உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

மனைவியிடம், 'ஈகோ' பார்க்காதீர்கள்!நண்பரை விட அதிகம் படித்தவர், அவரது மனைவி. சரளமாக ஆங்கிலத்தில் பேசக்கூடிய, திறமைசாலி. இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும், மனைவி விருப்பப்பட்டும், 'ஈகோ' பிரச்னையால் வேலைக்கு அனுப்பாமல் முடக்கி வைத்திருந்தார், நண்பர்.தனியார் நிறுவனத்தில், கடை நிலை ஊழியராக பணிபுரியும் நண்பரின் வருமானத்தில் தான், குடும்பம் நடத்த வேண்டிய சூழல். ஒருநாள் பணி முடிந்து திரும்பும் போது, நண்பரின் இரு சக்கர வாகனத்தின் முன் பக்க டயர் வெடித்து, நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். கை, கால் உடைந்து, தலையில் பலத்த காயங்களுடன், படுத்த படுக்கையானார்.சேமிப்பு பணம் மற்றும் நகைகளை விற்றும் போதாமல், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி, நண்பரை காப்பாற்றினார், அவரது மனைவி.முன்பு போல் பணியாற்ற, நண்பரின் உடல்நிலை ஒத்துழைக்காததால், அவர் பணிபுரிந்த நிறுவனத்தில், விருப்ப ஓய்வு கொடுத்து விட்டனர்.தற்சமயம் வேலைக்கு சென்று, குடும்பத்தை காப்பாற்றி வருகிறார், நண்பரின் மனைவி.மனைவியின் வருமானத்தில் வாழ்வதாக, மறுபடியும் கணவருக்கு, 'ஈகோ' வந்துவிட கூடாது என்பதற்காக, அவருக்கு, பெட்டிக் கடை வைத்து கொடுத்திருக்கிறார்.கணவன்மார்களே... இப்போதைய சூழல், எப்போது வேண்டுமானாலும் தலைகீழாக மாறும். மனைவியின் பங்களிப்பு தேவை என்பதை உணர்ந்து, அவர்களை வீட்டிற்குள்ளேயே முடக்காமல், வேலைக்கு செல்ல அனுமதியுங்கள். 'ஈகோ' விட்டொழித்து, மரியாதையாக நடத்துங்கள்.மலர்மணி, திருச்செங்கோடு, நாமக்கல்.வெளிப்படையான பேச்சு!நெருங்கிய நண்பரின் மகனுக்கு, பெண் பார்க்க சென்றோம். பெண் வீட்டார், நன்கு உபசரித்தனர். 'எங்க பொண்ணு, மாநிறம் தான். ஆனா, நல்ல முறையில் வளர்த்திருக்கிறோம். பிடித்தால் பாருங்க, இல்லைன்னா, எங்க உறவுக்காரங்க பெண்ணின் ஜாதகங்களையும் வாங்கித் தருகிறோம். பொண்ணுங்க, நல்ல வேலையிலும், அழகாகவும் இருப்பாங்க.'மேலும், மாப்பிள்ளை நல்லவராக இருப்பதால், நம் சொந்தத்துல யாருக்காவது நடக்கட்டுமேன்னு தான் இதை சொல்றேன்...' என்றார், பெண்ணின் அம்மா.அடுத்தவர்கள் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் இன்றைய சூழலில், பெண்ணின் அம்மா வெளிப்படையாக பேசியது, நண்பருக்கும், மற்றவர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.'அம்மாவை போல பெண்ணும் நல்ல மனதோடு தான் இருப்பார்...' என்று கூறி, அந்த பெண்ணையே திருமணம் செய்து, இப்போது நன்றாகவும் இருக்கின்றனர்.அடுத்தவர்களுக்கு நல்லது செய்ய நினைத்தால், நமக்கு நல்லதே நடக்கும் என்பதை புரிய வைத்தது, இந்நிகழ்வு.எம். சிவகுருநாதன், சென்னை.மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!எங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார அம்மாவிடம், 'தீபாவளி வருது. வீட்டை சுத்தம் செய்யணும். எப்ப செய்யலாம்...' என்றேன். 'நான் மட்டும் வரட்டுமா; இல்லை என், 'டீமை' அழைச்சுகிட்டு வரட்டுமா? எங்க வீட்டுக்கு பக்கத்துல மூன்று பேர் இருக்காங்க. வீட்டை சுத்தப்படுத்தணும்ன்னு யாராவது கேட்டா, ஒண்ணா போயி நாங்க சுத்தம் பண்ணி தருவோம். 'ஒருவர், பாத்ரூம் மற்றும் டைல்ஸ் கறையெல்லாம் சுத்தம் பண்ணுவாங்க. இரண்டாமவர், துருப்பிடித்த இரும்பு, ஜன்னல் கம்பி எல்லாம் சுத்தம் பண்ணி, பெயின்ட் அடிச்சு தருவாங்க. மூன்றாம் நபர், மர சாமான்களை சுத்தம் பண்ணி, வார்னிஷ் அடிப்பார். சமையலறை எண்ணெய் பிசுக்கு, பாத்திரம் எல்லாம், நான் சுத்தம் பண்ணி தருவேன்.'எங்க வேலையை பார்த்துட்டு அதுக்கான கூலியை குடுங்க. எங்க, 'டீமோட' வேலையை பார்த்துட்டு, உங்க சொந்தக்காரங்க, நண்பர்களுக்கு சொல்லுங்கம்மா...' என்றார். என் வீட்டை சுத்தப்படுத்த, அந்த குழுவினரை அழைத்தேன்.காலை முதல், இரவு வரை, அவரவர் வேலையை, மிக கச்சிதமாக, நேர்த்தியாக முடித்தனர். வீட்டிலிருந்த பொருட்களும், வீடும் அந்த நான்கு பெண்களின் கைவண்ணத்தில் பளிச்சென இருந்தது. அவர்கள் கேட்ட கூலியை விட அதிகமாகவே கொடுத்து, அடுத்த, 'ஆர்டரை'யும் வாங்கி கொடுத்தேன். வேலையை திறம்பட செய்த பெண்களை மனதார பாராட்டினேன்.ம.வசந்தி, திண்டிவனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !