பெங்களூரு: பெங்களூரு, எலஹங்காவின் விநாயகா நகரில் வசித்தவர் பிரஜ்வல், 13. இவர் தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை மனோகர், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அதிகமான சொத்துகள் வைத்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் பாஸ்கர் ரெட்டி, 25, என்பவர் வசிக்கிறார். ஆந்திராவை சேர்ந்த இவர், 'எல்.என்.டி., பைனான்ஸ்' நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அருகில் வசிப்பதால், பிரஜ்வலின் குடும்பத்தினர், பாஸ்கர் ரெட்டிக்கு அறிமுகமாகினர். அவ்வப்போது பிரஜ்வலின் வீட்டுக்கு வருவார். இவரது தந்தையிடம், நிறைய பணம் இருக்கும் என கருதி, அதை கொள்ளையடிக்க, பாஸ்கர் ரெட்டி திட்டம் தீட்டினார். இதற்காக பிரஜ்வலை கடத்த முற்பட்டார். விநாயகர் சதுர்த்தி கொண்டாடி, சிலையை கரைக்க ஊர்வலம் செல்லு ம் போது, வெடிப்பதற்காக பட்டாசுகள் வாங்க வேண்டும் என, பொய் சொல்லி பக்கத்து வீட்டு சிறுவன் பிரஜ்வலை, செப்டம்பர் 16ம் தேதியன்று, மாலை 6:30 மணியளவில் தன் காரில் அழைத்து சென்றார். சிறுவனை கடத்தும் சதிக்கு உதவ, தன் நண்பர் ஏடுகுண்டல ரெட்டியை, பாஸ்கர் ரெட்டி அழைத்து வந்தார். அன்றிரவு பிரஜ்வலின் தந்தை மனோகருக்கு, போன் செய்து பணத்துடன் வர வேண்டும். பணம் கொடுக்காவிட்டால், மகனை கொலை செய்வதாக மிரட்டினார். அப்போது மனோகர், பாஸ்கர் ரெட்டியின் தந்தையிடம் விஷயத்தை கூறினார். அவரும் பாஸ்கர் ரெட்டிக்கு போன் செய்து, சிறுவனை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி எச்சரித்தார். இதற்கிடையே மனோகர், சிக்கஜாலா போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். போலீசார், கடத்தல்காரர்களை தேடி வந்தனர். தன் திட்டம் தோற்றதால், போலீசாரிடம் சிக்குவோம் என, பாஸ்கர் ரெட்டி அஞ்சினார். குடிபோதையில் இருந்த அவர், சிறுவன் பிரஜ்வலின் கை, கால்களை கட்டி, வாயில் பிளாஸ்டர் ஒட்டி தாக்கினார். சிமென்ட் கல்லால் சிறுவனின் முகத்தை தாக்கி கொலை செய்தார். உடலை கார் டிக்கியில் வைத்து கொண்டு, ஆந்திராவுக்கு தப்பியோட முயற்சித்தார். பல்லாரி சாலையின், ஹுனசேமாரனஹள்ளியின் சர்வீஸ் சாலையில் காரை குறுக்கும், நெடுக்குமாக ஓட்டி சென்று, தொடர் விபத்தை ஏற்படுத்தினார். பாஸ்கர் ரெட்டியை அப்பகுதியினர் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரது காரை சோதித்த போது, டிக்கியில் சிறுவனின் உடலை கண்டுபிடித்தனர். போலீசார் விசாரித்த போது, 'அந்த சிறுவன் காருக்கு குறுக்கே வந்து, காரில் அடிபட்டு இறந்துவிட்டான். என் நண்பரின் ஆலோசனைப்படி, உடலை ஆந்திராவுக்கு கொண்டு செல்கிறேன்' என, பாஸ்கர் ரெட்டி நாடகமாடினார். போலீசார் சந்தேகத்துடன், பாஸ்கர் ரெட்டியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவரது மொபைல் போனை பரிசீலித்த போது, சிறுவனை கடத்தி கொலை செய்திருப்பது தெரிந்தது. எனவே பாஸ்கர் ரெட்டியை போலீசார் கைது செய்தனர். அவரது நண்பர் தப்பியோடிவிட்டார். அவரை தேடுகின்றனர்.