விசேஷம் இது வித்தியாசம்: அடி விழப்போகுது... ஆண்களே ஜாக்கிரதை!
மார்ச் 3 - ஹோலிஆ ண்களை, பெண்கள் விரட்டி, கம்பால் அடிக்கும் திருவிழா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உத்தரபிரதேச மாநிலத்தில் நடக்கும் இந்த விழாவுக்கு, 'லத்மர் ஹோலி' என்று பெயர். ஆண்கள் அப்படி என்ன வம்பு செய்தனர். அவர்களை, பெண்கள் ஏன் கம்பால் அடிக்க வேண்டும்? இதற்கு, ஒரு சுவையான கதை உள்ளது... உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள, பர்சானா கிராமத்தில் வசித்தவள், ராதா. இவள், கிருஷ்ணரின் தீவிர பக்தை. கிருஷ்ணரின் மனைவியான, ருக்மிணியின் அம்சம் தான், ராதா என்றும் கூறுவதுண்டு. அவளது கையில் தாமரை மற்றும் சங்கு சின்னங்கள் இருந்தன. மகாலட்சுமி, தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என, விரும்பினான், விதர்ப்ப நாட்டு மன்னன், பீஷ்மகன். கிருஷ்ணர் அவதாரம் செய்த போது, மகாலட்சுமியும் பூமியில், பீஷ்மகனின் மகளாக, ருக்மிணி என்ற பெயரில் அவதரித்தாள். கிருஷ்ணரின் மாமா கம்சனின் உத்தரவுப்படி, அந்நாட்டு குழந்தைகளை, கம்சனின் சகோதரியான, ஹோலிகா என்ற அரக்கி கடத்திச் சென்றாள். அவ்வாறு கடத்தப்பட்டவர்களில், ருக்மிணியும் ஒருத்தி. ஆனால், அந்தக்குழந்தை அதிக கனமாக இருந்ததால், ஹோலிகாவால் அவளை நீண்ட துாரம் சுமந்து கொண்டு நடக்க முடியவில்லை. பர்சானா என்ற இடத்தில் விட்டு விட்டாள். அனாதையாக நின்ற குழந்தையை, விருஷபானு என்பவர் எடுத்து, ராதா என்று பெயரிட்டு வளர்த்தார். அவள் தீவிர, கிருஷ்ண பக்தையானாள். ராதையை காண, தன் நண்பர்களுடன் பர்சானாவுக்கு அடிக்கடி வருவார், கிருஷ்ணர். ராதாவையும் மற்ற கோபிகைகளையும், அவர்கள் வம்புக்கு இழுப்பர். அப்போது, கிருஷ்ணரை எல்லா கோபிகைகளும், 'லத்மர்' என்னும் லத்தி கொண்டும், மூங்கில் கழிகள் கொண்டும் அடிக்க விரட்டுவர்; அலறியபடியே ஓடுவார், கிருஷ்ணர். அது மட்டுமல்லாமல், மூலிகை கலந்த வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வாரி இறைப்பர். இந்த நிகழ்ச்சியின் நினைவாக, பர்சானா ராதா ராணி கோவிலில், 16 நாட்கள் விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவை, ரங்க பஞ்சமி என்பர். கம்சனின் சகோதரி, ஹோலிகாவை, கிருஷ்ணர் இந்த சமயத்தில் கொன்றார். எனவே, அவளது பெயரால், ஹோலி என்று அழைக்கப்பட்டது. இன்னொரு சுவையான செய்தியும் உண்டு. சிவப்பாக அழகாக இருப்பாள், ராதா. கிருஷ்ணரின் நிறம் நமக்கு தெரியும். 'அவள் மட்டும் நல்ல நிறமாக இருக்கிறாள். நான் கருப்பு. அவளையும் என்னைப் போல் ஆக்கு...' என்று, கிருஷ்ணர், தன் தாய், யசோதையிடம் சொன்னாராம். இதை அவள், ராதாவிடம் சொல்லி, 'என் மகனுக்காக நீயும் வண்ணப் பொடி பூசி நிறம் மாறேன்...' என்றாளாம். இந்த நிகழ்வின் அடிப்படையிலும், ஹோலியன்று வண்ணப்பொடி துாவும் வழக்கம் வந்ததாகச் சொல்வர். மதுராவில் இருந்து, 42 கி.மீ., துாரத்திலுள்ள, பர்சானா சென்று அடிக்கவும், அடி வாங்கவும் தயாராவோமா! - தி. செல்லப்பா