மும்பை: ''உலக கோப்பை தொடருக்கு நான்கு 'ஸ்பின்னர்'கள் அவசியம். இதன் காரணத்தை இப்போது சொல்ல மாட்டேன்,'' என ரோகித் சர்மா தெரிவித்தார்.அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடர் (ஜூன் 1-29) நடக்க உள்ளது. இதற்கான இந்திய உத்தேச அணியில், மணிக்கட்டு 'ஸ்பின்னர்'கள் குல்தீப், சகால், ஆல்-ரவுண்டர்/இடது கை 'ஸ்பின்னர்'கள் ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல் என நான்கு பேர் இடம் பிடித்தது வியப்பு அளித்தது. ஐ.பி.எல்., தொடர் அடிப்படையில் ஷிவம் துவேவுக்கு வாய்ப்பு அளித்ததும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியது:நான்கு 'ஸ்பின்னர்'கள் கண்டிப்பாக வேண்டுமென நான் தான் வலியுறுத்தினேன். இதன் காரணத்தை இப்போது சொல்ல மாட்டேன். இருவர் 'ஆல்-ரவுண்டர்', மற்ற இருவர் தாக்குதல் பாணியில் பந்துவீசக்கூடியவர்கள். இதனால் எதிரணியின் பலத்தை அறிந்து, வீரர்களை தேர்வு செய்யலாம். சமீப காலமாக வாஷிங்டன் சுந்தருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. சர்வதேச 'டி-20' போட்டிகளில் நீண்ட காலமாக அஷ்வின் விளையாடவில்லை. அக்சர் படேல் நல்ல 'பார்மில்' இருந்ததால், வாய்ப்பு பெற்றார். வெஸ்ட் இண்டீசில் ஏற்கனவே விளையாடிய அனுபவம் உண்டு. இங்கு காலை 10 மணிக்கே போட்டி துவங்கும். 'ஸ்பின்னர்'கள் தேர்வில் நிறைய தொழில்நுட்ப விஷயங்கள் அடங்கி உள்ளன. இதன் விபரங்களை விரிவாக குறிப்பிட விரும்பவில்லை.
'மிடில் ஆர்டர்' முக்கியம்
ஐ.பி.எல்., தொடரில் வீரர்களின் செயல்பாடு ஒவ்வொரு நாளும் மாறும். தனக்கு சாதகமான நாளில் யார் வேண்டுமானாலும் சதம் அல்லது 5 விக்கெட் வீழ்த்தலாம். இத்தொடருக்கு முன்பே 70-80 சதவீத 'உலக' அணியை முடிவு செய்துவிட்டேன். ஒரு சிலருக்கு மட்டுமே ஐ.பி.எல்., செயல்பாடு கணக்கில் கொள்ளப்பட்டது. இந்திய அணியின் 'டாப்-ஆர்டர்' சிறப்பாக உள்ளது. 'மிடில் ஆர்டரில்' அதிரடியாக ஆடக்கூடிய வீரர் தேவைப்பட்டார். இங்கு தான் ஐ.பி.எல்., அடிப்படையில் ஒருவரை (ஷிவம் துபே) தேர்வு செய்தோம். இவர் இந்திய அணிக்காகவும் சில போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 'ஆல்-ரவுண்டர்'களான ஹர்திக் பாண்ட்யா, துபே தங்களது பணியை சிறப்பாக செய்வர் என நம்புகிறேன். இந்திய அணியின் விளையாடும் லெவன் இப்படி தான் இருக்கும் என எவ்வித உத்தரவாதமும் அளிக்க முடியாது. இவ்வாறு ரோகித் கூறினார்.
பாண்ட்யாவுக்கு மாற்று யார்...
'பார்ம்' இல்லாத ஹர்திக் பாண்ட்யாவை உலக கோப்பை தொடரின் துணைக் கேப்டனாக நியமித்தது பற்றி விமர்சனம் எழுந்தது. இது குறித்து தேர்வுக் குழு தலைவர் அகார்கர் கூறுகையில்,''மும்பை அணிக்காக அனைத்து போட்டிகளிலும் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்றுள்ளார். உலக கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாதம் உள்ளது. துணைக் கேப்டன் பதவி பற்றி அதிகம் விவாதிக்கவில்லை. உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், பாண்ட்யாவை போல் செயல்படக் கூடிய மாற்று வீரர் யாரும் இல்லை. காயத்திற்கு பின் மீண்டு வந்துள்ளார். சிறப்பாக பந்துவீசுகிறார். கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பக்கபலமாக இருப்பார்.
'மிடில் ஆர்டரில்' அதிரடியாக பேட் செய்யக்கூடிய வீரரை தேடினோம். ராகுல் 'டாப் ஆர்டரில்' பேட் செய்பவர் என்பதால், வாய்ப்பு கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சன் பின் வரிசையில் கைகொடுப்பார். ரிஷாப் 5வது இடத்தில் வருவார். 15 பேர் பட்டியலில் ரிங்கு சிங், சுப்மன் கில்லை சேர்க்க முடியாதது கடின முடிவு. இவர்கள் தரப்பில் தவறு இல்லை,''என்றார்.
கோலி எப்படி
ஐ.பி.எல்., தொடரில் கோலி 500 ரன் (சராசரி 71.42, ஸ்டிரைக் ரேட் 147.49) குவித்துள்ளார். இருப்பினும் 'மிடில் ஓவரில்' 'ஸ்பின்னர்'களுக்கு எதிராக இவரது 'ஸ்டிரைக் ரேட்' குறைவாக உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. இது குறித்து அகார்கர் கூறுகையில்,''கோலி நல்ல 'பார்மில்' உள்ளார். இவரது 'ஸ்டிரைக் ரேட்' பற்றி விவாதிக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட், ஐ.பி.எல்., தொடருக்கு வித்தியாசம் உண்டு. அனுபவம் அவசியம். அணியில் தேவையான 'பவர்' உள்ளது,''என்றார்.