வேலை இல்லாப் பட்டதாரிணி!
காவ்யா வந்து சென்றதில் இருந்து, சுமதி மிகவும் குழம்பி போயிருந்தாள். 'ஏசி' அறையில் அமர்ந்திருந்த போதிலும், அவள் இதயம் யோசனையின் பிடியில், சூடாக இருந்தது.காலிங் பெல் ஓசை கேட்டு, கதவைத் திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி. வீட்டு வேலைகளின் பிடியில் இருந்த சுமதி, பள்ளித் தோழி காவ்யா வந்து நிற்பாள் என்பதை கனவிலும் நினைக்கவில்லை.'ஏய்... காவ்யா... எப்படி இருக்கே...' என்று ஆனந்த கூச்சலிட்டவள், 'வா வா... உன்னை பார்த்து எத்தனை வருஷமாச்சு...' என்று கூறியபடி வீட்டுக்குள் அழைத்துச் சென்றவள், 'ஆமா...என் வீட்டை எப்படி கண்டுபிடிச்சே?' என்று கேட்டாள்.'நம்ம கவிதா தான் உன் அட்ரச கொடுத்தா. ஒரு நாள் அவ வீட்டுக்கு போயிருந்தேன்... உன் வீடு இங்க இருக்குன்னு சொன்னா...'என்றாள்.'என்னை இவ்வளவு தூரம் தேடி வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்குடி. உன்னை பார்த்த சந்தோஷத்துல என்ன பேசுறதுன்னே தெரியல. சரி... உன்னைப் பற்றிச் சொல்லு...' என்றவள், பிரிட்ஜை திறந்து இரண்டு குளிர் பானங்களை எடுத்து, ஒன்றை காவ்யா கையில் கொடுத்து, மற்றொன்றை தான் எடுத்துக் கொண்டாள்.'கணவர், சாப்ட்வேர் இன்ஜினியர்; நானும், அதே பீல்டு தான். எனக்கு ரெண்டு பசங்க. ஒருத்தன் ஒன்பதாவதும், இன்னொருத்தன் ஏழாவதும் படிக்கறாங்க. சாலிகிராமத்துல இருக்கோம்; ஒரு வேலையா இங்கே வந்தேன். அப்படியே ரொம்ப நாளா பார்க்கணும்ன்னு நினைச்சுட்டு இருந்த உன்னையும் பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன். உன்னைப் பத்தி சொல்லு... உன் கணவர் என்ன செய்றார்... எத்தனை பிள்ளைகள்...' என்று கேட்டாள் காவ்யா.'என் கணவரும், ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் தான். ரெண்டு பசங்க; பெரியவன் ஏழாவதும், சின்னவன் ஐஞ்சாவதும் படிக்கறாங்க...''அதுசரி... பேங்க் ஆபிசரா இருந்த நீ, வேலையை விட்டுட்டன்னு கவிதா சொன்னாளே... உண்மையா?''ஆமாம்...''என்ன மடத்தனம்டி; ஏன் வேலையை விட்டே...''இதுல என்னடி மடத்தனம் இருக்கு... குழந்தைகள கவனிச்சுக்கணும்ன்னு தான் வேலைய விட்டேன்...' என்றாள் சுமதி.'அதுக்காக, பேங்க் ஆபீஸர் வேலையை விடலாமாடி. இப்பப்பாரு... உன் புடவை எல்லாம் சாதம், சாம்பார். சமையற்கட்டிலிருந்து நேரா வர்றே போல இருக்கு. முழு நேர சமையல்காரியா ஆயிட்டியேடி. வீட்டு வேலைக்காரியா இருக்கவா படிச்சே... நாலு காசு சம்பாதிச்சு கவுரவமா இருந்த நீ, இப்ப உன் கைச் செலவுக்கு கூட கணவனை எதிர்பார்த்து நிற்கற நிலைமைக்கு வந்துட்டியேடி...' என்றாள்.அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, சுமதியின் மாமியார் கோவிலில் இருந்து வர, காவ்யாவை, மாமியாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் சுமதி.'குடிக்க ஏதாவது கொடுத்தியாம்மா. சாப்பிட்டுப் போகச் சொல்லேன். நான் ஸ்லோகம் சொல்லணும்; நீங்க பேசிட்டு இருங்க...' சொல்லி, பூஜை அறையில் நுழைந்தாள் மாமியார்.'ஏண்டி, சொந்த வீட்டில வேலை செஞ்சா வேலைக்காரியா...' என்று கேட்டாள் சுமதி.'அப்படி இல்லடி... நேரம் கிடைச்சா, நானும் தான் சமைக்கறேன். அது தப்பில்லடி; வேலையை விட்டதுதான் தப்பு. வேலை பார்த்தா கையில காசு இருக்கும், நாம நினைச்சத வாங்கலாம், நம்ம இஷ்டத்துக்கு செலவு செய்யலாம். எல்லாத்துக்கும் மேலா, ஒரு சுதந்திரம்... அதுவும் இல்லாம உன் மாமியார் வீட்ல தானே இருக்காங்க... பசங்கள பாத்துக்க மாட்டாங்களா... எனக்கு மாமியார், மாமனார் யாரும் இல்ல; எல்லாரும் எப்பவோ போய் சேர்ந்தாச்சு. என் பசங்க ஸ்கூல்லருந்து வந்ததும், தனியா தான் இருப்பாங்க. நான் என்ன வேலைக்குப் போகலையா... திரும்பவும் அந்த மாதிரி வேலை, உனக்கு கிடைக்குமா... போடி போ, வத்த குழம்பும், வடாமும் பொரி, பயித்தியக்காரி...' என்ற காவ்யா, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, கிளம்பிப் போனாள்.குழம்பிய மனதுடன் அமர்ந்திருந்தவளுக்கு, பக்கத்து வீட்டு மாமி, தன் மாமியாரிடம் அங்கலாய்ப்பாய் பேசுவது காதில் விழுந்தது.''உங்களுக்குக்கென்ன... மருமக வீட்டில இருக்கா, அதனால, தினமும் கோவிலுக்குப் போக முடியுது. எங்க வீட்டுல என் பையனும், மருமகளும் வேலைக்கும், பேரன், பேத்தி ஸ்கூலுக்கும் போயிடறாங்க.... அவங்க போனதும் வீட்டப் பார்த்தா... ஒரு போர்க்களம் மாதிரி போட்டது போட்டபடி கிடக்கும். எல்லாத்தையும் ஒழுங்கு செய்து, துடைச்சு சுத்தப்படுத்தி, துணியெல்லாம் காயப்போட்டு நிமிர்ந்தா, மணி பதினொண்ணு ஆயிடறது. அப்புறம் கோவிலாவது, குளமாவது. மருமக வீட்டுல இருக்கற அன்னிக்குத்தான் அதையெல்லாம் நினைச்சுப் பார்க்க முடியும்,'' என்று பெருமூச்சு விட்டாள் பக்கத்து வீட்டு மாமி.''நீங்க சொல்றது சரிதான் மாமி. சுமதி வேலைக்குப் போனா, உங்கள மாதிரிதான் நானும் எல்லா வேலைகளையும் பாக்கணும். அந்த விஷயத்துல, நான் கொடுத்து வைச்சவ. அவர் போனப்புறம் தினம் கோவிலுக்குப் போறது மனசுக்கு ஆறுதலா இருக்கு,'' என்றார்.மணி, 3:00‑—டூவீலரை எடுத்து, பள்ளி நோக்கி சென்றாள் சுமதி. பள்ளியின் முன் காத்திருந்த போது, எதிரே, பள்ளியில் இருந்து, 'அம்மா' என்று ஆசையாய் அழைத்தபடி பிள்ளைகள் ஓடிவர, அவர்களை இழுத்து அணைத்துக் கொண்டாள். வழி நெடுக, பிள்ளைகள் தங்கள் வகுப்பில் நடந்த சம்பவங்களை ஆர்வத்துடன் கூறிக்கொண்டு வந்தனர்.களைந்து போட்ட அவர்கள் சீருடையை துவைக்கப் போட்டு, ஷூவை ஸ்டாண்டில் வைத்து, தட்டில் 'ஸ்னாக்ஸ்'சை வைத்து நீட்டினாள். அவர்கள் அதைக் கொறித்துக் கொண்டே, தங்கள் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகளை விவரித்தனர்.''அம்மா... என் பிரண்ட் செஸ் கோச்சிங் போறான். என்னையும் சேர்த்து விடறியா?'' என்று கேட்டான் மூத்தவன்.''ஆமாம்மா எனக்கும் செஸ் கத்துக்கணும்ன்னு ஆசையா இருக்கு; என்னையும் சேர்த்து விடும்மா,'' என்று வழி மொழிந்தான் இளையவன்.''அதுக்கென்ன சேர்த்து விட்டாப் போச்சு,''என்றாள்.இரவு, குழந்தைகள் உறங்கச் சென்று விட, மாமியார் ஹாலில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார். படுக்கை அறையில் செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்த கணவன் மாதவனைப் பார்த்து, ''தூங்கலியா நீங்க,'' என்றாள். ''ஏன்... என்ன விஷயம்?'' என்று கேட்டான்.காலையில், அவள் தோழி காவ்யா வந்ததைச் சொல்லி, முழு விஷயத்தையும் சொல்லி முடித்தாள். பொறுமையாகக் கேட்ட மாதவன், ''நீ என்ன நினைக்கறே...'' என்றான்.''எனக்கு எது சரின்னு தெரியலைங்க. ஒரே குழப்பமா இருக்கு. இதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?'' என்றாள்.''நீதான் வேலையை விடற முடிவை எடுத்தே. வேலையை விட்டுடறேன்னு சொன்னபோது, எனக்கு கூட அது சரியா தோணல. ஆனா, உன் முடிவுக்கு எதிரா பேச வேண்டாம்ன்னு தான் ஒண்ணும் சொல்லல.''ஆனா, இப்ப நினைச்சுப் பாக்கறபோது, நான் காலையில ஆபீஸ் கிளம்ப டூவீலரைக் கிளப்பற அந்த வினாடியிலேயிருந்து, வீட்டை முழுவதும் மறந்துடறேன். மறுபடியும் சாயங்காலம் வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கறபோது தான், வீட்டைப் பத்தி நினைக்கறேன். என்னால, அந்த அளவுக்கு வீட்டை மறந்து, வேலையில கவனம் செலுத்த முடியுதுன்னா அதுக்கு ஒரே காரணம், நீ வீட்டுல இருக்கறது தான். எல்லா பொறுப்புகளையும் நீயே கவனிச்சுப்பேங்கற ஒரே எண்ணம் தான். நீ வேலைக்குப் போயிட்டு இருந்தபோது, ஸ்கூல் விட்டு வர்ற பிள்ளைங்க பத்தியும், மத்த வெளிவேலைகளை பத்தியும் கவலையா இருக்கும். அம்மா வயசானவங்க, ஓரளவுக்கு மேல அவங்க உதவிய எதிர்பார்க்க முடியது.''இப்ப, மளிகை சாமான், காய்கறி வாங்கறதுல இருந்து, எல்.ஐ.சி., பாலிசி கட்டறது வரை நீயே பாத்துக்கறே. அம்மாவும் வயசான காலத்துல நிம்மதியா கோவிலுக்குப் போறாங்க; வாழ்க்கை ரொம்ப திருப்தியா இருக்குன்னு சந்தோஷப்படறாங்க; அவங்க வயசுக்கு ஏற்ற ஓய்வு கிடைக்குது.''வீட்டுல, ஒரு பதற்றம் இல்லாத இன்பம் இருக்கு. அந்த இன்பத்தை, நிம்மதியை சம்பாதிச்சுக் கொடுக்கறது நீ. அந்த சம்பாத்தியம் நீ வேலைக்குப் போய் கொண்டு வர, 50 ஆயிரம், 60 ஆயிரம் ரூபாயை விட, பல மடங்கு உயர்ந்ததா நினைக்கறேன்,'' என்ற கணவனின் முகத்தில், நிம்மதியைக் கண்டாள் சுமதி.அந்த வீட்டின், பதற்றம் இல்லாத இனிய நிம்மதிக்கு காரணம், இரவின் அமைதியில் அவளுக்கு தெளிவாக புரிந்தது; மனநிறைவோடு தூங்கச் சென்றாள்.எஸ்.வி.ராமன்