திண்ணை
நவம்பர் 19 - இந்திரா பிறந்த நாள்ஒளிப் பதிப்பகம், மலையமான் எழுதிய, 'அன்னை இந்திரா' நுாலிலிருந்து: டீன் - ஏஜ் பருவத்தில், தன்னை ஒத்தவர்களை வைத்து, ஒரு படை அமைத்திருந்தார், இந்திரா. அது, கட்சி அறிவிப்புகளை எழுதும், கொடிகளை தயாரிக்கும், கூட்ட அறிவிப்புகளை மக்களிடம் எடுத்து செல்லும், தொண்டர்கள் ஊர்வலம் போகும்போது தண்ணீர் கொடுக்கும்.மேலும், போலீசாரின் பேச்சை, அருகில் விளையாடியபடி, மனதில் பதிந்து, சம்பந்தப்பட்டவரிடம் அந்த தகவல் அனுப்பும்.இந்த சிறுவர் பட்டாளத்தின் வீர தீர செயல்களை, தலைவர்கள் வரை அறிந்தனர்.ஒரு சமயம், அதற்கு சரியான பெயர் கிடைக்காததால், தன் அம்மாவிடம், 'அதற்கு ஒரு பெயர் சொல்லம்மா...' எனக் கேட்டார், இந்திரா.'வானர சேனை...' என்றார், அம்மா.இதை கேட்டு, இந்திரா முகம் வாடியது.'அம்மா, நாங்கள் எவ்வளவு சிறப்பாக வேலை செய்கிறோம். எங்களைப் போய் மரத்தில் ஏறி சேட்டை புரியும் குரங்கு கூட்டம் என்று சொல்கிறாயே...' என்றார்.'நான் சொல்வதை நீ தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய்...''அம்மா, எங்கள் அரிய சேவையை, குரங்கு சேட்டை என நினைத்துக் கொண்டீர்களா...''உனக்கு, ராமாயணம் தெரியுமா...''ஓ நன்றாக தெரியும்...''சரி, அதில் ராமனுக்கு லட்சுமணனை போன்று, சிறந்த உதவி செய்தவன் யார்?''அனுமன்...''எப்படி?''அனுமனும், அவனுடைய தலைவனுமாகிய சுக்ரீவன், தன் வானரப் படையுடன், ராமனுக்கு உதவி செய்தனர்...' என்றார், இந்திரா.'அது மட்டுமல்ல, சாகத் துணிந்த சீதையை காப்பாற்றியதும், அனுமன் தான். மயங்கி கிடந்த லட்சுமணனை உயிர்ப்பித்தவனும், அனுமன் தான். இப்படி பல அரிய செயல்களை அனுமன் செய்தான். அவன் யார்?''ஒரு வானரம்...''அப்படி இருக்கும்போது, ராமானாலே போற்றி புகழப்பட்ட அந்த வானரத்தின் பெயரில் ஒரு சேனை அமைவது சிறப்பு தானே?' என்றார், அம்மா.உண்மையை புரிந்து கொண்ட இந்திரா, தன் படையினருக்கு, 'வானர சேனை' என்ற பெயரை சூட்டினார்.க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து: கடந்த, 1969ல், பல எதிர்ப்புகளுக்கிடையே, பெரிய வங்கிகளை, தேசிய உடைமையாக்கிய இந்திரா, 'என்னுடைய திட்டங்கள் எல்லாம் ஏழை - எளிய மக்களுக்கு உடனே போய் சேரப் போவதில்லை என்று, தெரியும். எனினும், ஒரு மாறுதலை துவக்கி வைக்கிறேன்.'இன்று துவங்கும் ஒரு நன்மை, நுாறாகவும், ஆயிரமாகவும், லட்சமாகவும், கோடியாகவும் உயர்ந்து அனைவரையும் அடையும் என நம்புகிறேன்.'பாரத நாட்டில், இன்னும் பலர், வறுமையில் வாடுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில், பொருளாதாரத் துறையில், இன்னொரு சுதந்திரப் போரை துவக்கி இருக்கிறேன்.'நான் பெற்ற பதவிகள் மற்றும் பெருமைகளை, அப்பா நேருவின் கொடை என்ற கூற்றை ஏற்கவில்லை. என் வாழ்க்கையை நெறிப்படுத்தியதில், என் அப்பாவுக்கு பங்கு உண்டு. அவர் உருவாக்கிக் கொடுத்த வாய்ப்புகளை நான் திறமையுடன் பயன்படுத்திக் கொண்டேன் என்பது தான் உண்மை.'நம் நதிகளிடையே பாலங்களை கட்டினால் மட்டும் போதாது. மனித இதயங்களை இணைக்கும் பாலங்களை உருவாக்க வேண்டும். அன்பு, நட்பு, சகோதரத்துவம் மூலம், அத்தகைய பாலங்களை கட்ட முடியும்...' என்றார். நடுத்தெரு நாராயணன்