ஆவடி, திருமுல்லைவாயிலைச் சேர்ந்தவர் ஜெய்பாலாஜி, 45. இவர், கடந்தாண்டு ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார்.அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:நான் அம்பத்துாரில், மெட் புரோ பிரைவேட் லிமி., என்ற பெயரில் தனியார் மருத்துவ காப்பீடு நிறுவனம் நடத்தி வருகிறேன். என் நிறுவனத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த உமர், 35. திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 37, அயப்பாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார், 37, மற்றும் பருத்திப்பட்டைச் சேர்ந்த ராஜேந்திரன், 33, ஆகியோர் பணியாற்றினர்.நான்கு பேரும், என் நிறுவனத்தில் பணியாற்றிய போது, வாடிக்கையாளர்கள் குறித்த தரவுகளை மின்னஞ்சல் மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக திருடி, ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் எம்.கேர் ப்ரோ பிரைவேட் லிமி., என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர்.எனவே, அவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என, அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதுகுறித்து விசாரித்த ஆவடி மத்திய இணைய வழி குற்றப்பிரிவு போலீசார், இருவரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், தரவுகளை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.இதையடுத்து, ராஜேந்திரனை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள உமர் மற்றும் செந்தில்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.