உள்ளூர் செய்திகள்

படிப்பதற்கு வயது தடையில்லை: இக்னோவின் புதிய படிப்பு

தொடர்ந்து பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி வரும் பணிச்சூழலில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட துறையில் தலைமைப் பதவிவகிப்பவரும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தலைமை ஆசிரியர் பணிகளில் இருப்பவரும் காலத்துக்கேற்ற அறிவு வளர்ச்சி பெறுவது அத்தியாவசியமானதாக உள்ளது. ஆனால் வயது ஒரு தடையாக இவர்களால் மனதளவில் உணரப்படுகிறது. இந்த உணர்வு தேவையற்ற ஒன்று என்றும், இவர்களுக்கே உரிய பிரத்யேக கல்வியைத்தரவும் இந்திரா காந்தி பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது. இந்தியாவின் கல்வித்துறையில் செயற்கரிய பல சாதனைகளை தொடர்ந்து செய்து வரும் இக்னோ வரும் ஜனவரி மாதம் முதல் ஹையர் எஜுகேஷன் மேனேஜ்மென்ட் என்ற உலகத்தரம் வாய்ந்த படிப்புகளை இவர்களுக்காகவே அறிமுகம் செய்கிறது. இப்படிப்பு முதுநிலை டிப்ளமோ படிப்பாக வழங்கப்ட உள்ளது. முதுநிலைப் பயிற்சியாளர் அல்லது கல்விப்பணியாளர்களாக கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோர், மேலாளர்கள், உதவி மேலாளர்கள் பொது மேலாளர், விற்பனை / மார்கெட்டிங்/ ரீடெயில் மேலாளர்கள், சமூகப் பணியாளர்கள், விரிவுரையாளர்கள், கல்லூரி / பள்ளி முதல்வர்கள் ஆகிய பணிகளில் உள்ளவர்களை மையமாக வைத்து இப்பாடம் அறிமுகம் செய்யப்படுகிறது. வியாபார சூழலில் இருக்கும் கெடுபிடிகளைத் தாங்கும் விதத்தில் பாடமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, இப்படிப்புகளைப் படிப்பவர்கள் தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்தமுடியும் என்று கூறப்படுகிறது. இத்துறையிலேயே சான்றிதழ், டிப்ளமோ மற்றும் முதுநிலைப் படிப்புகளை வழங்கவும் இக்னோ தற்போது முயற்சிகள் எடுத்து வருகிறது. நேஷனல் அசெஸ்மென்ட் அண்டு அக்ரெடிஷன் கவுன்சில் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையிலேயே இப்படிப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தொலைநிலைக்கல்வி முறையில் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களும் வழக்கமான படிப்புகளையே தந்துவரும் நிலையில், ஒவ்வொரு துறையிலும் தேவைக்கேற்ற பல்வேறுவிதமான படிப்புகளைத் தருவதில் இக்னோ முன்னிலை வகிக்கிறது. எல்லைகளைத் தாண்டி எங்கும், எவருக்கும், பலருக்கும் கல்விதரும் இக்னோவின் பயணத்தில் இப்படிப்புகள் மற்றுமொரு மைல்கல்லாக இருக்கும் என்று அப்பல்கலைக்கழக அதிகாரபூர்வ வட்டங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. கல்வித்துறை சார்ந்த மேலாளர் தனது பணி நிமித்தம் செய்யவேண்டிய நடவடிக்கைகளை இப்படிப்பின் பாடப்பகுதிகள் உள்ளடக்கியிருக்கும் என்றும் முற்றிலும் நவீனமயமான முறைகளில் பாடங்கள் காலத்துக்கேற்ற முறையில் இருக்கும் என்றும் தெரிகிறது. நிர்வாகவியல் கோட்பாடுகளின் தகவல் களஞ்சியமாக இப்படிப்பின் மாடியூல்கள் தயார் செய்யப்படும் என்றும் இதனைப்படிக்கும் இன்றைய நிர்வாகப் பொறுப்பாளர்கள் அதிக பயன்பெறுவார்கள் என்றும் இப்பல்கலைக்கழகம் கூறுகிறது. இவை தவிர உலகளாவிய மற்றும் இந்தியக்கல்வி, தனியார் மற்றும் அரசுத்துறை முயற்சிகள், போட்டி, ஒத்துழைப்பு போன்ற பல்வேறு அம்சங்களிலும் பாடப்பகுதிகள் அமையவிருப்பதால் இதனைப் பயில்பவர்கள் உறுதியான பலன்களைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வயதைக்காரணம் காட்டி நிறுவனப் பொறுப்பாளர்கள் ஒதுங்குவதும், அர்த்தமுள்ள நிர்வாகப் பொறுப் பாளர்களை உருவாக்குவதும் இப்படிப்பின் மூலமாக சாத்தியம் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !