உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

மேலோட்டமாக விசாரிக்காதீர்!சகோதரியின் மகள் நிச்சயத்தின் போது, மாப்பிளைக்கு, பிரேஸ்லெட், செயின், மோதிரம் எல்லாம் சேர்த்து, 15 பவுனுக்கு போட்டு, மரியாதை செய்தோம். இரவு பணி முடிந்து வரும்போது, திருடர்கள் இருவர் வழி மறித்து, நகை, பணத்தை பறித்து விட்டதாக, சகோதரி மகளின் வருங்கால மாமியார் போன் செய்தார். அத்தானும், அக்காவும் பதறியடித்து, அவர்கள் வீட்டுக்கு ஓடினர். போலீசில் புகார் அளிக்கலாம் என்றால், 'திருமணம் நெருங்கும் நேரம், போலீஸ், கோர்ட் என, மன உளைச்சல் அதிகமாகும். அதனால் தான் யோசிக்கிறோம்...' என்றனர், மாப்பிள்ளை வீட்டினர். 'நீங்கள் போட்ட நகை என்பதால் தான் மிகவும் வருத்தமாக உள்ளது...' என்றார், மாப்பிள்ளை. 'இரவு நேர பணியின்போது, இருசக்கர வாகனத்தில் தனியாக செல்லும் ஒருவர் கண்டிப்பாக நகை போட்டு செல்ல வாய்ப்பே இல்லை. எங்கோ இடிக்கிறது...' என்று, வருங்கால கணவனை, சகோதரி மகள் விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். 'நகை தான் முக்கியமா, நான் தப்பித்தேன் என்று சந்தோஷபட மாட்டாயா...' என்று கோபமாக பேசியுள்ளார். அதன்பின், தனியார், 'டிடெக்டிவ் ஏஜென்சி' மூலம், மாப்பிள்ளையை பற்றி விசாரித்ததில், அவருக்கு, இரவு நேர வேலை கிடையாது. அது மட்டுமல்ல, 'ஆன்லைனில்' ரம்மி விளையாடும் பழக்கம் உள்ளது. ஏற்கனவே அதில், 18 லட்சம் ரூபாய் இழந்ததோடு, தான் வைத்திருந்த காரையும் ரம்மி விளையாட விற்று விட்டார் என, மாப்பிள்ளையின் சொரூபத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். அத்துடன், திருமண பேச்சை முறித்துக் கொண்டோம். லட்சத்தில் சம்பாதிக்கும் மருமகன், சொந்த வீடு மட்டும் இருந்தால் போதும் என்று மேலோட்டமாக விசாரிக்காதீர். அதற்கும் மேலாக, குடும்பத்தை சீரழிக்கும் துஷ்ட பழக்கங்கள் உள்ளனவா என, தீர விசாரித்து, உங்கள் வீட்டு இளவரசிகளுக்கு, சிறந்த இளவரசனை தேர்வு செய்யுங்கள் பெற்றோர்களே!- ஜி. சதீஷ்குமார், சென்னை.மொபைல் போனில், 'ஸ்டேட்டஸ்' வைப்போரே...சமீபத்தில், என் நண்பர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 50 சவரன் நகைகள் கொள்ளை போயிருந்தன. போலீஸ் சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்த பின், நாம் ஊருக்கு சுற்றுலா போனது வெளியில் எப்படி தெரிந்தது என யோசித்தார், நண்பர்.அவரது, 10 வயது மகள் சுற்றுலா போன புகைப்படங்களை, தன் அப்பாவின் மொபைல் போனில், 'ஸ்டேட்டஸ்' ஆக, 'வாட்ஸ் ஆப்'பில் பதிவு செய்திருந்தது பின்னர் தெரிந்தது. அவரின் வீட்டில், சில மாதங்களுக்கு முன் கட்டட வேலை பார்த்த ஒருவரிடம், நண்பரின் மொபைல் நம்பரும், 'வாட்ஸ் ஆப்' எண்ணும் இருந்திருக்கிறது. 'ஸ்டேட்டசில்' இருந்த பதிவுகளை பார்த்து, கொள்ளையடித்தது கொத்தனார் என, தெரிய வந்தது.மொபைல் போனில், குடும்பத்துடன் ஊருக்கு செல்வதை, 'ஸ்டேட்டஸ்' ஆக வைத்து, உங்கள் வீட்டிலும் இதுபோல் நடக்க வழி செய்து விடாதீர்கள்!- ஜி. செல்லத்துரை, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !