அன்புடன் அந்தரங்கம்!
அன்பு அம்மாவுக்கு -என் வயது, 25. ஆங்கிலத்தில் டாக்டரேட் செய்யும் ஆராய்ச்சி மாணவி. எனக்கு, மூன்று அண்ணன்கள். மூவருமே நன்கு படித்து, வேலைக்கு போய் திருமணமாகி வாழ்க்கையில், 'செட்டில்' ஆனவர்கள்.நான் கடைக்குட்டி. சிறு வயதில் ஆண்களின் உடைகளை போட்டு திரிந்திருக்கிறேன்.மாவட்ட ஆட்சி தலைவரிடம் அந்தரங்க காரியதரிசியாக இருந்து, விருப்ப ஓய்வு பெற்றவர், அம்மா; பிறமொழி இலக்கியங்களை, தமிழில் மொழி பெயர்ப்பவர், அப்பா.என் வழிகாட்டியின் வயது, 58 இருக்கும். 6 அடி உயரம். அவர் ஆடை அணியும் நேர்த்தியில், மேற்கத்திய ஆண்கள் தோற்று போவர். அவர் பேசும் ஆங்கிலம், காதுகளில் தேன் ஊற்றும்.அவரிடம் ஆராய்ச்சி மாணவியாக சேர்ந்தபோது, அவரின் மனைவி உயிருடன் இருந்தார். அவர்களுக்கு ஒரே மகன். அமெரிக்காவில் வசிக்கிறான். அவரது மனைவியும், நானும் உயிர்தோழிகள். வழிகாட்டியின் வீட்டு சமையலறையில் புகுந்து சாப்பிடும் அளவுக்கு, சுதந்திரத்தை பெற்றிருந்தேன். ஒருநாள், 'நான் மட்டும், 35 ஆண்டுகளுக்கு முன் பிறந்திருந்தேன் என்றால், உங்கள் புருஷனை கொத்திக்கொண்டு போயிருப்பேன்...' என்றேன், அவரது மனைவியிடம். 'அவரை நான் மேய்ச்சு மேய்ச்சு களைச்சு போயிட்டேன். இப்பயும் ஒண்ணும் கெட்டு போகல. அவரை நீ கல்யாணம் பண்ணி, எனக்கு சக்களத்தி ஆயிடு. சக்களத்தி சண்டையை ரசிச்சு போடுவோம்...' என்றார், அவரது மனைவி. 'சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். அவரை, நீங்களே வச்சுக்கங்க. எனக்கு, அவரோட ஷேக்ஸ்பியரும், ஷெல்லியும் போதும்...' எனக் கூறி, சிரித்தேன்.ஒரு வாரம் கழித்து அவரது வீட்டுக்கு போனேன். வீட்டில் மயான அமைதி. சுருண்டு படுத்திருந்தார், வழிகாட்டி. 'மாஸிவ் ஹார்ட் அட்டாக்' வந்து இறந்து விட்டார், அவரது மனைவி. அவருக்கு ஆறுதல் கூறினேன். அதுவரை எனக்குள் ஒளிந்திருந்த காதல் தலை துாக்கியது. அடுத்தடுத்த நாட்களில், வழிகாட்டியின் வீட்டிற்கு அதிகாலையில் போவேன். மூன்று நேரமும் சமைத்துக் கொடுப்பேன். இரவு, 10:00 மணிக்கு வீடு திரும்புவேன்.என் நடவடிக்கைகளின் உள்ளர்த்தத்தை கண்டு, 'உன் ஆசை, அர்த்த பொருத்தமில்லாதது. தயவுசெய்து, என் வீட்டுக்கு வராதே. பல்கலைக் கழகத்திற்கு கடிதம் எழுதி, வழிகாட்டியை மாத்திக்க. ஒருநாளும், பொருந்தா காமத்தை ஆதரிக்க மாட்டேன்...' என, கண்டிப்பான குரலில் கூறினார். 'இந்த பிரபஞ்சத்தை விட, உங்களை பெரிதாக காதலிக்கிறேன்...' என, அழுதேன்.என் அப்பாவுக்கு போன் செய்து, எச்சரித்தார், வழிகாட்டி. அழுது புலம்பி, என் மனதை மாற்ற முயற்சிக்கின்றனர், பெற்றோர். நீங்கள் சொல்லுங்கள் அம்மா, என் காதல் தவறானதா... உங்களின் ஆலோசனையை கேட்டு, நடக்க தயாராக இருக்கிறேன்.— இப்படிக்கு,அன்பு மகள்.அன்பு மகளுக்கு,கண்மூடித்தனமான காதல்களை, நான் ஒரு போதும் ஆதரித்ததில்லை. காதலுக்கு உடல் பொருத்தம், மனப்பொருத்தம், வயது பொருத்தம் தேவை. 'அவன் இலக்கியம் பேசும் புத்திசாலி கிழவன். அதனால், அவனை காதலிக்கிறேன்...' என, நீ கூறுவது, படு அபத்தமானது.இலக்கியங்களும், கவிதைகளும், சினிமாக்களும், மனித உணர்வுகளை செயற்கையாய் மிகைப்படுத்தி காட்டும் சாதனங்கள். அவற்றை பொழுதுபோக்காய் எடுத்து கொள்ளலாமே தவிர, வாழ்க்கையாய் தலையில் துாக்கி வைத்து கொண்டாடக் கூடாது.வழிகாட்டி - மாணவி உறவு, குரு - சிஷ்யை உறவு போல. அதை, காதலன் - காதலி உறவாக மாற்றி கொச்சைப்படுத்தக் கூடாது. திருமணமாகும் வரை, அவரின் ஷேக்ஸ்பியரும், ஷெல்லியும் உனக்கு தேவை. திருமணத்திற்கு பின், உன் தேவைகள் மாறி விடும். மனித வாழ்க்கையில் வயது மிக முக்கிய அம்சம். இந்த பொருந்தா காதலின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து, பொருத்தமான முடிவை எடு. பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு விண்ணப்பம் அளித்து, உன் வழிகாட்டியை மாற்று.மீண்டும் ஒரு காதல் வயப்படாமல் இருக்க, புதிய வழிகாட்டியை, பெண்ணாக பார். பெற்றோர் கை காட்டும் ஆணை திருமணம் செய்து, வாழ்க்கையில், 'செட்டில்' ஆகு, கண்மணி!— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.