| ADDED : ஜூலை 20, 2024 05:02 AM
அரியாங்குப்பம்: நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில், ஆயிரக்கணக் கான பக்தர்கள் உடலில் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத் தினர்.கடலுார் சாலை நைனார் மண்டபத்தில், நாகமுத்து மாரியம்மன் கோவிலில், 41ம் ஆண்டு செடல் திருவிழா கடந்த 11ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அதனை தொடர்ந்து, 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.கடந்த 15ம் தேதி பால்குடம் ஊர்வலம், 17ம் தேதி இடிதாங்கி அங்காளம்மன் கோவிலில் இருந்து பெண் எடுத்து வந்த 108 முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு முருகன் - வள்ளி தெய்வானை வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான, செடல் உற்சவம் நேற்று நடந்தது. இதில் காலை 6:00 மணியளவில் சாலையோர பகுதியில் பக்தர்கள் அடுப்புகள் அமைத்து பொங்கல் வைத்தனர். தொடர்ந்து, காலையில் இருந்து மாலை வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து, மாலை 5:30 மணியவில், பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், சிலர் பக்தர்கள் கார், வேன், மினிபஸ், லாரி உள்ளிட்ட வானங்களை கொக்கி போட்டு அலகு குத்தி இழுத்து நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை வழிப்பட்டனர்.இவ்விழாவில், சம்பத் எம்.எல்.ஏ., உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். செடல் திருவிழா நடந்ததையொட்டி, கடலுார் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்கள் நேற்று மதியம் 3:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. மக்கள் கூட்டம் குறைந்த பின்னர் இரவு 9:00 மணிக்கு வாகனங்கள் செல்வதற்கு போலீசார் அனுமதி அளித்தனர்.போக்குவரத்து மற்றும் மக்கள் கூட்ட நெரிசலை கிழக்கு பகுதி போக்குவரத்து போலீசார் மற்றும் முதலியார்பேட்டை போலீசார் ஒழுங்குப்படுத்தி, பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். திருவிழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.