அணு ஆயுத போர் மூண்டால்...
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காக, பிப்ரவரி 24, 2022ல், அந்த நாட்டின் மீது தாக்குதலைத் துவங்கியது, ரஷ்யா.இரு நாட்டுக்கும் இடையிலான போர் துவங்கி, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள், 10 மாதங்கள் கடந்து விட்டன என்றாலும், அப்போர் நிறுத்தம் குறித்த எந்த அறிகுறியும் தென்படவில்லை.சமீபத்தில், உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்குப் பின், இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.இதற்கு பதிலடியாக, இந்தப் போரில் முதல் முறையாக ரஷ்யா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பயன்படுத்தி, உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்த நீண்டதுார ஏவுகணை, அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது. ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என, உக்ரைன் உளவுத்துறை அச்சம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும், தற்போதைய கொந்தளிப்பின் மீது பதிந்துள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால், மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. நம் அண்டை நாடான பாகிஸ்தானிடம், அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவும் அணுசக்தி கொண்ட நாடு தான். இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான சீனாவும், யாருக்கும் குறைந்ததல்ல. உலகப் போர் நடந்தால், இந்தப் பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் அழிந்துவிடுவர்.எப்படியிருந்தாலும், இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா, ஜப்பானின் இரண்டு நகரங்களின் மீது அணுகுண்டுகளை வீசிய பயங்கரத்தை மறப்பது கடினம்.அணுசக்தி யுத்தமானது, கதிர்வீச்சு, வெப்பம் மற்றும் வெடிப்பு போன்றவற்றின் விளைவுகளால் மரணத்தை உண்டாக்கும். உணவு விநியோகத்தை முற்றிலும் சீர்குலைக்கும்.வளிமண்டலம், கடல்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள 6.7 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) மக்கள், பட்டினியால் பாதிக்கப்படலாம்.அணுசக்தி போருக்குப் பிறகு, வளிமண்டலம் மற்றும் விவசாயத்தில் ஏற்படும் மோசமான விளைவுகளிலிருந்து தப்பித்து, மிகப்பெரிய பட்டினியைத் தவிர்க்கக் கூடிய நாடுகளாக அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, பராகுவே, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து மற்றும் ஓமன் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.போருக்குப் பின்னரும் இந்த நாடுகளில், தேவையான உணவுப் பொருட்கள் தொடர்ந்து கிடைக்கும்.உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள், கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் ரஷ்யாவின் பெரும்பகுதி, கடுமையான பஞ்சத்தை சந்திக்கும் என்கிறது, ஆய்வுகள்.இந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்கள், பட்டினியால் இறக்கலாம். உதாரணமாக, அமெரிக்காவில், 98 சதவீத மக்கள் அணுசக்தி யுத்தத்திற்குப் பிறகு, பட்டினியால் இறக்கலாம்.முழுமையான பட்டினியை எதிர்கொள்ளாத சில பகுதிகள் உள்ளன. ஆனால், அவற்றின் கலோரி நுகர்வு கடுமையாகக் குறையும். இந்தப் பகுதிகளில் உள்ளவர்கள், உடல் எடையைக் குறைத்து, அவர்களின் செயல்பாடுகள் முடங்கிவிடும். ஏனென்றால், அவர்களுக்குச் சாப்பிட போதுமான உணவு இருக்காது.இப்படி எதுவும் நிகழாதிருக்க, மூன்றாம் உலகப் போரை, உலகம் சந்திக்காதிருக்கப் பிரார்த்தனை செய்வோம்.தொகுப்பு : -மு.ஆதினி