உள்ளூர் செய்திகள்

மனசு தான் காரணம்!

ஞாயிற்றுக்கிழமை -'டிவி'யில் விவாதமேடை நிகழ்ச்சியொன்றை பார்த்து, ரசித்துக் கொண்டிருந்தேன். மேடை பயம் இன்றி, சிறுவர், சிறுமியர் எவ்வளவு அழகாக பேசுகின்றனர். நிச்சயமாக, இந்த, 'ஜெனரேஷன்' புத்திசாலித்தனமானது தான்.காலை டிபனாக, பூரி - உருளைக்கிழங்கு மசாலாவை தட்டில் எடுத்து வந்தாள், மல்லிகா.''மிருதுளா எங்கே...'' என்றேன்.''அவ, பாட்டி கூட கடைக்கு நோட்புக் வாங்க போயிருக்கா; அவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டாங்க,'' என்றாள்.அப்போது, பக்கத்து வீட்டு மாமி, ''என்ன மல்லிகா இன்னும் ரெடியாகலயா?'' என்று கேட்டபடி வந்தார்.''இதோ, ஒரு நொடியில் புடவை மாற்றி வந்துடறேன்,'' என்று கூறி, ''ஏங்க... இன்னைக்கு மாமியோட பெண் ஸ்வேதாவ, கோவில்ல வைச்சு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பெண் பாக்குறாங்க; பிடிச்சுதுன்னா, அப்படியே வெற்றிலை - பாக்கு மாத்துறோம்,'' என்று கூறி, புடவை மாற்ற, அறைக்குள் போனாள்.''உக்காருங்க மாமி... ஸ்வேதாவ வேணாம்ன்னு சொல்ல யாருக்கும் மனசு வராது. இன்னைக்கே நிச்சயம் செய்துடுங்க; நாள் நல்லாயிருக்கு,'' என்று, சம்பிரதாயமாக சொல்லி வைத்தேன்.சிறிது நேரத்தில், நெற்றியில் பொட்டு, தலையில் பூ, கழுத்தில் தாமரை பூ அட்டிகை அலங்கரிக்க, பட்டுப்புடவை சரசரக்க, குத்து விளக்கு போல் பிரகாசமாக வந்த மல்லிகாவை பார்க்கும் போது, பரவசமாக இருந்தது.இருவரும் விடை பெற்றுச் சென்றனர்.'டிவி'யில் விவாதமேடை நிகழ்ச்சி, சிறப்பாக நடைபெற்றது.எட்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடை நிகழ்ச்சி, என் வாழ்க்கையையே திசை திருப்பிய சம்பவம், ஞாபகத்திற்கு வந்தது.அப்போது, நான், எம்.பி.ஏ., முடித்து, வங்கியில் ஆபிசராக வேலையில் சேர்ந்திருந்த நேரம்...விவாத மேடை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, நானும், நண்பர்களும் சென்றிருந்தோம். விளையாட்டாகவும், வேடிக்கையாகவும், பொழுதுபோக்குவதற்கு தான் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். ஆனால், விவாதம், இளம் விதவைகளின் வாழ்க்கை பிரச்னையை தொடவே, விவாதம், சீரியசாக போய்விட்டது.இளம் விதவைகளின் பிரச்னைகளைப் பற்றி மிக அருமையாக பேசினாள், அந்த அழகிய இளம்பெண். அப்புறம் தான் தெரிந்தது... அவளே கணவனை இழந்தவள் என்று! அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும், அம்பென இதயத்தை தாக்கியது. 'ஒரு இளம் பெண், கணவனை இழந்து தவிப்பது கொடுமையென்றால், சமூகம், அவர்களை நடத்தும் விதம் இருக்கிறதே, அது, அதைவிட பெரிய கொடுமை. அவளுக்கு பூ, பொட்டு மறுக்கப்படுகிறது; அலங்காரம் அங்கீகரிக்கப்படுவது இல்லை; எந்த மங்கள நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள முடியாது.'ஆனால், மனைவியை இழந்த கணவர்களுக்கு, இந்நிலை இல்லை. மனைவிக்கு எதிர்ப்பதம் கணவன்; மகளுக்கு எதிர்பதம் மகன்; விதவைக்கு எதிர்பதம் என்ன...' என்று ஆவேசமாக பேசிய போது, கூட்டத்தினர், 'ஷேம்... ஷேம்...' என்று குரல் கொடுத்தனர்.'விதவைகளை கொடுமைப்படுத்தும் செயல், பரம்பரையாக வந்த மூடநம்பிக்கை; பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல் போன்ற மூடநம்பிக்கைகளை ஒழித்து கட்டியது போல, விதவைகளின் கட்டுப்பாடுகளையும் உடைத்தெறிய வேண்டும்... இளம் விதவைகளின் வாழ்க்கையில், மீண்டும் வசந்தம் வீச வேண்டும். இங்கு, மண முடித்து வாழ ஆசைப்படும் விதவைகள் சார்பாகவே பேசுகிறேன்... என் பேச்சைக் கேட்டு, அனைவரும் கை தட்டி உற்சாகப்படுத்தினீர்கள். அது மட்டும் போதாது... இளைஞர்கள் வீறு கொண்டு எழ வேண்டும். உங்களில், எத்தனை பேர் இளம் விதவைகளுக்கு வாழ்க்கை தரப் போகிறீர்கள்...' என்று, அவள் வீராவேசமாக பேசிய போது, நான் எழுந்து நின்றேன்.நான் என்ன பேசப் போகிறேன் என்ற ஆர்வத்தில் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்த நான், 'இதோ நான் இருக்கிறேன்... என் தாய், இளம் விதவை தான்; நான் பிறந்த ஆறு மாதத்திலேயே, என் தந்தை இறந்துவிட்டார். அவர் விதவையாகி எவ்வளவு இன்னல்களுக்கு ஆளானார் என்பதை, எனக்கு கதை கதையாக சொல்லி இருக்கிறார். எனவே, உறுதியாக கூறுகிறேன்... நான், எம்.பி.ஏ., படித்து, வங்கியில் பணியாற்றுபவன்; நீங்கள் விரும்பினால், உங்களையே திருமணம் செய்து கொள்கிறேன்...' என்று கூறிய போது, கூட்டம் மொத்தமும் ஆரவாரம் செய்தது.நிகழ்ச்சி முடிந்ததும், எங்கள் இருவரையும் அழைத்து பேசினார், நிகழ்ச்சி அமைப்பாளர். பின், இருவரும் தனியாக பேசி, நல்ல முடிவுக்கு வரச் சொன்னார். அதே போன்று, இருவரது எண்ணங்களும், ஒரே அலைவரிசையில் இருந்ததால், அவரது தலைமையில், திருமணம் செய்ய முடிவு செய்தோம்.நிகழ்ச்சி முடிந்து, நான் வீடு செல்லும் முன், திருமண செய்தி, தாயாரிடம் சென்று விட்டது.'நீ எப்படி, என் சம்மதம் இல்லாம கல்யாணம் நிச்சயம் செய்த... அதுவும், விதவை பெண்ணை! இந்த வீட்டுல, நான் ஒருத்தி விதவையா இருக்கிறது போதாதா... ஒரு மகாலட்சுமி, மங்களகரமாக வந்து, விளக்கேற்றி வைக்கணும்ன்னு நான் நினைக்கிறது தப்பா...' என்றாள்.'தப்பு இல்லம்மா... ஆனா, கணவன் இறந்ததாலேயே, ஒருத்தி அமங்கலமாயிடுவான்னு நினைக்கிறது தான் தப்பு; இதனால தான், ஒரு பெண்ணே, பெண்ணோட முன்னேற்றத்திற்கு எதிரியாயிடுறீங்க.'நீங்க, சின்ன வயசுலேயே கணவனை இழந்து, கைக்குழந்தையான என்னை வச்சுக்கிட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டீங்க; நல்ல விஷயங்களில் கலந்துக்க முடியலன்னு வருத்தப்பட்டீங்க; மத்தவங்க ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி, மனசுடைஞ்சு அழுது நான் பாத்துருக்கேன்.'அந்த பெண்ணுடைய இன்றைய நிலையை நினைச்சு பாருங்க... ஒரு பெண், அதுவும் இளம்பெண்... ஆண் துணை இல்லாம வாழறது, ரொம்ப கஷ்டம். நீங்களும், அந்த வயசு தாண்டி வந்ததுனால, என்னை விட, உங்களுக்கு நல்லா புரியும். யோசிங்கம்மா... நல்ல அறிவான, அழகான பொண்ணு...'சிறிது நேரம் மவுனமாக இருந்த என் தாய், இறுதியில், 'நீ சொல்றது நிஜந்தான்டா... மங்களம், அமங்கலம்ங்கிறதெல்லாம், நம் மனசை பொறுத்த விஷயம்; மற்றவங்களுக்கு இதுமாதிரி நிலைமை வரும் போது, ஒரு மாதிரி யோசனை செய்வோம்; அதுவே, நம் வீட்டுக்கு வந்தா, நேர் எதிரா பேசுவோம். எல்லாம், மனம் சம்பந்தப்பட்ட விஷயம் தான். இவளை நீ கல்யாணம் செய்துக்க, மனப்பூர்வமா சம்மதிக்கிறேன்...' என்று சொல்லி, மல்லிகாவை, மருமகளாக ஏற்றுக் கொண்டாள்.இது, என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமானது இப்படித்தான்.அம்மாவும், என் மகளும் கடையிலிருந்து திரும்பி விட்டனர்.வந்ததும், ''எங்கேடா என் மருமக?'' என்று கேட்டாள், அம்மா.''பக்கத்து வீட்டு மாமியோட கோவிலுக்கு போயிருக்காம்மா... ஸ்வேதாவ பெண் பாத்து, நிச்சயம் செய்றாங்களாம்,'' என்றேன்.''மல்லிகா ராசியான பெண்; எந்த காரியத்துக்கு போனாலும், அது நல்லபடியா முடியும். அதனால தானே, இந்த தெருவே அவள தலையில தூக்கி வெச்சி கொண்டாடுது,'' என்று அம்மா சொன்ன போது, எனக்கு பெருமையாக இருந்தது.மல்லிகை மணாளன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !