உள்ளூர் செய்திகள்

பெற்றோரை மதிப்போம்!

'முதியோர் - பெற்றவர்கள், குடும்பத்துடன் இல்லங்களில் இருக்கலாம்; முதியோர் இல்லங்களில் இருக்கக் கூடாது...' என்று, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், தான் செல்லுமிடங்களில் எல்லாம் கூறுவார். இதை விளக்கும், வியாசர் சொன்ன கதை.சூரியகுல மன்னரான இட்சுவாகு, தன் மனைவியுடன், கங்காரண்யம் எனும் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தார். காட்டின் நடுவில் பெரிய காட்டுப்பன்றி, தன் மனைவி மற்றும் குட்டிப் பன்றிகளுடன் வந்து கொண்டிருந்தது. பெரிய வடிவான அதைக்கண்ட மன்னர், சில நிமிடங்கள் திகைத்து நின்றார்.அவரைப் பார்த்த ஆண் பன்றி, குட்டிகளை அழைத்து போய், மேரு மலையின் அடிவாரத்தில் மறைந்து கொண்டது.தன் மனைவியிடம், 'அன்பானவளே... மன்னர் வேட்டையாட வந்திருக்கிறார். கூடவே வேட்டை நாய்களும் வந்திருக்கின்றன. எப்படியும் நம்மை வேட்டையாடி விடுவார். நீ குழந்தைகளுடன் எங்காவது போய் தப்பித்துக் கொள். நான் போய் மன்னரை எதிர் கொண்டு, அவரைத் தடுக்க முயற்சி செய்கிறேன்...' என்றது. 'நீங்களும் எங்களுடன் வந்து விடுங்கள். எல்லாருமாக தப்பி போய் விடலாம். இல்லாதபட்சத்தில், நானும் உங்களுடன் சேர்ந்து போரிட்டு இறக்கிறேன். அன்பு, மானம், பொறுப்பு என்பவை, கணவன் - மனைவி இருவருக்கும் ஒன்றுதானே. அதனால், நானும் உங்களுடன் சேர்ந்து, எதிரியுடன் போரிட்டு உயிரை விடுவேனே தவிர, ஒரு போதும் தப்பி ஓட மாட்டேன்...' என மறுத்தது. ஒரு மலைமேல் ஏறி நின்று, வரும் பிரச்னையை எதிர்கொள்ளத் தயாராக இருந்தன. இருந்தாலும், அந்த நேரத்தில் தங்களைச் சூழ்ந்திருக்கும் குட்டிகளைப் பார்த்ததும், அவற்றின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.'குழந்தைகளே... பெரும்பிரச்னை ஒன்று சூழ்ந்துள்ளது. வீரர்களும், வேட்டை நாய்களுடன் வந்து விட்டனர். வயதான நாங்கள், அவர்களுடன் போரிட்டு இறப்பதையே விரும்புகிறோம். ஆனால், குழந்தைகளான நீங்கள், இந்தச் சிறு வயதிலேயே போரில் இறப்பது நியாயமல்ல.'நீங்கள் தப்பிச் சென்று, இம்மலையில் உள்ள குகைகளில் பதுங்கிக் கொள்ளுங்கள். எல்லா ஓசைகளும் அடங்கியபின் வெளியே வாருங்கள். உயிரைப் பாதுகாத்துக் கொள்வது, உங்கள் கடமை...' என்றன.பெற்றோரின் மன வருத்தத்தை உணர்ந்த குழந்தைகள், 'நீங்கள் துயரத்தில் இருக்கும்போது, பிள்ளைகள் மட்டும் தப்பித்து ஓடுவது மகா பாவம். தாயிடமிருந்து அமிர்த மயமான பாலைக் குடித்து வளர்ந்த மகன், அவளைத் துயரத்தில் ஆழ்த்தி ஓடிப்போவது மிகவும் கேவலமான செயல்.'அப்படிப்பட்ட மகன், நரகத்தில் கிடந்து துன்புறுவான். அந்த பாவத்தை நாங்கள் செய்யமாட்டோம். நாங்களும் உங்களுடனே இருந்து இறப்போம்...' என்றன.கணவன் - மனைவிக்கு உள்ள பொறுப்பையும், பிள்ளைகளின் கடமையையும் விலங்குகள் மூலமாக, வியாசர் சொல்லிக் கொடுக்கிறார். பெற்றோரை மதிப்போம்; உயர்வோம்! பி. என். பரசுராமன் ஆன்மிக தகவல்கள்!திருவிழாவில் பவனி வரும் தேரின் வடக் கயிற்றை காலால் மிதிக்கவோ, தாண்டிச் செல்லவோ கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !