உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாழ்வில் குரு பக்தி முக்கியம்: விஷாகா ஹரி

வாழ்வில் குரு பக்தி முக்கியம்: விஷாகா ஹரி

மார்கழி மாதத்தில் கச்சேரிகள் போல், ஹரிகதைகளும், உபன்யாசங்களும் பிரபலமானவை. அந்தவகையில், பாரத் கலாசாரின் தி.நகர் அரங்கில் விஷாகா ஹரியின் 'ஹரிகதா' சிறப்பாக நடந்தது.'குரு மஹிமா - 24 குரு' என்ற தலைப்பில், கிருஷ்ணா அஷ்டகத்தில் இருந்து 'வசுதேவ சுதம்' என்ற ஸ்லோகம் விருத்தமாகவும் 'அகியா ஹரி தர்ஷன் கே ப்யாஸி' என்ற அபங்க் பாடியும், குரு வணக்கத்தோடு துவக்கினார்.துவாபர யுகத்தின் இறுதியில், கிருஷ்ண பகவான் தன் மந்திரியான உத்பவருக்கு உபதேசம் செய்த படலம் உத்பவ கீதம். அதில் கூறப்படும் 24 குரு பற்றிய விரிவான விளக்கமே, ஹரிகதையின் மூலப்பொருளாகும்.யாதவகுல தோன்றலில் இருந்து கதையை துவக்கி, தியாகராஜரின் 'ஸாமஜவரகமன' க்ருதியின் சரணத்தில் 'யாதவகுல முரளி' எங்கிற வரியுடன் கோர்த்தது அற்புதமாக இருந்தது.'ப்ரித்வி வாயுர் ஆகாசம்' என துவங்கும் ஸ்லோகம் இயற்கையிலிருந்து பூமி, காற்று, ஆகாயம், நீர் என துவங்கி எட்டுக்கால் பூச்சி வரை, வாழ்க்கை நெறிமுறைகளை கற்றுத்தரும் 24 குரு பற்றி விளக்கிய விதம் பிரமிக்க வைத்தது.ஹரிகதை மட்டுமின்றி கர்நாடக இசையிலும் விஷாகா ஹரி வல்லுனராக இருப்பது, அவர் பாடும்போது நன்றாக வெளிபட்டது. குரு பக்தி எவ்வளவு முக்கியம் என்பதையும், குரு அருள் இருந்தால் சகல கஷ்டங்களும் நீங்கி நன்மை பெற முடியும் என்பதையும், மிக அற்புதமாக கூறினார்.ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் விளக்கம்கூறி அதற்கு ஏற்ற க்ருதிகளை பல ராகத்தில் ஒரு மாலை போல் கோர்த்து அளிப்பது, அவரது தனி பாணியாகும்.வயலினில் விட்டல் ரங்கன், மிருந்தங்கம் விஜய் நடேசன், கடம் சுகன்யா ராம்கோபால் ஆகியோரின் வாசிப்புக்கு அரங்கமே அதிர்ந்தது.இறுதியாக 'குரு மாதா குரு பிதா' க்ருதியை சிந்து பைரவி ராகம் மற்றும் மங்களம் பாடி நிறைவு செய்தார். அனைவரும் மகிழ்ச்சியுடன் வெளியேறினர்.-ஸ்ரீஜா, மாணவி,இந்திய இசை துறைசென்னை பல்கலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ