ஆள், ஊதி இருந்தாள். தொள தொளத்த சதையும், உப்பிய முகமும், அவள், ஆட்டத்தை விட்டு, வெகுநாட்களாகி விட்டது என்பதை சொன்னது.''என்ன செய்ற சரோஜா...'' என்றான்.''இருக்கேன்... இப்ப தான் ஆட்டமும் இல்ல; அதனால, கையில நோட்டும் இல்ல. மெஸ்சுல, சமையல் வேலை பாக்குறேன்; ஆறாயிரம் தர்றாங்க. ம்... அந்த நாள்ல, சோழவந்தான் ஆட்டத்துல, கவுன்சிலர் பாண்டி, 25,000 ரூபாய் நோட்டுல பணமாலை போட்டாரு... அந்த பேச்செல்லாம் இப்ப எடுபடுமா,'' என்று, நீட்டி முழக்கி பெருமூச்சு விட்டாள்.''அம்புட்டு சம்பாதிச்சேன்னு சொல்ற... ஒண்ணையும் காணோம்,'' என்றான், அவள் வெறும் கழுத்தை பார்த்தபடி!''ஆமாலு... ஆடிட்டு வந்த காசு, ஆடித்தேன் போச்சு. எதுக்கு அந்த பேச்செல்லாம்... கொண்டவன் பாதி, திண்டவன் பாதி, பத்தாதுக்கு கெடா மார்க் சாராயமும், நாட்டுக்கோழி குழம்பும் இல்லாட்டி, தூக்கம் வர மாட்டேங்குது. எல்லாம் போச்சு,'' என்று வருத்தப்பட்டாள்.அவளைப் பார்க்க பாவமாய் இருந்தது.''ஏன் பரமுண்ணே, இப்பயும் எங்கனாச்சும் ஆட்டத்துக்கு கேட்குறாங்களா?'' என்று ஆவலுடன் கேட்டாள்.அவன், அமைதியாய் இருந்தான்.''ஐய, எனக்கில்ல... இனி, நான் ஆடி யாரு பாப்பா... எனக்கு ஒரு மக இருக்கா. பேரு சுந்தரி... சின்னதுல என்னை பாத்தியே... அதை விட, 'சோக்கா' இருப்பா; அவளை ஆட்டத்துல இறக்கணும். என்னை மாதிரியே தான் அந்த கழுதையும், ஆட மாட்டேங்குது; பின்னால நான் புரிஞ்சுக்கலயா... அதுபோல, அதுவும் புரிஞ்சுக்கும்.''சூப்பர் சுந்தரின்னு பேர போட்டா, இன்னும், 'கிளாமர்' அள்ளிக்கும். நான் ஆட்டத்துல இருந்து ஒதுங்கிட்டதால, எனக்கு அந்த நிலவரம் எதுவுமே தெரியல. நீ உதவி செய்ண்ணே...''ஒரு நொடி, அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தான். கருநாக ஜடையில், பாவாடை, சட்டையில் நின்ற அந்த கபடமற்ற முகம் கண்ணிலாடியது; அந்த உருவத்திற்கு பக்கத்திலேயே, நிழலாய் இன்னொரு முகம் வந்து போனது... அது, அவள் மகள் சுந்தரியின் முகமாய் இருக்கலாம்!தலையை சிலுப்பிக் கொண்டான்.''நீ வேற... ஆட்டமெல்லாம் முடங்கிப் போய் நாளாச்சும்மா... நான், இப்ப தரகு வேலை பாக்குறேன். முன்ன மாதிரி, ஆட்டத்தை நம்பி காலம் தள்ள முடியாதுல... சும்மா இந்தப் பக்கம் வந்தேன்... அதான், உன்னை பாத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்... சரி வரட்டுமா...'' என்று விடைபெற்று, அங்கிருந்து புறப்பட்டான்.பேருந்து நிலையத்தில், ''என்னாச்சு முடிச்சுட்டயா...'' ஆவலாய் கேட்டான்.''பச்... அவ குடும்பம், குட்டின்னு ஆயிட்டா... பாக்குறதுக்கு பீப்பா மாதிரி இருக்கா. அவளை, 'புக்' செஞ்சா, ஊர்காரனுங்க கட்டி வச்சு உதைப்பானுங்க. தவிர, ஆடறத விட்டுட்டேன்னுட்டா,'' என்றான்.''அவ ஆடாட்டி கெடக்குது... அவளுக்கு மக இல்லயா,'' என்றான், கண்களில் ஆசை மின்ன!''ரெண்டும் ஆம்புள்ள புள்ளயா பெத்து வச்சிருக்கா உதவாக்கரை... சரி வா... கரகாட்டம் இல்லாட்டி, திருவிழா நடக்க மாட்டேன்னா சொல்லுது... பொழுதோட ஊர் போய், நல்லம்மா தியேட்டர்ல, கரகாட்டக்காரன் ரெண்டாவது ஆட்டம் பாத்து திருப்திப்பட்டுக்கலாம்,''என்று சொல்லி, அவன் தோளில் கை போட்டு நடந்தவனின் மனசு, ஏதோ பரிகார நிவர்த்தனம் செய்தது போல், நிம்மதியாய் இருந்தது. எஸ்.மானஸா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !