| ADDED : ஜூலை 14, 2024 12:57 AM
புதுடில்லி:நம் நாட்டில் 'கோடீஸ்வர வரி'யை அறிமுகப்படுத்த மத்திய அரசை, காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மேலும், கோடீஸ்வர வரியை அறிமுகப்படுத்த பிரேசில் உள்ளிட்ட உலக நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக காங்., செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துஉள்ளதாவது:உலகம் முழுவதும், கோடீஸ்வரர்கள் தங்களின் நியாயமான வரிகளை செலுத்த வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தாண்டுக்கான 'ஜி - 20' கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள பிரேசில், கோடீஸ்வரர்களிடமிருந்து இரண்டு சதவீத சொத்து வரி வசூலிக்க முன்மொழிந்துள்ளது. இதனை பிரான்ஸ், ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களிடமிருந்து, இரண்டு சதவீத சொத்து வரி வசூலிக்கப்படும்பட்சத்தில், ஆண்டு ஒன்றுக்கு 1.50 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும். இதனைக் கொண்டு பள்ளிகள், மருத்துவமனைகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட, நம் நாட்டின் எதிர்காலத்துக்கு தேவையான பல துறைகளில் முதலீடு செய்யலாம். இதுகுறித்து பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய விரும்புகிறோம். இந்த மாத இறுதியில் பிரேசிலில் நடைபெறவுள்ள கூட்டத்தில், இதுகுறித்து விவாதிக்கப்படும் போது, இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.கோடீஸ்வரர்களிடம் இருந்து, 2% சொத்து வரி வசூலிக்கப்படும் பட்சத்தில், ஆண்டு ஒன்றுக்கு 1.50 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும்