மீண்டு வருவோம்!
ஐரோப்பாவில், 18ம் நுாற்றாண்டில், ஜார்ஜ் ப்ரடெரிக் மாண்டல் எனும் இசைக்கலைஞர், பாடல்களுக்கான சங்கீதக் குறியீடுகள் எழுதுவதில் மிகவும் பிரபலமாக விளங்கினார். அவர் எழுதிய சங்கீதக் குறியீடுகளை வைத்து, எளிமையாக சங்கீதம் இசைக்கலாம். 40 ஆண்டுகள் பேரும் புகழுமாகச் செல்வச்சிறப்போடு வாழ்ந்தார்.ஒருநாள், திடீரென்று, இசைமேதையை, பக்கவாத நோய் தாக்கி, உடலையும், உள்ளத்தையும் முடக்கிப் போட்டது. மருத்துவம் எதுவும் பலனளிக்க வில்லை.'பிரான்சில் உள்ள நீர் ஊற்றுகளில் சில நாட்கள் நீராடினால், பக்கவாதம் தீர வழிபிறக்கும்...' என்று, சிலர் சொல்ல, பிரான்சுக்குப் போனார். நீரூற்றுகளில் நீராடியும், பலன் இல்லை.அப்போது தான், அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது.'அடாடா... இவ்வளவு நாட்களும் இறைவனிடம் முறையிடாமல் இருந்து விட்டோமே...' என்று வருந்தியவர், இறைவனை தியானித்து முறையிட்டார். விரைவிலேயே அவர் நோய் குணமானது.அந்த நேரத்தில், புது பிரச்னை முளைத்தது. இசைமேதையின் இசையமைக்கும் சக்தியும் குறைந்து போனதால், வருமானம் இல்லை. வறுமையின் பிடியில் அகப்பட்டு, லண்டன் வீதிகளில் பைத்தியக்காரனைப் போல் திரிந்து கொண்டிருந்தார். மனம் வெதும்பிய நிலையில், 'தெய்வமே... வறுமையில் இவ்வாறு அலைவதற்காகவா, என்னை நோயிலிருந்து மீட்டாய்...' என்று புலம்பி, வீடு திரும்பினார்.அவருக்காக ஒரு கடிதத்தொகுப்பு காத்திருந்தது. எடுத்துப் பிரித்துப் பார்த்தார். அனைத்தும் தெய்வத்தைப் பற்றிய பாடல் வரிகளாக இருந்தன. கூடவே, 'தாமதம் செய்யாமல் இதற்கு உடனடியாக இசையமைத்து, ஸ்வரக் குறிப்புகள் எழுதுங்கள். இது இறைவனின் உத்தரவு...' என்ற கடிதமும் இருந்தது.'ஜைனன்' எனும் பிரபலமான கவிஞர், அந்த வேண்டுகோளை அனுப்பியிருந்தார்.'உலகம் வெறுத்தது அவனை; உள்ளவர் எவரும் அவனுக்கு, முன் வரவில்லை உதவி செய்ய; இரக்கம் கொண்டார் எங்குள்ளார் என, ஏங்கியலைந்தான் வீதியெங்கும். உதவ மறுத்த ஊராரோ, ஓடி மறைந்தனர் அப்போதே...' எனும் பாடல் வரிகள் பார்வையில் பட்டன. 'நம் நிலைமையும் அப்படித்தானே இருக்கிறது...' என்று தனக்குள் சொல்லிக்கொண்ட இசைமேதைக்கு, தெய்வம் காக்கும் என்ற எண்ணம், புதிய தெம்பைத் தந்தது. வற்றிப் போயிருந்த சங்கீத ஊற்று மீண்டும் அவருக்குள் பிரவாகம் எடுத்தது; உற்சாகத்தோடு இசையமைக்க உட்கார்ந்தார். 24 நாட்களில் ஓர் அற்புதமான இசையமைப்பை உருவாக்கினார். அது மிகவும் பிரபலமானது. பழையபடியே பேரும் புகழும் அடைந்தார்.உலகப்புகழ் பெற்ற இசைமேதையின் வாழ்வு இது. தாழ்வைத் தந்த தெய்வம், தவறாமல் துயரம் தீர்த்து மறுபடியும் உயர்வளிக்கும். சந்தேகம் வேண்டாம்! ஆன்மிக தகவல்கள்கோவிலில், மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலம், நம் விளக்கை ஏற்றக் கூடாது; தீப்பெட்டியால் தான் விளக்கேற்ற வேண்டும்.பி. என். பரசுராமன்