சென்னை:சென்னை, அடையாறில் உள்ள சி.எல்.ஆர்.ஐ., எனும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில், தோல் தொழில்நுட்பம், பொருட்கள் மற்றும் விற்பனை சம்பந்தமான இரு நாள் கண்காட்சி, நேற்று துவங்கியது.துவக்க விழாவில், சி.எல்.ஆர்.ஐ., இயக்குனர் ஸ்ரீராம் பேசியதாவது:இந்த நிறுவனத்தில், 37 ஆய்வகங்கள் உள்ளன. இங்கு கண்டறிப்படும் ஆய்வுகள் மக்களிடம் சேர வேண்டும். ஆனால், நாங்கள் மேற்கொள்ளும் ஆய்வுகள், அவ்வாறு சேர்வதில்லை. தோல் தொழிற்சாலைகளுக்கு, இந்நிறுவனத்திற்குள் என்ன நடக்கிறது என்பது தெரிவதில்லை. இந்த இடர்பாடுகளை களைந்தால், எங்கள் ஆய்வுகள் வாயிலாக, புது தொழில்நுட்பத்தை தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்ல முடியும்.இந்தியாவில் இருந்து பதப்படுத்தப்பட்ட தோல்கள் 16,600 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தோல் பொருட்கள், 43,160 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகிறது.உலகில், தோலுக் காக எந்த விலங்கும் கொல்லப் படுவது கிடையாது. அதேநேரம், மாமிச தேவை இருக்கும் வரை தோல்கள் கிடைத்து கொண்டுதான் இருக்கும்.அதை பயன்படுத்தாவிட்டால் கழிவாக மாறிவிடும். இதனால் ஏற்படும் மாசு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
1.50 லட்சம் வேலைவாய்ப்பு
''தமிழகத்தில் அடுத்த இரு ஆண்டுகளில், காலணி தொழில் துறையில், 1.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன,'' என, மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் கே.முரளி தெரிவித்தார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:சென்னை கிண்டியில் செயல்படும் காலணி பயிற்சி நிறுவனத்தில், காலணி உற்பத்தி, வடிவமைப்பு தொடர்பாக ஏழு வகை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு, 50,000 - 60,000 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதில், காலணியின் பங்கு, 80 சதவீதம். காலணி உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தோல் அல்லாத காலணி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உலகின் முன்னணி நான்கு நிறுவனங்கள், தமிழகத்தில், 3,500 கோடி முதலீடு செய்ய, தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. அடுத்த இரு ஆண்டுகளில், தமிழகத்தில் காலணி துறையில், 1.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் திறனுக்காக, மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில், நவீன தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது, 'ஜூனியர் டெக்னிஷீயன்' சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆறு மாத பயிற்சிக்கான சேர்க்கை வரும், 29ம் தேதி முதல் துவங்குகிறது. இதுதவிர, தொழில் நிறுவனங்களில் ஒரு மாதம் தொழில் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சிக்கு, எஸ்.எசி., - எஸ்.டி., மாணவர்களுக்கு கட்டணம் முழுதும் இலவசம். பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். வயது, 18 முதல், 35க்குள் இருக்க வேண்டும். விடுதி வசதியும் உள்ளது. பயிற்சி தொடர்பான விபரங் களை, 9677943633., 96779 43733 மொபைல் போன் எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.