| ADDED : ஏப் 28, 2024 06:38 AM
சென்னை : சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு : சென்னை நகரில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச செயலகம், டி.என்.இ.பி., -- ஜி.சி.சி., காவல் துறை உட்பட துறைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை வாகன எண் தகட்டிலும், வேறு பகுதியிலும் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை பலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, வாகனங்களில் உள்ள ஸ்டிக்கர்கள் மற்றும் துறை சார்ந்த அடையாளங்களை சரி செய்து கொள்ள மே, 1ம் தேதி வரை சென்னை போக்குவரத்து காவல்துறை கால அவகாசம் வழங்குகிறது. அதன் பிறகும், இவ்வித மீறலில் ஈடுபடுபவோர் மீது, மே 2ம் தேதி முதல் எம்.வி.,சட்டம், 1988 -ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.