உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

பேச தேரியாமல் பேசி...சமீபத்தில், ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஒரு ஸ்டேஷனில், ரயில் நின்ற போது, நான் இருந்த பெட்டியில், 'திருநங்கை' ஒருவர் ஏறி கைகளை தட்டி, 'ஏதேனும் பண உதவி செய்யுங்கள்...' எனக் கேட்டார். அங்கிருந்த ஒருவர், 'எனக்கு ஒரு முத்தம் தர்றியா, பணம் தர்றேன்...' எனத் துடுக்காகக் கேட்டார். உடனே, அத்திருநங்கை, அவர் கன்னத்தில், 'பளார்'ன்னு, ஓங்கி ஒரு அறை விட்டார்.அதிர்ந்து போய் பார்த்தவரிடம், 'ஏன்டா... இதை ஒரு பொண்ணுகிட்ட தைரியமா, உன்னால கேட்க முடியுமாடா. எங்களை ஏதோ இழி பிறவியைப் போல் பார்த்து, யாரும் வேலை கொடுக்காததுனாலதான் இப்படி வெட்கம், மானம் எல்லாத்தையும் விட்டுட்டு, கை நீட்டி பிச்சை எடுக்கிறோம். திருநங்கைன்னா, உனக்கு கேவலமா தெரியுதா? செருப்பு பிஞ்சுடும்...' என்று எகிறினார். அடி வாங்கிய நபர், அமைதியாக தலை குனிந்தார்.இனிமேலாவது, திருநங்கைகளை ஏளனமாக கருதுவோர் திருந்துவரா!— ஜி.சக்தி, திருப்பூர்.மனைவியை ஏய்க்கலாம் என்று நினைக்காதீர்கள்!சமீபத்தில், என் உறவுப்பெண் ஒருத்தியை, ஒரு விழாவில் சந்திக்க நேர்ந்தது. நலம் விசாரிக்கையில், அவர் மகனுக்கு இதயத்திலுள்ள இரண்டு வால்வில் ஒன்று சுருங்கி இருப்பதாக, மருத்துவர் சொன்னதாக சொன்னார். மேலும், இப்போதெல்லாம், யாரை பற்றியாவது கருத்து தெரிவித்தால், 'உன் பையனே உனக்கு தண்டனை. நீ, ஏன் மற்றவரை பற்றி பேசுகிறாய். வாயை மூடு...' என்று கூறி, அவள் கணவனே, மனதை நோகடிப்பதாக சொல்லி அழுதாள். யார் வீட்டில் தான் நோய் இல்லை; குறை இல்லை... அதற்காக முடங்கி போயா கிடக்கணும்! குறை இருந்தால் அதையே காரணம் காட்டி, மற்றவர்களின் குட்டுக்கு, தலையை காட்ட வேண்டுமா என்ன! அவலை மெல்லாதவர் ஒருவரும் இல்லை; பின், ஏன் இந்த மனவெறி. ஏமாந்த மனைவியை ஏய்க்கலாம் என்று நினைக்காதீர்கள். தாங்குகிறார் என்பதற்காக தாக்காதீர்கள். நல்ல எழுத்து நடுவில் இருக்க, கோண எழுத்து குறுக்கே வந்தது என்பதற்காக, திமிரெடுத்து அலையாதீர்கள். மனைவி இல்லன்னா மகத்துவமே இல்லை என்பதை புரிந்து, மனைவிக்கு மரியாதை கொடுங்கள்.— ராஜேஸ்வரி வெங்கட், சென்னை புது அனுபவம்! நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். சம்பிரதாய குசல விசாரிப்பு முடிந்ததும், 'காபியா, டீயா?' என்று கேட்ட நண்பர் மனைவியிடம், 'காபி, சுகர் இல்லாம...' என்றேன். இதை பக்கத்தில் நின்று கவனித்த, பத்தாம் வகுப்பு படிக்கும் நண்பரின் மகள், 'அங்கிள்! உங்களுக்கு சுகர் கம்ப்ளெய்ன்ட்டா, டோண்ட் வொர்ரீ, சூப்பரான டிரீட்மென்ட் சொல்றேன். பீஸ் தருவீங்களா?' என்று சிரித்தவாறே கேட்டாள். 'தாரளமாக தரேன், சொல்லு பார்ப்போம்...' என்றேன் ஆர்வம் பொங்க. 'எதை சாப்பிட்டாலும், அதிகபட்ச உமிழ்நீரை பயன்படுத்தி, நன்றாக மென்று, கூழாக்கி, உள்ளே அனுப்புங்கள். இந்த பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், சுகர் மட்டுமல்ல, பெரும்பாலான நோய்களுக்கு இது தான் சரியான மருந்து'ன்னு எங்க டீச்சர் சொல்லியிருக்காங்க என்றாள். 'நொறுங்க தின்றால் நூறு வயது' என்று முன்னோர் மொழி தான் எனக்கு நினைவுக்கு வந்தது, 'சரி, இதுக்கு பீஸ் உனக்கு எவ்வளவு வேணும்மா?' என்று புன்னகை மலர கேட்டேன். 'எனக்கு வேணாம் அங்கிள், எங்க ஏரியாவில், அனாதை முதியோர் இல்லத்துக்கு நன்கொடையா தாருங்கள்....' என்று டப்பாவை நீட்டினாள். பர்சிலிருந்து, 100 ரூபாய் தாளை எடுத்து கொடுத்து, நண்பர் மகளின் ஆரோக்கியமான அணுகுமுறையை, மனதாரப் பாராட்டினேன். — பி.ஜி.பி.இசக்கி, நெல்லை மாவட்டம் உடையில் கவனம் தேவை, பெண்களே!சமீபத்தில், வெளியூரில் நடந்த திருமணத்துக்கு, உறவினர்களுடன் சென்றிருந்தேன். அதிகாலையில் திருமணம் என்பதால், முதல்நாளே மண்டபத்துக்கு சென்று விட்டோம். அன்று இரவு அனைவரும் திருமண ஹாலில் படுதிருந்தோம். நள்ளிரவில், திடீரென, என் உறவுப் பெண்மணி ஒருவரின் சத்தம் கேட்டு, எல்லாரும் திடுக்கிட்டு விழித்துப் பார்த்ததில், அங்கு நின்றிருந்த நடுத்தர வயது மனிதரை கண்டபடி திட்டிக் கொண்டிருந்தார். விசாரித்த பின் தான் காரணம் தெரிந்தது.அந்தப் பெண் உறங்கும் போது, மார்புச் சேலை விலகியிருந்திருக்கிறது. அந்த நபர் போதையில் இருந்ததால், பக்கத்தில் படுத்து, சில்மிஷ வேலைகளை செய்திருக்கிறார். நாங்களும் நாலு சாத்து சாத்தி, அந்த நபரை மண்டபத்துக்கு வெளியில் தள்ளி, அகால வேளையில், கதவைத் திறந்து விட்ட வாட்ச்மேனையும், நாலு திட்டு திட்டினோம்.எனவே... பொது இடங்களில் தங்கும் பெண்மணிகள், முழு உடலையும் மறைக்கும் விதமாக, உடை அணிவதுடன், பாதுகாப்பான இடத்தில் தூங்குவது நல்லது.— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.நாகரிகமான இறுதி ஊர்வலம்!யாராவது இறந்து விட்டால், அதற்குண்டான ஈமக்கிரியைகளை, அவரவர் வழக்கப்படி செய்கின்றனர். அவைகளில், சங்கு ஊதுதல், மேளம் கொட்டுதல், இறந்தவர் உடலை மலர் மாலைகளால் மரியாதை செலுத்துதல், இறுதி ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடித்தல் போன்றவைகளை செய்கின்றனர். இதைத் தவிர, இறந்தவரின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் போது, அவர் உடலை அலங்கரித்த மலர் மாலைகள் மற்றும் உதிரிப் பூக்களை, ஊர்வலம் செல்லும் சாலையில் போட்டுக் கொண்டு செல்வர்.சாலையில் போடப்படும் மலர்கள், சில நேரங்களில், தெருவில் செல்வோரின் மீதும் விழ நேரிடுவதை பார்க்கிறோம். ஆனால், அண்மையில் நான் பார்த்த காட்சி, எனக்கு வித்தியாசமாக இருந்ததோடு, நாகரிகமாகவும், மற்றவர்களும் பின்பற்றத் தக்க வகையில் அமைந்திருந்தது. நான் பார்த்த அந்த நீத்தார் ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தோர், மலர்களையும், மலர்மாலைகளையும் வீதியில் தூவிக் கொண்டு சென்றனர். பின்னாலேயே, ஒருவர், ஒரு கூடையை வைத்துக் கொண்டு, அவற்றை அள்ளி, அதில் போட்டுக் கொண்டே வந்தார். இதனால், தெரு எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.அவரிடத்தில் விசாரித்ததில், அவர் அவற்றை, இடுகாட்டில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டு விடுவதாக கூறினார். இப்படி ஒரு சவ ஊர்வலமா என்று அதிசயமாக பார்த்தேன். மற்றவர்களும் இந்த முறையை பின்பற்றலாமே!— எஸ்.ராமசாமி, பம்மல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !