| ADDED : மே 08, 2024 12:16 AM
மாதவரம், கொளத்துார் ரெட்டேரி சந்திப்பில் உள்ள குமரன் மருத்துவமனையில், பெரம்பலுாரைச் சேர்ந்த சந்திரசேகர், 37, என்பவர், கடந்த பிப்ரவரி மாதம் முதல் கார் ஓட்டுனராக வேலை செய்து வந்தார்.கொரட்டூரில் வசிக்கும் மருத்துவமனை உரிமையாளர் ஆறுமுகசாமியிடம் வழங்க, மருத்துவமனை நிர்வாக அதிகாரி காமாட்சி, 42, கடந்த மார்ச் 7ம் தேதி, 2.50 லட்சம் ரூபாயை சந்திரசேகரிடம் கொடுத்து அனுப்பினார். மேலும், சென்று வருவதற்கு 'ஆக்டிவா' ரக, இரு சக்கர வாகனத்தையும் கொடுத்தார்.ஆனால், சந்திரசேகர் திரும்பி வரவில்லை. பணத்தையும் மருத்துவமனை உரிமையாளரிடம் கொடுக்கவில்லை என்பது தெரியவந்தது.மூன்று நாட்கள் அவர் குறித்து எந்த விபரமும் கிடைக்காத நிலையில், 11ம் தேதி மாதவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதந்து விசாரித்து வந்தனர்.இந்த நிலையில் சந்திரசேகர் கொடைக்கானலில் உள்ள ஹோட்டலில் கார் ஓட்டுனராக பணி புரிவது தெரியவந்தது. இரு தினங்களுக்கு முன் அங்கு சென்ற மாதவரம் போலீசார், அவரை கைது செய்து, நேற்று முன் தினம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.