அன்புடன் அந்தரங்கம்!
அன்புச் சகோதரிக்கு —என் வயது, 45; பெற்றோருக்கு ஒரே பையன். உடன் பிறந்தோர் யாரும் இல்லை. கல்லூரியில் படிக்கும் போது, வெளியூரில் இருந்து எங்கள், ஊருக்கு படிக்க வந்த ஒரு பெண்ணை விரும்பினேன். அவளும் எங்கள் இனம் தான். எங்கள் காதல் மூன்று மாதம் தொடர்ந்த நிலையில், விஷயம் என் தாயாருக்கு தெரிந்து, அவளுடன், சண்டை போட்டு, அவளின் பெற்றோர் ஏழைகள் என்பதால், அவளை ஊரை விட்டு துரத்தினாள். இதற்கு பின்பும், 'பெற்றோர் சம்மதத்துடன் தான், திருமணம் செய்ய வேண்டும்...' என்ற வைராக்கியத்தில் காத்திருந்தேன்.ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பின், பதிவுத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர் அவளின் பெற்றோர். நானும், என் பெற்றோருக்கு தெரியாமல் அவளை கோவிலில் மணம் புரிந்து, அதை பதிவும் செய்து, வீட்டிற்கு வந்து விட்டேன்.ஐந்து ஆண்டுகளுக்கு பின், என் திருமணப் பேச்சை பெற்றோர் எடுத்த போது, அவளைத் தான் மணமுடிப்பேன் என்று உறுதியாக நின்றதால், வேறு வழியின்றி சம்மதித்தனர். ஆனால், என் திருமண சந்தோஷம் மூன்று மாதங்கள் கூட நீடிக்கவில்லை. காரணம், என் தாயார் மன வியாதியால் பாதிக்கப்பட்டார். இதனால், என் மனைவி அவளின் சொந்த ஊருக்கே சென்று விட்டாள். அங்கு, இவளை விட, 15 வயது மூத்த மருத்துவரோடு சினேகம் ஏற்பட்டு, அவரோடு வாழ்ந்து வந்தாள். அந்த நபருக்கு ஏற்கனவே குடும்பம் உள்ளது. 10 ஆண்டுகள் கழித்து, அந்த நபரின் மூலம் கருத்தரிக்கவே, என்னை முறைப்படி விவாகரத்து செய்தாள்; நானும் சம்மதித்தேன்.இதற்கு நடுவில், என் மூலம் பிறந்த மகனும், அவளுடனே இருந்தான். இந்த மன உளைச்சல், வேதனையில் தானோ என்னவோ, அவளால், எந்த வீட்டிலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மூன்று ஆண்டுகளில், 25 வீடுகள், மாற்றியுள்ளாள். இதனாலேயே நான்கு ஆண்டுகளுக்கு முன், அந்த மருத்துவர், இவள் பெயரில் சொந்த வீடு கட்டிக் கொடுத்தார். ஆனாலும், தெருவில் இவளுக்கும் மற்றவர்களுக்கும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், நான் தான் தூண்டி விடுகிறேன் என நினைத்து, தெருவில் உள்ளவர்களை எல்லாம் அசிங்கமாக, கொச்சையான வார்த்தைகளில் திட்டுகிறாள். இதற்கு மத்தியில் தான், ஒரு பாவமும் அறியாத என் மகனும், அவளது மகளும் வளர்கின்றனர். என் மகன், தற்போது, பிளஸ்2 பொது தேர்வு எழுதப் போகிறான்; பெண் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்.விவகாரத்துக்குப் பின் கூட, இன்று வரை, மகனுக்காகவும், அவளுக்காகவும் பல லட்சங்கள் செலவு செய்துள்ளேன்.என் மகனுக்காக, இன்று வரை மறுமணம் புரியாமல் தியாக வாழ்க்கை வாழ்கிறேன். இந்தப் பிரச்னைகளுக்கு மத்தியில், செக்யூரிட்டியாக வந்தவனிடம் மனதைப் பறி கொடுத்துள்ளாள். அவனுக்கு வேறு ஒருத்தியுடன் திருமணம் என்றவுடன், குழந்தைகளை அம்போ என விட்டுவிட்டு, 10 நாட்கள் வீட்டை விட்டு போய் விட்டாள். அப்போதும் கூட, நான் தான் காப்பாற்றி, 'குழந்தைகளுக்காக இருக்க வேண்டும்...' என அறிவுரை கூறினேன்.இப்போது என் கேள்விகள்...* திரும்ப இவளை மனைவியாக ஏற்றுக் கொள்ளலாமா?* என் மகனை மட்டும் சட்டப்படி என்னிடம் அழைத்துக் கொள்ளலாமா?* வேறு திருமணம் புரியலாமா, என் மகனை, என்ன செய்வது?— இப்படிக்கு, உங்கள் பதிலை எதிர்நோக்கும் அன்புச் சகோதரன்.அன்பு சகோதரருக்கு —உன் மனைவி ஒரு நிம்போமேனியாக்; ஆணின் எந்த தாம்பத்யத்திலும், திருப்தி அடையாத பெண்கள் இவர்கள். மலர் விட்டு, மலர் தாவும் வண்டுகள் போல, இவர்கள் வண்டு விட்டு வண்டு தாவும் மலர்கள். இவர்கள் உடல் சுகத்துக்காக, குடும்ப கவுரவத்தை துறந்து, பிள்ளைகளின் எதிர்காலத்தை நாசமாக்கி, தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி கொட்டிக் கொள்வர்கள்.உன் முன்னாள் மனைவியின் துர்நடத்தையால், நீ, உன் மகன் மற்றும் மருத்துவர் மகளும், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளீர்கள்.நீ மறுமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தியாக உணர்வால் அல்ல, மீண்டும் சுடுமோ என்கிற பயத்தால்! ஆப்பை அசைத்து, வால் மாட்டிக் கொண்ட குரங்கின் கதை தான், உன்னுடைய கதை!நீ கேட்டிருக்கும் மூன்று கேள்விகளுக்குமான பதில்கள்:* அந்த இழிபிறவியை, எதற்கு நீ மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்? இன்னும் பல ஆண்களுடன் அவள் தொடர்பு கொள்ள, நீ தொடர்பு பாலம் ஆக போகிறாயா... விவாகரத்து பெற்றதுடன், அவளுக்கும், உனக்குமான உறவு முறிந்து விட்டது. அவளை சந்தித்து, எந்த அறிவுரையும் கூற முயற்சிக்காதே! அவள் மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச ஈர்ப்பையும் கத்தரித்து விடு.* உன் மகன் யாரிடம் இருக்க விரும்புகிறானோ, அங்கேயே இருக்கட்டும். தாயாரின் துர்நடத்தையை காண சகிக்காது, உன்னிடமே வெகுசீக்கிரம் வந்து விடுவான்; அப்போது, ஆதரவு கரம் நீட்டு.* இரண்டாம் திருமணம் உனக்கு தேவையில்லாதது; அது, தோற்றுப் போகும் வாய்ப்பு உள்ளது. ஊரறிய உனக்காக ஒன்பது ஆண்டுகள் காத்திருந்த ஒரு பெண், காதலித்த கணவனை மூன்றே மாதங்களில் விட்டு போனது ஏன்? உன் முன்னாள் மனைவியின் துர்நடத்தைக்கு, நீயும் மறைமுக காரணமாய் இருக்கலாம். நீ தொடர்ந்து ஆன்மிகத்தில் ஈடுபடு; ஆன்மிகம் மனித பலவீனங்களை மூழ்கடிக்கும்.உன் மகனை நீ ஒன்றும் செய்ய வேண்டாம்; அவன் சிறப்பாக படித்து, ஒளிமயமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்வான்.வண்டு விட்டு வண்டு தாவும் மலருக்கு, தகுந்த தண்டனையை, இறைவன் பரிசளிப்பான்!— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.